Sunday, December 31, 2017

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 1

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 1


प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियाअत्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥

prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dr̥śyam ॥18॥

prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத

śīlaṁ = சில

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்

apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்

dr̥śyam = திரிஷ்யம், பார்வை, பார்க்கப் படுவது ॥18॥


வாழ்க்கையின் நோக்கம் என்ன ?

எதற்காக வாழ்கிறோம் ? இந்த வாழ்கைக்கு அர்த்தம் தான் என்ன ?

பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், திருமணம் முடித்தோம், பிள்ளைகளை பெற்றோம், அவற்றை வளர்த்தோம், வயதான பின் மறைந்தோம்....இவ்வளவுதானா...எதற்கு இத்தனை பாடு ?

நாம் பிறந்ததால் என்ன ஆகி விட்டது உலகுக்கு ? நாம் பிறக்காவிட்டால் என்ன குறைந்திருக்கும் ?

உலகில் எத்தனை தொல்லைகள், துன்பங்கள், பசி,பிணி, பட்டினி, திருட்டு, கொள்ளை, நோய் , விபத்து, சண்டை , சச்சரவு...இதெல்லாம் எதற்கு ?

இறைவன் உலகைப் படித்தான் என்றால் இத்தனை சிக்கல் எதற்கு ? இவை இல்லாமல்  உலகை படைக்க முடியாதா ? சரி அப்படியே படைத்து விட்டாலும், இந்த சிக்கல்களை ஒரு நொடியில் போக வைக்க முடியாதா கடவுளுக்கு ? பின் ஏன் இந்த போராட்டம் ?

துன்பமும், போராட்டமும், எதிர் நீச்சலுக்குமாகவே இருக்கிறது இந்த உலகு.

உலகை விடுங்கள். நமது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ? குறிக்கோள் ?

தெரியுமா நமக்கு ? வாழ்ந்து கொண்டிருக்கிறோமே தவிர, எதற்காக என்று தெரியுமா ?

இந்த கேள்விக்கு பலர் பலவிதமாக பதில் சொல்லலாம்...

வாழ்க்கை என்பது அனுபவிக்க, இறைவனை அடைய, முக்தி அடைய, வைகுண்டம் போக, கைலாசம் போக, மற்றவர்களுக்கு உதவி செய்ய, சாஸ்திரப் படி வாழ , ஞானம் பெற என்று எவ்வளவோ சொல்லலாம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும். சில பேர், அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போவோம். அவ்வளவுதான்....என்று இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

முதலில் கற்பனையானவற்றை ஒதுக்கி விடலாம் - சொர்கம், வைகுண்டம், கைலாசம், இறைவன் திருவடி அடைவது போன்றவை. அதை அடைய வேண்டும் என்று விரும்புவர்களுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது அவர்கள் அடைந்தார்களா என்று. முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அடைந்தார்களா இல்லையா என்று தெரியாது. எனவே அவற்றை விட்டு விடலாம்.

பதஞ்சலி ,  நாம் சரி பார்க்க முடியாத எதையும் சொல்ல மாட்டார். நம்பிக்கை என்பதெல்லாம் அவரிடம் கிடையாது. இதோ இருக்கிறது. நீயே சரி பார்த்துக் கொள் . ஒரு நம்பிக்கையும் தேவை இல்லை என்பது அவர் பாணி.

பின் பணம், செல்வாக்கு, ஞானம், பதவி, புகழ், பிறருக்கு உதவுவது போன்ற குறிக்கோளை எட்டிப் பிடிக்க முடியுமா ?  இவ்வளவு ஞானம் போதும், இவ்வளவு செல்வம் போதும், இவ்வளவு புகழ் தான் கணக்கு என்று ஏதாவது இருக்கிறதா ? எப்போது நமது குறிக்கோளை அடைந்து விட்டோம் என்று அறிந்து கொள்வது ? அப்படி ஒரு எல்லைக் கோடே இல்லை.  முடிவில்லாத ஒன்றை துரத்துவதில் அர்த்தம் இருக்கிறதா ? நாய் தன் வாலை பிடிக்க முயல்வது போல.

பின், என்னதான் வாழ்க்கைக்கு அர்த்தம் ? எது தான் குறிக்கோள் ?


சிந்திப்போம்

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/218-1.html

Friday, December 29, 2017

யோக சூத்திரம் - 2.17 - துன்பத்தின் காரணம் , தொடர்பு

யோக சூத்திரம் - 2.17 - துன்பத்தின் காரணம் , தொடர்பு


द्रष्टृदृश्ययोः संयोगो हेयहेतुः ॥१७॥

draṣṭr̥-dr̥śyayoḥ saṁyogo heyahetuḥ ॥17॥


draṣṭr̥ = பார்ப்பவன்

dr̥śyaḥ = பார்க்கப் படுவது

saṁyoga = தொடர்பு, ஐக்கியம்,

heya = தவிர்க்கப் பட வேண்டியது

hetuḥ = காரணம்

அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் இரண்டுக்கும் உள்ள தொடர்பு தவிர்க்கப் பட கூடியது. துன்பங்களுக்கு அதுவும் காரணம்.

துன்பங்களை, கஷ்டங்களை எப்படி தவிர்ப்பது என்று ஆரம்பித்தவுடன், "ஆஹா, இதோ நமது எல்லா துன்பங்களுக்கும் ஒரு விடை கிடைத்து விட்டது " என்று எண்ணக் கூடாது.

துன்பங்கள் பலவகை. உடல் துன்பம், உள்ளைத் துன்பம், பணத்தினால் வரும் துன்பம், சட்டச் சிக்கல், உறவுகளால் வரும் துன்பம், என்று பலப் பல துன்பங்கள் உள்ளன. அனைத்துக்கும் ஒரே ஒரு பதில் இருக்க முடியாது.


