Thursday, July 20, 2017

யோக சூத்திரம் - 1.19 - இரண்டற கலத்தல்

யோக சூத்திரம் - 1.19 - இரண்டற கலத்தல் 



भवप्रत्ययो विदेहप्रकृतिलयानम् ॥१९॥

bhava-pratyayo videha-prakr̥ti-layānam ॥19॥

bhava = பாவம் குற்றம் என்ற தொனியில் வருவது அல்ல. பாவித்தல், நடன பாவம் என்று கூறுவோம் அல்லவா, அந்த பாவம். தமிழில் ஒரு பா தான் இருக்கிறது.  மனதில் கொள்ளுதல் . பாவித்துக் கொள்ளுதல்.

pratyayo = ஒரே சிந்தனை

videha = தேகம் என்றால் உடம்பு. விதேகம் என்றால் உடம்பு இல்லாத. (நாயகன் என்றால் தலைவன். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன் வி-நாயகன்)

prakr̥ti = ப்ர என்றால் உயர்ந்த, சிறந்த, பழமையான என்று அர்த்தம். (நாம் சாப்பிடுவது சாதம். இறைவனுக்கு படைப்பது ப்ர - சாதம்) க்ரிதி என்றால் உருவாக்குவது. (creation ). ப்ர + க்ரிதி என்றால் உருவாகும் ஆதி சக்தி. அல்லது இயற்கை சக்தி.

layānam = இலயனம். லயித்து இருப்பது. ஒன்றாக இருப்பது. கலந்து இருப்பது. இரண்டற கலந்து இருப்பது.

தேகத்தை கடந்து சிந்தித்தால் (பாவித்தால்), இந்த உலகம் அனைத்தும் ஒரே சக்தியால் ஆனது என்று புரியும். 

நான் முன்பே கூறியது போல, சமஸ்க்ரித சொற்களை மற்ற மொழிகளில் மாற்றுவது என்பது மிக மிக கடினமான செயல். அதிலும், தமிழில் கொண்டு வருவது இன்னும் சிக்கல் ஏன் என்றால், சமஸ்கிருத சொற்களை போலவே சில தமிழ் சொற்கள் உண்டு. ஆனால், இரண்டுக்கும் அர்த்தம் வேறு. தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு இது  ஒரு சிக்கல். ஒரு சமஸ்க்ரித சொல்லை கேட்டவுடன் , அது போன்ற தமிழ் சொல்லை நினைத்துக் கொள்கிறார்கள். அர்த்தம் மாறிப் போகிறது.  எனவே, அவசரப் படாமல் , சமஸ்க்ரித சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சரி, சூத்திரத்துக்கு வருவோம்.

சித்த விருத்தி நிரோதம் - சித்தத்தில் ஏற்படும் சலனங்களை நிறுத்துவது பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.

எண்ணங்கள் சிதறுவதற்கு என்ன காரணம் ? பலப் பல எண்ணங்கள் ஓயாமல் மனதில் அலை போல வந்து வந்து போவதற்கு என்ன காரணம் ?

நாம் வேறு , இந்த உலகம் வேறு என்று நினைப்பதால் (பாவித்துக் கொள்வதால்) இது நிகழ்கிறது.

ஒரு தளத்தில் இருந்து பார்த்தால் அது வேறு வேறாகத்தான் தெரியும். நாம் அந்தத் தளத்தில் தான் இருக்கிறோம்.

இன்னொரு தளத்திற்கு சென்றால், அந்த வேறுபாடு மறையும்.

அது என்ன தளம் ?

சாலையில் செல்லும் போது அதில் உள்ள மேடு பள்ளங்கள் தெரிகிறது. குண்டும் குழியும் தெரிகிறது. அதுவே, விமானத்தில் 35000 அடி உயரத்தில் பறப்பவனுக்கு சாலையின் மேடு பள்ளம் தெரியாது. அவனுக்கு மலையும் , பள்ளத்தாக்கும் தெரியும். அதுவே செயற்கை கோளில் இருந்து பார்த்தால் , இந்த  பூமி பூராவும் ஒரு அழகிய நீல பந்து போல தெரியும்.

