யோக சூத்திரம் - 1.6 - ஐந்து வித எண்ண ஓட்டங்கள்
प्रमाण विपर्यय विकल्प निद्रा स्मृतयः ॥६॥
pramāṇa viparyaya vikalpa nidrā smr̥tayaḥ ॥6॥
பிரமாணம், விபரீதம், விகல்பம் , நித்திரை, ஸ்மிரிதி
நமது எண்ண ஓட்டங்கள் (thought process ) பொதுவாக ஐந்து வித நிலைகளில் இருக்கிறது.
அவை, பிரமாணம், விபரீதம், விகல்பம் , நித்திரை மற்றும் ஸ்மிரிதி என்று கூறப் படுகிறது.
இவை என்ன என்று சிந்திப்போம்.
பிரமாணம் - நுண்ணறிவு. எதையும் ஆராய்ந்து அறியும் எண்ண ஓட்டம். கேள்விகள் கேட்டு, பரிசோதனைகள் செய்து அறியும் அறிவு.
இந்த பிரமாணம் மூன்று வகைப்படும். இதைப் பற்றி பின்னால் விரிவாக பார்க்கப் போகிறோம். இப்போதைக்கு , இதில் மூன்று வகை உண்டு என்று மட்டும் குறித்துக் கொள்வோம்.
அடுத்தது, விபரீதம். விபரீதம் என்றால் தவறானது. தவறாக புரிந்து கொள்வது. தவறாக அறிந்து கொள்வது. தவறாக நினைத்துக் கொள்வது.
மூன்றாவது, விகல்பம் அல்லது கற்பனை. இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணிக் கொள்வது. இருக்கும் ஒன்றை இல்லாததாகவும் எண்ணிக் கொள்வது.
நான்காவது, தூக்கம். நமக்குத் தெரிந்தது தான். இருந்தாலும், தூக்கத்திலும் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் என்கிறார் பதஞ்சலி.
ஐந்தாவது, ஞாபகம். நடந்தவற்றை எண்ணிப் பார்ப்பது.
நமது எண்ணங்கள் இந்த ஐந்தில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும்.
இந்த ஐந்தில், முதலாவதாகச் சொன்ன பிரமாணம், அதைத் தவிர மற்றவை எல்லாம் தவிர்க்க வேண்டியவை.
எப்படி தவிர்ப்பது ? அதற்கு என்ன வழி என்று யோக சாத்திரம் கூறுகிறது.
நமது எண்ண ஓட்டங்களை நாம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருந்தால் அது எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியும்.
பெரும்பாலான சமயங்களில் நாம் நமது எண்ண ஓட்டங்களை புரிந்து கொள்வது இல்லை.
கற்பனையை உண்மை என்று நினைக்கிறோம்.
இருப்பதை , இல்லை என்று எண்ணிக் கொள்கிறோம். இல்லாததை இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம்.
இப்படி தவறான எண்ணங்களால் பல துன்பங்களை சந்திக்கிறோம்.
அது மட்டும் அல்ல, இந்த தவறான எண்ணங்கள், உண்மையில் நாம் யார் என்பதை அறிய விடாமல் தடுக்கின்றன.
யோகத்தின் முக்கிய நோக்கமே , நாம் யார் என்றது அறிவதுதான். அந்த அறிவிற்கு இந்த தவறான எண்ணங்கள் ஒரு பெரிய தடை.
இந்த தடைகளை வென்று, நம்மை நாம் அறிய வழி செய்கிறது யோக சூத்திரம்.
மேலும் சிந்திப்போம்.
http://yogasutrasimplified.blogspot.in/2017/07/16.html
No comments:
Post a Comment