துன்பங்களுக்கு உள்ள காரணங்களை தொகுத்து, இந்த மாதிரி துன்பங்களுக்கு, இது வழி என்று காண்பிக்கிறார். நாம் தான் கண்டு பிடிக்க வேண்டும்  நமது துன்பம் எப்படி பட்ட துன்பம் என்று. கண்டு கொண்ட பின், அதை தீர்க்க   யோக சாத்திரம் என்ன சொல்கிறது என்று அறிந்து அதன் படி செயல் பட வேண்டும்.


நமது உழைப்பும், கொஞ்சம் அறிவும் வேண்டும். முழுச் சோம்பேறியாக இருந்து கொண்டு  எனது துன்பங்களுக்கு யோக சாத்திரம் சரியான தீர்வை சொல்லவில்லை , என்ன பெரிய யோக சாத்திரம் என்று அலுத்துக் கொள்வதில் அர்த்தம் இல்லை.

இது யோக சாத்திரத்துக்கு மட்டும் அல்ல. எதைப் படித்தாலும் , இது பொருந்தும். கீதை, இராமாயணம், குறள் என்று எல்லாவற்றிற்கும் இது பொருந்தும். 1330 குறளையும் படித்து விட்டேன். என் துன்பம் குறைந்து பாடில்லை என்றால் எப்படி குறையும் ? சுந்தர காண்டம் படித்தால் துன்பம் குறையும் என்று சொல்வார்கள்.  படித்தேன் , ஒன்றும் குறையவில்லை என்று சொல்பவர்களை என்ன சொல்வது. படித்தால் மட்டும் போதாது, அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று அறிந்து செயல் படவேண்டும்.

சில பேர் படித்துக் கொண்டே இருப்பார்கள். செயல் இருக்காது. கேட்டால், இது எல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள்.

சரி இப்போது சூத்திரத்துக்கு வருவோம்.

நமக்கு வரும் துன்பங்களுக்கு பெரிய காரணம் நாம் எதை அனுபவிக்கிறோமோ, அதை நாமாகவே நாம் பாவித்துக் கொள்வதால் வரும் துன்பம்.

அது என்ன அனுபவிப்பது, பாவிப்பது ?

சொல்கிறேன்.

நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ?

இந்தியன், இந்து/கிறித்துவன் /முஸ்லீம், தென் இந்தியன்/ வட இந்தியன்,  செட்டியார்/முதலியார்/பெந்த கோஸ்தே என்று ஏதாவது சொல்லுவோம் அல்லவா ?


நீங்கள் இந்தியான ?

நீங்கள் இந்தியாவில் வசிக்கிறீர்கள். அவ்வளவு தான். இந்தியாவின் நிலம், நீர், காற்று, அது தரும் வசதிகளை அனுபவிக்கிறீர்கள். இந்த அனுபவிக்கப் படும் பொருள் சிறிது சிறிதாக உங்களோடு கலந்து விடுகிறது. "நான் இந்தியன்" என்று ஆகி விடுகிறது. வெளியில் இருக்கும் இந்தியாவோடு நீங்கள் ஒன்றாக ஆகி விடுகிறீர்கள்.

நீங்கள் இந்துவா ?

இந்து மத கோட்பாடுகளை கடை பிடிக்கிறீர்கள். சாலை விதிகளை கடை பிடிப்பது போல. வருமான வரி விதிகளை கடை பிடிப்பது போல. சாலை விதிகளை கடை பிடிப்பதால் யாராவது "நான் ஒரு சாலை" என்று சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா ? அப்படியே சொன்னாலும் நீங்கள் என்ன அப்படி சொல்பவரை பற்றி என்ன நினைப்பீர்கள் ?

ஆனால், ஒரு மத கோட்பாடுகளை கடை பிடிப்பவர்கள் அந்த மதமாகாவே மாறி விடுகிறார். நான் இந்து, முஸ்லீம், கிறித்துவன்  என்று ஆகி விடுகிறார்.

சாலை விதிகள் அடங்கிய புத்தகத்தை ஒருவர் எரித்தால் உங்களுக்கு கோபம் வராது. ஆனால், உங்கள் முன்னால் ஒருவர் கீதையையோ, குரானையோ, பைபிளையோ எரித்தால் உங்களுக்கு இரத்தம் கொதிக்கிறது.

ஏன் ? எதை நீங்கள் அனுபவிக்கிறீர்களோ, அதையே நீங்களாக நீங்கள் கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

சரி. அப்படி நினைத்துக் கொண்டால் என்ன கெட்டு பொய் விட்டது ? அதனால் என்ன துன்பம் வந்து விடும் ?

நான் ஒரு இந்துவாகவோ, இந்தியனாகவோ இருப்பதால் என்ன சிக்கல் ?

நீங்கள் இந்தியன் என்றால், பாக்கிஸ்தான் காரன் மேல் கோபம் வருகிறது. அவனோடு சண்டை போட இராணுவத்தை வளர்கிறீர்கள்.

நீங்கள் இந்து என்றால், முஸ்லீம் மேல் வெறுப்பு வருகிறது. உங்களுக்கு வரமால் இருக்கலாம். ஒரு முஸ்லிமுக்கு உங்கள் மேல் வெறுப்பு வரலாம் அல்லவா , நீங்கள் இந்துவாக இருப்பதால் ?

இப்படி எதையெல்லாம் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்களோ, அது அல்லாத மற்றவற்றில் இருந்து நீங்கள் அந்நியப் பட்டு போகிறீர்கள். அவற்றோடு முரண் படுகிறீர்கள். அவற்றோடு சண்டை போட தயாராக இருக்கிறீர்கள்.

இது ஒரு நிலை.

