Friday, July 14, 2017

யோக சூத்திரம் - 1.15 - வைராக்கியம் என்பது

யோக சூத்திரம் - 1.15 - வைராக்கியம் என்பது 


दृष्टानुश्रविकविषयवितृष्णस्य वशीकारसंज्णा वैराग्यम् ॥१५॥

dr̥ṣṭa-anuśravika-viṣaya-vitr̥ṣṇasya vaśīkāra-saṁjṇā vairāgyam ॥15॥

திருஷ்ட அனுசரவிக்க விஷய விதர்ஸனஸ்ய சம்ஜியான வைராக்கியம்

dr̥ṣṭa = திர்ஷ்ட = பார்வை, பார்த்தல்

anuśravika = அனுசரசவிக்க = கேட்டு அறிதல்

viṣaya = விஷய = விஷயங்களை

vitr̥ṣṇasya = வித்ருஸந்சய = பற்றற்று இருக்கிறானோ

vaśīkāra = நிதானம், சமநிலை

saṁjṇā = உள்ளுணர்வோடு

vairāgyam = அதுவே வைராக்கியம்

தான் அறிந்தும், மற்றவர்கள் சொல்லக் கேட்டும் விஷயங்களின் மேல் பற்றற்று அவைகளின் மேல் உள்ளுணர்வோடு சம நிலையில் இருப்பது வைராக்கியம் எனப்படும். 


பற்றறு இரு என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

பற்றை அறுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எங்கிருந்து வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

பற்று இரண்டு வகைகளில் வருகிறது.

ஒன்று , நமது சொந்த அனுபவத்தில் இருந்து

இன்னொன்று, மற்றவர்கள் சொல்லக் கேட்டு.

இதில், நமது சொந்த அனுபவத்தில் இருந்து வரும் பற்று மிக மிக குறைவு. மற்றவர்கள் சொல்லக் கேட்டு அதில் இருந்து வரும் பற்று மிக மிக அதிகம்.

இப்படி எல்லாம் செய்தால் , இந்த பிறவிக்குப் பின் சொர்கம் போகலாம், அங்கே அழகான பெண்கள் நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள், எப்போதும் பாட்டும், இசையும் இருக்கும் என்று சொன்னவுடன் , ஆசை வருகிறது. நாமும் சொர்கம் போனால் எப்படி இருக்கும் என்று மனம் கணக்குப் போட தொடங்கி விடுகிறது.

நாம் இதுவரை சொர்கம் போனது இல்லை. மற்றவர்கள் சொல்லக் கேட்டு வரும் ஆசை.

சில பேர் சொல்லலாம் , "எனக்கு அப்படி எல்லாம் ஒன்றும் ஆசை இல்லை " என்று.

அவர்களின் ஆசை வைகுந்தம் போக, நித்ய சூரிகளாக இருக்க, கைலாயம் போக, சிவ பூத கணங்களாக இருக்க , பரம பிதாவுக்கு அருகில் இருக்க என்று வேறு வித ஆசைகள் இருக்கும்.

ஆசை என்பது எல்லாம் ஒன்று தான். எதன் மேல் ஆசை என்பதில் தான் வேறுபாடே தவிர , எல்லோருக்கும் ஆசை இருக்கிறது.

தண்ணி அடிக்க வேண்டும் என்று விரும்புபவனுக்கும், நித்ய சூரிகளாக வேண்டும் என்று  விரும்புபவனுக்கு ஆசை இருக்கிறது. இதில் ஆசை என்பதில்தான் வேறுபாடு.

இதில் நல்ல ஆசை , கெட்ட ஆசை என்பதெல்லாம் கிடையாது.

சரி, ஆசையே இல்லாமல் இருக்க முடியுமா ? பற்றற்று இருப்பது சாத்தியமா ? சாத்தியம் என்றே வைத்துக் கொண்டாலும், அது தேவையா ? இறைவன் மேல் பற்று வைக்கக் கூடாதா என்றெல்லாம் கேள்வி வரும்.