எனவே, பார்க்கும் இடம் மாறினால், பார்க்கப் படும் பொருள்களில் உள்ள வேறுபாடுகள் மறையும் என்கிறது தெரிகிறது அல்லவா ?

அது போல, நாம் உடல் என்ற தளத்தில் இருந்து உலகை அணுகுகிறோம். உடல் என்று சொன்னால்  உடலும், அதன் ஐந்து புலன்களும், அதன் நினைவுகளும் எல்லாம் சேர்ந்தது.

நான் என்பது இந்த உடல் இல்லை என்று வைத்துப் பார்த்தால் ?

இந்த உலகம் அனைத்தும் ஒன்றே , ஒரே சக்தியால் ஆனது என்று புரியும்.

அது சரிதான், ஆனால், அது எப்படி ஒன்றாகும் ? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதே.

ஒரு கடைக்குப் போகிறோம். லட்டு ஒரு தட்டில் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கிறது. நமக்கு ஒரு கிலோ லட்டு வாங்க வேண்டும். கடைக்காரரிடம் "லட்டு நல்லா இருக்குமா "

"சாப்பிட்டு பாருங்கள் " என்று ஒரு சின்ன துண்டு லட்டை தருகிறார். நாமும் சுவைத்துப் பார்த்து விட்டு, "ம்ம்...நல்லா இருக்கு, ஒரு கிலோ போடுங்க" என்கிறோம்.

நாம் சுவைத்த துண்டும் , மற்ற லட்டுகளும் ஒரே மாதிரி இருக்குமா ? இதுவும் அதுவும் ஒன்று  என்று அறிவு சொல்கிறது அல்லவா ?

அது போல, நமக்குள் இருக்கும் சக்தியை நாம் அறிந்து கொண்டால், அதே சக்திதான் அனைத்திலும் இருக்கிறது என்று தெரியும்.

அனைத்து மக்களுக்குள்ளும் , விலங்குகள், செடி கொடிகள் அனைத்திலும் இருப்பது  ஒன்றுதான் தெரியும்.

டப்பா தான் வேறு. உள்ளிருக்கும் லட்டு எல்லாம் ஒன்றுதான், நாம் சுவைத்த அந்த லட்டுதான் எல்லா டப்பாவுக்குள்ளும் இருக்கிறது.

சரி, அனைத்துக்குள்ளும் இருப்பது ஒன்று தான் என்றே வைத்துக் கொள்வோம், அது எப்படி ஆசையை கட்டுப் படுத்த, சித்த சலனங்களை நிறுத்த உதவும் ?

மீண்டும் லட்டுக்கே வருவோம்.

ஒரு துண்டு சுவைத்துப் பார்த்தோம். வேண்டுமானால் ஒரு முழு லட்டும் சுவைத்துப் பார்க்கலாம். வாங்கிய ஒரு கிலோ லட்டும் சுவைத்து பார்க்க வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா ?

மாட்டார்கள்.

ஏன் ?

ஒன்றில் என்ன இருக்கிறதோ, அதே தான் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதால் ஒன்று போதும் என்று நிறுத்தி விடுகிறோம்.

இதே இன்னும் விரித்துப் பார்த்தால், எல்லா இனிப்பிலும் அதே சர்க்கரை, நெய், மாவு தான் என்று தெரிந்தவர்கள், ஒரு இனிப்பு பலகாரம் சாப்பிட்டால் எல்லாம் சாப்பிட்ட மாதிரிதான் என்று புரிந்து கொள்வார்கள்.

அதே போல, உடலைத் தாண்டி, அனைத்தும் ஒன்றுதான் என்று புரிந்து கொண்டால், ஆசை,  பொறாமை,கோபம், பயம் இதெல்லாம்  போகும்.

மனம் பர பரவென்று  அலையாது.

சலனமின்றி  இருக்கும்.அமைதி  பெறும்.

தெளிந்த, அமைதியான மனதில் ஆனந்தம் பெருகும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/119.html

No comments:

Post a Comment