அடுத்தது, நீங்கள் செய்யும் வேலை. நான் ஒரு டாக்டர், என்ஜினீயர் என்று வேலையோடு நீங்கள் உங்களை ஐக்கிய படுத்திக் கொள்கிறீர்கள்.

இதையும் அடுத்த நிலை, பொருள்களோடு உங்களை தொடர்பு கொடுத்திக் கொண்டு துன்பப் படுவது.

உதாரணமாக, பேனா என்பது எழுதுவதற்கு ஒரு கருவி. அவ்வளவு தான். அது தொலைந்து போனால், இன்னொன்று வாங்கிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு  "நான் ஆசை ஆசையாக வைத்திருந்த பேனா தொலைந்து போய் விட்டது " என்று வருந்துபவர்களை காணலாம்.

பேனா என்பது ஒரு உதாரணம் தான்.

நாய் குட்டி, செருப்பு, செல் போன், வீடு, நிலம், என்று உங்கள் பிடிமானம் இதன் மீதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அடுத்த படி,

உறவுகள். பிள்ளை, கணவன், மனைவி, என்று. அவர்களோடு உங்களை நீங்கள் ஐக்கியப் படுத்திக் கே கொள்வதால் எவ்வளவு துயரம் ?

சரி, அதுக்காக எல்லாரையும் விட்டு விட்டு சாமியாராகப் போக முடியுமா ?

வேண்டாம்,  உறவுகளை இராசியுங்கள். அனுபவியுங்கள். ஆனால், அவைதான் நான், அவை இல்லாமல் நான் இல்லை, அவர்கள் இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை என்று அவற்றை உங்களுக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டு வருந்தாதீர்கள்.

சற்று சிரமம் தான்.


முடியாவிட்டால் ஒன்று பண்ணுங்கள். உறவுகள் பிரியும் போது வரும் துன்பத்திற்கு காரணம் உறவினர் அல்ல, நீங்கள் அல்ல, நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட மாய சங்கிலி என்று அறிந்து கொள்ளுங்கள் போதும். துன்பம் குறையும்.

அடுத்தது, இவை எல்லாவற்றையும் விட நுண்ணியமானது, இந்த உடல். உங்கள் உடலை நீங்களாகவே நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் இந்த உடலா ? இந்த உடல் தான் நீங்கள் என்றால், ஐந்து வயதில் இருந்த உடலும், இப்போது உள்ள உடலும் ஒன்றா ?

அதை விடுங்கள்.


நீங்கள் உங்கள் உடல் சம்பந்தமாக பேசும் பேச்சுகளை பாருங்கள். நீங்களே ஒத்துக் கொள்வீர்கள், நீங்கள் என்பது இந்த உடல் இல்லை என்று.

உங்களுக்கு தலை வலி என்று வைத்துக் கொள்வோம். மருத்துவரிடம் போகிறீர்கள்.

என்ன சொல்வீர்கள் ?

டாக்டர் எனக்கு தலை வலிக்கிறது என்றுதானே சொல்வீர்கள் ?

எனக்கு தலை வலிக்கிறது என்றால் அதில் உள்ள எனக்கு என்பது யார் ?

என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இரண்டு நாள் விடுப்பு வேண்டும் என்று   கேட்கிறோம். என் உடல் என்றால், நான் வேறு , என் உடல் வேறு என்று தெரிகிறது அல்லவா ? என் money purse என்றால், நான் வேறு, என் money purse  வேறு என்று தெரிகிறது அல்லவா ?

என் தலை வலிக்கிறது, என் உடல் , என் பேனா, என் கணவன், என் மனைவி, என் வீடு என்று சொல்லும் போது நான் வேறு என் பேனா வேறு, என் கணவன் வேறு, என் மனைவி வேறு என்று தெரிகிறது அல்லவா ?

அதே போல், நீங்கள் வேறு , உங்கள் உடல் என்பது வேறு.

ஆனால், நாம் , நம் உடல் தான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது மட்டும் அல்ல, மற்றவர்களும் அவர்கள் உடல் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அனுபவிப்பவது நீங்கள். அனுபவிக்கப் படுவது உடல். இந்த உடல் மூலம் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். ஆனால், இந்த உடல் தான் நான் என்று நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள்.

இந்த அனுபவிப்பவன், அனுபவிக்கப் படுவது இரண்டுக்கும் உள்ள தொடர்பு தான் துன்பங்களுக்கு மூல காரணம்.

புரிகிறது தானே ?


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/217.html



Thursday, December 28, 2017

யோக சூத்திரம் - 2.16 - எந்தத் துன்பங்களை தவிர்ப்பது ?

யோக சூத்திரம் - 2.16 - எந்தத் துன்பங்களை தவிர்ப்பது ?


हेयं दुःखमनागतम् ॥१६॥

heyaṁ duḥkham-anāgatam ॥16॥

heyaṁ = தவிர்த்தல்

duḥkham = துக்கம்

anāgatam = எதிர்காலம்


எதிர் காலத்தில் வரும் துன்பங்களை தவிர்க்கலாம்.

எதிர் காலம் இன்னும் வரவில்லை. எதிர் கால துன்பம் என்று ஒன்று கிடையாது. பின் ஏன், பதஞ்சலி எதிர் கால துன்பங்களை தவிர்க்கலாம் என்கிறார் ?

வாழ்க்கை என்பது துன்பங்கள் நிறைந்தது.

பரிணாமம், தாபம், சம்ஸ்காரம் இவற்றினால் துன்பம் விளைகிறது என்று பார்த்தோம்.

நிகழ்ந்த துன்பங்களை ஒன்றும் செய்ய முடியாது. அவை நடந்து முடிந்து போனவை. ஆனால், நாம் அவற்றை விடுவது இல்லை. நடந்து முடிந்த துன்பங்களை மீண்டும் மீண்டும் நினைத்து மேலும் துன்பப் படுகிறோம்.