பற்று வைப்பதால் என்ன நிகழ்கிறது ?

மனம் அதை பற்றிக் கொள்ளகிறது. அது கிடைக்கும் வரை அதையே நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை அடைய பல முயற்சிகளை செய்கிறது.  கிடைக்குமோ, கிடைக்காதோ என்று சந்தேகம் கொள்கிறது. கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற பயம் வருகிறது.

இதனால், மனதில் சதா சஞ்சலம நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மனதில் ஒரு ஆசை இருந்தாலே இவ்வளவு நிகழ்கிறது.

நம் மனதில் எத்தனை ஆசைகள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசையும் இத்தனை எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

பொருளில், உறவில், அலுவலகத்தில், வீட்டில், அண்டை அயலில், நண்பர்கள் மத்தியில், பிள்ளைகள் மூலம் என்று ஆயிரம் ஆயிரம் ஆசைகள்.

ஒவ்வொரு பற்றில் இருந்தும் கணக்கில் அடங்காத எண்ண அலைகள்.

இவ்வளவு எண்ண அலைகள் இருந்தால் எங்கிருந்து உண்மையை காண்பது ?

சித்த விருத்தி நிரோதம் எப்படி நிகழும் ?

நாம் வாழும் காலத்தில் இது இன்னும் சிக்கலாகிறது.

Watsapp , Facebook போன்ற சமூக வலை தளங்களில் ஒருவர் நான் இது வாங்கினேன், நான் பஇங்கே போனேன், நான் இன்னது சாப்பிட்டேன், நான் இந்த படம் பார்த்தேன் என்று சொன்னவுடன், நம் மனம் அவை அனைத்துக்கும் எங்க ஆர்மபித்து விடுகிறது.

இந்த தேவை, ஆசை, பற்று மற்றும் தேவை இல்லாமை, பற்றற்று இருப்பது என்ற இரண்டிற்கும் நடுவில் சம நிலையில் உள்ளுணர்வோடு இருப்பதே வைராக்கியம்.

உலகில் எவ்வளவோ இருக்கிறது. அனைத்தையும் நாம் அடைய முடியாது. அதற்காக ஒன்றுமே இல்லாமலும் இருக்க முடியாது.

இந்த இரண்டு எதிர் முனைகளுக்கு நடுவில் மனதை ஒரு சம நிலையில் அறிவு பூர்வமாக நிறுத்துவதே வைராக்கியம்.

பற்றறு இருப்பது என்பது ஆசையை அடக்குவது இல்லை. உள்ளே ஆசை பொங்கி பொங்கி வரும். ஆனால், வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பது அல்ல பற்றறு இருப்பது.

பற்றறு இருப்பது என்பது ஆசைகளில் இருந்து விடுபடுவது அல்ல. விடுபடுவது என்றால், முதலில் ஆசைப் படுபவது பின் அதில் இருந்து விடுபடுவது என்று ஆகும்.

முதலில் ஆசையே வராமல் இருப்பதுதான் பற்றறு இருப்பது.

பதஞ்சலியை பொறுத்த வரை, நீங்கள் எதில் பற்று வைக்கிறீர்கள், இதில் பற்று அற்று இருக்கிறீர்கள்  என்பதெல்லாம் ஒரு முக்கியமான விஷயம் அல்ல.

உங்கள் மனதைப் பாருங்கள். அதில் எவ்வளவு எண்ண அலைகள் ஓடுகின்றன.

கொஞ்சம் கொஞ்சமாக பற்றினை விட்டால், இந்த அலைகள் ஓய்ந்து மனம் அமைதி பெரும். தெளிந்த மனதில் தெளிந்த சிந்தனைகள் பிறக்கும்.

அலை ஓய்ந்து அமைதி பிறக்கும். அந்த அமைதியில் சத்தியத்தின் தரிசனம் கிட்டும்.

கிட்டட்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/115.html

No comments:

Post a Comment