"அன்னிக்கு அவன் அப்படி செய்தானே "

"அவள் அன்று அப்படி சொன்னாளே "

என்று பழசை நினைத்து மேலும் துன்பப் படுகிறோம்.

முதலில் அதை நிறுத்த வேண்டும். நடந்து முடிந்த துன்பங்களை எப்போதும் இழுத்துப் போட்டுக் கொண்டு  மீண்டும் துன்பப் படக் கூடாது.

இரண்டாவது, எதிர் காலத்தில் வரப் போகும் துன்பங்களை நாம் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியும் .

நடந்து முடிந்ததை ஒண்ணும் பண்ண முடியாது.

இனி வரும் துன்பங்களை எப்படி விலக்குவது என்று பதஞ்சலி சொல்லப் போகிறார்.

வாருங்கள், கேட்போம்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/216.html

Wednesday, December 27, 2017

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 4

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 4


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 

துன்பங்களுக்கு காரணம் என்ன ?

முதல் காரணம் - பரிணாமம் - அதாவது மாற்றம் 

இரண்டாவது காரணம் - தாபம் 

இவை இரண்டையும் இதற்கு முந்தைய பிளாகில் பார்த்தோம் 

அடுத்தது,

ஸம்ஸ்கார. ஸம்ஸ்கார என்றால் சுவடுகள், படிமங்கள் என்று அர்த்தம். 

அது என்ன சுவடு, படிமம்...அது எப்படி துன்பத்துக்கு காரணமாகும் ?

அனுபவங்கள் நமக்குள் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இன்பமோ, துன்பமோ , நல்லதோ கெட்டதோ அவை நமக்குள் ஒரு பதிவினை விட்டுச் செல்கின்றன. 


கடற்கரையில் காலடிச் சுவடுகள் போல, அனுபவங்களின் சுவடுகள் நமக்குள் ஏராளமாய் படிந்து கிடக்கின்றன. சில பேரை நினைத்தாலே வெறுப்பும் கோபமும் வருகிறது. சில பேரை நினைத்தால் மனதுக்குள் மழை அடிக்கிறது. அதே போல சம்பவங்களும். சில சம்பவங்கள் மனதுக்குள் நெருடலை விட்டுச் செல்கின்றன. சில சம்பவங்கள் இனிய நினைவுகளை விட்டுச் செல்கின்றன.

எப்போதோ நடந்து முடிந்த சம்பவங்கள் இன்றும் நம்மை பாதிக்கின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்ததை நினைத்து இப்போது வருந்துகிறோம். 

சில சமயம் அவை மீண்டும் கிடைக்காதா என்று ஏங்கி வாடுகிறோம். 

அனுபவங்களை சேர்த்துக் கொண்டே போவதால் ஒவ்வொரு அனுபவம் ஒரு படிமத்தை, ஒரு சுவடை விட்டுச் செல்வதால், யோசித்துப் பாருங்கள், எத்தனை ஆயிரம் சுவடுகள் உங்களுக்குள் இருக்கும் என்று.  இவை ஒன்றோடு ஒன்று முட்டி மோதி உங்கள் மனதை அலைக்கழிக்கின்றன. நல்லது கெட்டது  என்று எல்லாம் குவிந்து கிடக்கிறது. 


வாசனை என்று சொல்லுவார்கள். பெருங்காயம் வைத்த பாத்திரத்தில், பெருங்காயத்தை எடுத்த பின்னாலும் வாசம் வந்து கொண்டே இருப்பதை போல, சம்ஸ்காரம் என்பது உள்ளே இருந்து கொண்டு நம்மை நடத்துகின்றன.

குழந்தைகள் சந்தோஷமாக இருக்கின்றன என்றால் அவைகளிடம் இந்த அனுபவ தொகுப்பு இல்லை. 

இவர் நல்லவர், அவர் கெட்டவர் , இது நல்லது, அது கெட்டது , இது உயர்வு, இது தாழ்வு என்று எத்தனையோ படிமங்கள். 

சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் சுவடுகளை.


அடுத்தது குணங்கள்.

ரஜோ , தமோ, சாத்வீகம் என்று மூன்று குணங்கள் நமக்கு இருக்கின்றன.


இதில் சாத்வீகம் என்பது சாந்தம், பொறுமை, நல்லதை நினைப்பது  என்பது. 

ரஜோ குணம் என்பது வீரியம், செயலாற்றுதல், உழைப்பை தூண்டுவது, செயலை தூண்டுவது. 

தமோ குணம் என்பது சோம்பல், முடங்கிக் கிடத்தல், அனுபவித்தல், சுகத்தில் மூழ்குதல் என்பன.

இதில் நமக்கு ரஜோ குணமும், சாத்வீகமும் வேண்டும், தமோ அல்லது தமஸ் என்று சொல்லப் படும் குணம் வேண்டாம், அது கெட்ட குணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். 

அப்படி அல்ல. 

இந்த முக்குண கலவை சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். 

தமோ குணம் இல்லை என்றால் தூங்க முடியாது. ரஜோ குணம் அளவுக்கு அதிகமாகப் போனால் , ஏதாவது செய்து கொண்டே இருக்கத் தோன்றும். பத்து மணிக்கு மேல் பார்ட்டி, கிளப் என்று அலையும். இருக்கிற நேரம் பூராவையும் அனுபவிக்க வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும். உழைப்பு எவ்வளவு  முக்கியமோ, அதே அளவு முக்கியம் ஓய்வும். தூக்கம் வராமல் அவதி  படுபவர்கள் தமோ குணம் குறைந்ததால். 


இந்த குணங்கள் மாறு பட்டால் துன்பம் வரும். சாத்வீகம் மிகக் குறைந்தால் உயர்ந்த சிந்தனைகள், நோக்கங்கள் இல்லாமல் போகும். வாழ்க்கை என்பது ஏதோ அனுபவிக்க என்று நினைத்த்துக் கொண்டு எல்லாவற்றையும் அனுபவிக்க துடிக்கும். 

இந்த மூன்று குணங்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். இல்லை என்றால் சிக்கல் தான். 


மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர் நூலோர்


வளிமுதலா வெண்ணிய மூன்று.

என்பார் வள்ளுவர். 

இந்த மூன்றும், மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் (துன்பம் ) செய்யும்.

இவற்றை எப்படி கட்டுப் படுத்துவது என்று எழுதப் புகுந்தால் நீண்டு விரியும். ஆர்வம் உள்ளவர்கள் தேடி அடையுங்கள். 

இந்த துன்பங்களில் இருந்து விடு பட என்ன வழி ?

விழிப்புணர்வு (awareness ) உள்ளவர்கள், இந்த துன்பங்களில் இருந்து விடுபடுவார்கள் என்கிறார்.

எப்படி அவர்கள் விடுபடுவார்கள் என்பதை பார்ப்போம். 



http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-4.html

Monday, December 25, 2017

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 3

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 3


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 



துன்பத்திற்கு என்ன காரணம் ?

முதலாவது காரணம் - பரிணாமம் என்று பார்த்தோம். 

அடுத்தது, தாபம். தாபம் என்றால் ஏக்கம், தவிப்பு. பொருள்களும், உறவுகளும் இன்பம்  தருபவைதான். அதில் சந்தேகம் இல்லை. அவற்றை அடைய  முயற்சிப்பதிலும் தவறில்லை. ஆனால், அவை கிடைத்தால் தான் வாழ்க்கை, இல்லை என்றால் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்ற  தாபம் துன்பத்திற்கு இன்னொரு காரணம். 


சிலருக்கு , தங்களுக்கு வேண்டியதை அடையும் வரை தூக்கம் வராது, நிம்மதி இருக்காது, வேறு எதுவும் ஒரு பொருட்டாகத் தெரியாது. 

பணம், அதிகாரம், பதவி, செல்வாக்கு, மதிப்பு, என்று ஏதோ ஒன்றை சதா சர்வ காலமும்  அதையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். 


சிலர் கடவுள், சொர்கம், வைகுண்டம், கைலாசம், இறைவன் திருவடி என்று ஏங்குவார்கள். 

எல்லா ஏக்கமும் ஒன்றுதான். அது செல் போனாக இருந்தாலும் சரி, புதியதாய் வந்த  காராக இருந்தாலும் சரி, இறைவன் திருவடியாக இருந்தாலும் சரி...ஆசை என்பது ஆசைதான். இதன் மேல் ஆசை என்பதில் பெரிய  பெரிய வித்தியாயசம் இல்லை. 

ஈசனோடாயினும் ஆசை அறுமின் என்பார் திருமூலர். 

இறைவன் மேல் வைத்த உயர்ந்த ஆசை , பொருள்கள் மேல் வைத்த தாழ்ந்த ஆசை  என்று இல்லை. 

எல்லா ஆசையும் ஒன்று தான். 

தாபம் மறைந்தால் துன்பம் மறையும். 

நாமாக கற்பித்துக் கொள்கிறோம்...சிற்றின்பத்தின் மேல் ஆசை வைக்கக் கூடாது. பேரின்பத்தின் மேல் ஆசை வைக்கலாம் என்று. 

பதஞ்சலியைப் பொறுத்த வரை, எல்லா சிற்றின்பம், பேரின்பம் என்ற பாகு பாடெல்லாம்  கிடையாது. எல்லா தாபங்களும் துன்பம் மற்றும் வலிக்கு காரணம். அவ்வளவுதான். 

யோசித்துப் பாருங்கள். தாபம் என்று ஒன்று வந்து விட்டால், மகிழ்ச்சி மறைந்து விடும்.  இதன் மேல் தாபம் இருக்கிறதோ, அது மட்டுமே பிரதானமாகத் தெரியும். மற்றவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. 

உங்கள் தாபம் இதன் மேல் என்று சிந்தியுங்கள். அது எப்படி உங்கள் மகிழ்ச்சியை குறைக்கிறது என்றும் சிந்தியுங்கள். 

நல்ல தாபம், கெட்ட தாபம் என்று லேபிள் ஒட்டாதீர்கள். யாருக்காக அந்த தாபம் என்று நினைக்காதீர்கள் ...நாட்டுக்கு, வீட்டுக்கு ...என்று ஆயிரம் காரணம் கிடைக்கலாம் அந்த தாபத்தை ஞாயப்படுத்த. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளுங்கள். 

உங்களின் தாபம் எது என்று மட்டும் சிந்தியுங்கள். 

துன்பத்திற்கு மேலும் என்னென்ன காரணங்கள் என்று மேலும் சிந்திப்போம். 


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-3.html

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 2

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 2


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 



துன்பத்திற்கு என்ன காரணம் ?

முதலாவது காரணம் - பரிணாம - என்கிறார்.

பரிணாமம் என்றால் என்ன ?

மாற்றம்.  வெளி உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. இன்று ஏதோ ஒன்று விளம்பரத்தில் வருகிறது, அல்லது நண்பர் வீட்டில் பார்க்கிறோம், அதன் மேல் ஆசை வருகிறது. நமக்கும் அது போல   இருந்தால் எப்படி இருக்கும் என்று ஏக்கம் வருகிறது. அதை அடைய மனம்  விரும்புகிறது. கஷ்டப்பட்டு அடைந்தும் விடுகிறோம். அடைகிற வரையில் துன்பம்தான்.  அடைந்த  பின் இன்பம் வருகிறதா ? இல்லை. 

ஏன் இல்லை ?

பரிணாமம். உலகம் மாறிப் போகிறது. நாம் அடைந்ததை விட சிறந்த ஒன்று வந்து விடுகிறது.  அட, இதுனால என்ன பிரயோஜனம். இதை விட அது நல்லா இருக்கே என்று மனம் வேறொன்றை நாடுகிறது. 

அது மட்டும் அல்ல, 

இன்னொரு பரிணாமமும் இருக்கிறது....அது...நாம் அடைந்த பொருள் நாளடைவில் மாறி விடும். 

பழசாகி விடும். தேய்ந்து போகும். கெட்டு போகும். மங்கிப் போகும். வாங்கிய போது இருந்த மெருகு எதிலும் இருக்காது. 

இதில் பொருளில் மட்டும் அல்ல. மனித உறவுகளிலும் அப்படித்தான். 

அழகான பெண் என்று கல்யாணம் கட்டிக் கொண்டு வருகிறான். கல்யாணம் முடிந்த பின், இவளை அவள் அழகோ ? அவளை திருமணம் செய்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்குமோ ? என்று மனம் அலை பாய்கிறது. 


திருமணம் ஆன சில வருடங்களில், அலுப்பு வந்து விடுகிறது. ஓரிரண்டு குழந்தைகள் பிறந்த பின் பெண்ணின் அழகு முன்பு போல் இருப்பது இல்லை. மாற்றம் வருகிறது. 

அது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. வயது ஏறும். முதுமை வரும். அழகு குன்றும். 

இது ஒரு புறம்.

இன்னொரு பரிணாமம் இருக்கிறது. மூன்றாவது பரிணாமம் ...அது நம் மனம். 


ஆசைப் படும் போது இருக்கும் மனம், அதை அடையும் போது இருப்பது இல்லை. மனம் மாறிக் கொண்டே இருக்கிறது. 


நம்மிடம் இருக்கும் எத்தனையோ பொருள்கள், உறவுகள் , அவை எல்லாம் ஒரு காலத்தில், அவற்றை அடைவதே நம் இலட்சியம் என்று இருந்தோம். அது மட்டும் கிடைத்து விட்டால் , சொர்கமே  கிடைத்த மாதிரி என்று இருந்தோம். கிடைத்த பின் சொர்கம் மாதிரியா இருக்கு ? 

அது அப்படி இருக்கும் போது , இப்போதுள்ள ஆசைகள் மட்டும் அதற்கு விதி விலக்கா ? இவையும் நமக்கு இன்பம் தரப் போவது இல்லை. இருந்தும், அவற்றின் பின்னால் ஓடுகிறோம்.


இந்த பரிணாமத்தை புரிந்து கொள்ளாவிட்டால் துன்பம் தான். 


வெளி உலகம் மாறிக் கொண்டே இருக்கும். 


அதனால், நம் மனமும் மாறிக் கொண்டே இருக்கும். 

அது தெரியாமல், இது தான் எனக்கு வேண்டும். அதை அடைந்தால் தான் நிம்மதி. மன அமைதி கிடைக்கும்   என்று நினைப்பது வீண் வேலை. அதனால் துன்பம் வருகிறது. 

எதை அடைந்தாலும் இன்பமும், அமைதியும் வரப் போவது இல்லை. அப்படி ஒன்று இருந்தால், மனித குலம் அதை இந்நேரம் கண்டு பிடித்திருக்கும். 

சற்றே தள்ளி நின்று யோசியுங்கள்.

எதெல்லாம் ஆசைப்  பட்டீர்கள். எவற்றையெல்லாம் அடைந்தீர்கள். அடைந்தவை எல்லாம் உங்களுக்கு  நினைத்த இன்பத்தை தந்திருக்கிறதா ? இப்போது எவற்றிற்கு எல்லாம் ஆசைப் பட்டுக்  கொண்டிருக்கிறீர்கள் ? சிந்தியுங்கள். 

துன்பத்திற்கு முதல் காரணம் - பரிணாமம்.

அடுத்த காரணம்.....

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-2.html

Saturday, December 23, 2017

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 1

யோக சூத்திரம் - 2.15 - துன்பத்திற்கு காரணம் என்ன ? - பாகம் 1


परिणाम ताप संस्कार दुःखैः गुणवृत्तिविरोधाच्च दुःखमेव सर्वं विवेकिनः ॥१५॥

pariṇāma tāpa saṁskāra duḥkhaiḥ guṇa-vr̥tti-virodhācca duḥkham-eva sarvaṁ vivekinaḥ ॥15॥


pariṇāma = பரிணாம = வளர்ச்சி, மாற்றம்

tāpa = தாபம், ஆசை

saṁskāra = படிமங்கள்

duḥkhaiḥ = வலி, துக்கம்

guṇa = குணங்கள்

vr̥tti = அலைகள், சஞ்சலம், மாற்றம் , சலனம்

virodhācca = முரண்பாடு , எதிர் நிலை

duḥkham = வலி, துக்கம்

eva = மேலும்

sarvaṁ  = சர்வம், எங்கேயும், எப்போதும்

vivekinaḥ = விழிப்புணர்வு பெற்றவர்கள்

துன்பத்திற்கு காரணம், வெளி உலக மாற்றம், அவை நம்மில் ஏற்படுத்தும் தாக்கம், விழிப்புணர்வு இல்லாமை. 

மிக மிக முக்கியனமான சூத்திரம்.

இன்பம் வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப் படுகிறார்கள். பலப் பல காரியங்கள் செய்கிறார்கள். இருந்தும் யாரும் இன்பமாய் இருப்பதாய் தெரியவில்லை.

திருமணம் ஆகாதவன், திருமணம் செய்து கொண்டால் இன்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறான்.

திருமணம் செய்து கொண்டவன், திருமணம் செய்யாமல் இருந்தால் இன்பமாக இருக்கலாம் என்று நினைக்கிறான்.

என்ன செய்தாலும், துன்பம் மட்டுமே மிஞ்சுகிறது. ஏன் ?

பணம் உள்ளவனும் துன்பப் படுகிறான், பணம் இல்லாதவனும் துன்பப் படுகிறான்.

பிள்ளை இல்லாதவனும் வருந்துகிறான், பிள்ளை உள்ளவனும் வருந்துகிறான்.

குழந்தையாக இருக்கும் போதும் துன்பம். வயதான காலத்திலும் துன்பம்.

வாழ்க்கை என்பது துன்பம் மட்டுமே நிறைந்ததாய் இருக்கிறது. இடை இடையிடையில் இன்பம் தலை காட்டி விட்டுப் போகிறது. இன்பத்தை நிரந்தரமாய் பிடித்து வைக்க முடிவதில்லை.

ஏன் ?

இதைப் பற்றி யோசித்து இருக்கிறோமா ?

பதஞ்சலி யோசித்து இருக்கிறார்.

துன்பத்திற்கு காரணம் என்ன என்று மட்டும் அல்ல. அவற்றை எப்படி போக்குவது என்றும் யோசித்து இருக்கிறார். வழியும் சொல்லித் தருகிறார்.

முக்கியமான சூத்திரம். ஆழமான பொருள் கொண்டது.

மொத்தத்தையும் ஒன்றாக எழுதினால் படிக்கும் போது விட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது.

எனவே, பகுதி பகுதியாக பிரித்து சிந்திக்கலாம்.

என்ன, சரிதானே ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/215-1.html

Sunday, December 10, 2017

யோக சூத்திரம் - 2.14 - இன்ப துன்பத்திற்கு காரணம்

யோக சூத்திரம் - 2.14 - இன்ப துன்பத்திற்கு காரணம்



ते ह्लाद परितापफलाः पुण्यापुण्यहेतुत्वात् ॥१४॥

te hlāda paritāpa-phalāḥ puṇya-apuṇya-hetutvāt ॥14॥

te = அது

hlāda  = இன்பமான

paritāpa = பரிதாப, துக்ககரமான

phalāḥ = பஹ்லா , (phal என்றால் பழம்) பலன்களை

puṇya = புண்ணியம்

apuṇya = அ -புண்ணியம் , புண்ணியம் அல்லாத

hetutvāt = ஹேதுவத் , ஏதுவான, உருவாக்குகின்ற , உதவி செய்கின்ற


செயலின் தன்மையைப் பொறுத்து இன்ப துன்பங்கள் விளைகின்றன.


நாம் அன்றாடம் பார்க்கும் வாழ்க்கையில் நல்லவர்கள் துன்பப் படுகிறார்கள். கெட்டவர்கள் இன்பமாக வாழுகிறார்கள்.

எது எந்த  விதத்தில் சரி ?


சட்டத்துக்கு பயந்து, நீதி, நேர்மை, ஞாயம், உழைப்பு என்று இருப்பவன் அல்லல் படுகிறான்.


பொய், புரட்டு, இலஞ்சம், கொலை, கொள்ளை செய்பவன் இன்பமாக இருக்கிறான்.

கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா ? இதுக்கெல்லாம் என்ன காரணம். சந்தோஷமாக இருக்க இதுதான் வழி என்றால், பின் எல்லோரும் அயோக்கியத்தனம் செய்து விட்டு போகலாமே. நாட்டில் தர்மம் என்று ஒன்று எதற்கு ?

இந்த சந்தேகம் வராத ஆளே கிடையாது.

ரொம்ப யோசித்து கடைசியில், இது போன ஜென்ம பாவ புண்ணியம் என்று தங்களை தாங்களே  தேற்றிக் கொள்கிறோம்.

ஏன் ஒரு ஜென்மம் காத்திருக்க வேண்டும் ? இந்த ஜென்மத்திலேயே அதன் பலன் ஏன் கிடப்பது இல்லை ?

சரி, அப்படியே மறு ஜென்மத்தில் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்...இன்று சுகமாக இருப்பவன், போன பிறவியில் நல்லது செய்திருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டால், இந்த பிறவியில் ஏன் அயோக்கியத்தனம் செய்து சுகமாக  இருக்கிறான் ? நல்லது செய்து இன்பமாக இருக்கக் கூடாதா ?

பதஞ்சலி இதற்கு பதில் சொல்கிறார்.

இந்த கடவுள், மறு பிறவி, முன் பிறவி, கர்ம வினை என்று அனைத்தையும் புறம் தள்ளி விடுகிறார்.


அதை எல்லாம் கொண்டு வந்தால் எதையும் நிரூபணம் பண்ண முடியாது.

முன் பிறவியின் தொடர்ச்சி என்று எப்படி நிரூபணம் செய்வது ?


பதஞ்சலி ஒரு விஞ்ஞானி மாதிரி. எதை சோதித்து அறிய முடியுமோ, அது தர்க்க வாதத்துக்கு (logic ) உட்படுமோ, அதை மட்டுமே சொல்லுவார்.

பதஞ்சலி கூறுகிறார், உன் சந்தோஷமும், துக்கமும் உன் செயல்களின் விளைவு. அவ்வளவுதான்.


நீங்கள் இப்போது துன்பப் படுகிறீர்களா ? முன்பு எதையோ சரியாகச் செய்யவில்லை. அவ்வளவு தான்.

முன்பு என்றால் முற்பிறப்பு இல்லை. .இந்த பிறப்புதான்.

கணவனோ மனைவியோ , மாமியார் நாத்தனார் , சம்பந்தி சரியாக அமையவில்லையா ? அதனால் மன கஷ்டமா ?

காரணம் சம்பந்தம் பேசும் போது சரியாக வேலை செய்யவில்லை.

வறுமை வாட்டுகிறதா ? படிப்பு, உழைப்பு, நல்ல ஆட்களின் தொடர்பை ஏற்படுத்தாமல் இருந்ததனால் வந்த விளைவு.

ஆரோக்கிய குறைவா - தவறான உணவு பழக்கம், உடற் பயிற்சி இன்மை ...

இப்படி எந்த நல்லது கெட்டதுக்கும் நாம் செய்யும் செயல்களே காரணம்.

கடவுள், முன் வினை, சுவர்க்கம் , நரகம் இதெல்லாம் தேவை இல்லை.

நல்ல வேலை செய்தால், நல்ல பலன் விளையும். அவ்வளவுதான்.

சரி, அது சரி என்றே எடுத்துக் கொள்வோம். அதனால் என்ன இப்ப ? இதைத் தெரிந்து என்ன செய்யப் போகிறோம் ?

இனிமேல் உங்கள் வாழ்க்கை இன்பமாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் இனி செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் சரியாகச் செய்ய வேண்டும்.

தெளிவான சிந்தனை. சரியான ஆராய்ச்சி. தேவையான உழைப்பு.

ஏனோ தானோ என்று காரியம் செய்தால், பின்னால் அது மன கிலேசத்தில் கொண்டு விடும்.

எதுக்கு தேவை இல்லாமல் முன் பிறவி, முன் வினை, கடவுள் , கத்திரிக்காய் என்று போட்டு குழப்ப வேண்டும்.

என்ன சரிதானே ?


http://yogasutrasimplified.blogspot.in/2017/12/214.html




Thursday, December 7, 2017

யோக சூத்திரம் - 2.13 - வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி

யோக சூத்திரம் - 2.13 - வாழ்க்கையை அனுபவிப்பது எப்படி


सति मूले तद्विपाको जात्यायुर्भोगाः ॥१३॥

sati mūle tad-vipāko jāty-āyur-bhogāḥ ॥13॥

sati = அப்படி இருப்பதற்கு

mūle =மூல காரணம்

tad = அவர்களின்

vipāko = வெளிப்பாடு,

jāty = சமூக நிலை

āyur = ஆயுள்

bhogāḥ = வாழ்க்கையை அனுபவிப்பது

ஒருவனின் ஆயுள், சமூக நிலை, அவன் எவ்வாறு வாழ்க்கையை அனுபவிக்கிறான் என்பது அதைப் பொறுத்தது 


நீங்கள் கூர்ந்து கவனித்தால் தெரியும் , உங்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட பாதையிலேயே மீண்டும் மீண்டும் போய் கொண்டிருப்பது. உங்கள் செயல், எண்ணங்கள், எல்லாமே ஒரு செக்கு மாடு மாதிரி மீண்டும் மீண்டும் ஏதோ ஒன்றையே சுத்தி சுத்தி வரும்.

அது பயமாக இருக்கலாம், குழப்பமாக இருக்கலாம், குற்ற உணர்வாக இருக்கலாம், ஆசையாக இருக்கலாம் ஏதோ ஒன்றைப் பற்றியே உங்கள் வாழ்க்கை சுத்தி சுத்தி வரும்.

அதைப் பொறுத்தே நீங்கள் இருக்கும் இடம், உண்ணும் உணவு, செய்யும் செயல்கள் அனைத்தும் இருக்கும். இவை ஏதோ ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை போலத் தெரிந்தாலும், இவற்றிற்கு அடி நாதமாய் ஏதோ ஒன்று இருந்து கொண்டே இருக்கும்.

சிலருக்கு வெளியே போகவே பிடிக்காது. சிலருக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தாலும் போதும் எங்கே போகலாம் என்று இருப்பார்கள்.

சிலருக்கு தாழ்வு  மனப்பான்மை இருக்கும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், நினைவும் அந்த தாழ்வு மனப்பான்மையை போக்கிக் கொள்ளவே இருக்கும்.

சிலருக்கு, ஆச்சாரம்,
சிலருக்கு , ஆணவம்,
சிலருக்கு, பக்தி , படிப்பு,
சிலருக்கு , சேவை

என்று ஏதோ ஒன்றைப் பிடித்துக் கொள்ளகிறார்கள்.

அவர்கள் செய்யும் செயல் அனைத்தும் அதை சார்ந்தே இருக்கிறது.

இங்கு ஒரு முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் .



 jāty-āyur-bhogāḥ

ஜாதி என்று பதஞ்சலி சொல்லுவது சமயம் சேர்ந்த , பிறப்பு சார்ந்த ஜாதி அல்ல. தொழில் சார்ந்த ஜாதி.

சிலருக்கு படிப்பு, சொல்லிக் கொடுப்பது, ஆராய்ச்சி செய்வது இவற்றில் நாட்டம் இருக்கும்.

சிலருக்கு விளையாட்டு, வேலை செய்வது, பிரயாணம் செய்வது இவற்றில் ஆர்வம் இருக்கும்.

சிலருக்கு ஆட்களை கட்டி மேய்ப்பது, அவர்களை ஒழுங்கு படுத்துவது, வேலை வாங்குவது என்று நாட்டம் இருக்கும்.


இப்படி ஒவ்வொருவருக்கும் ஒன்றில் நாட்டம் இருக்கும். அதைப் பொறுத்தே அவர்களின் வேலை அமைகிறது. அதைப் பொறுத்து அவர்களின் சமுதாய அந்தஸ்து அமைகிறது.

பதஞ்சலி இன்னும் மேலே போகிறார்.

அவர்களின் ஆயுளும் அவர்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறார்கள் என்பதும் இந்த கிலேசத்தின் அடிப்படையில் அமைகிறது என்கிறார்.

நாம் பல முறை செய்தி தாள்களில் படித்து இருக்கிறோம்...கோவில் வாசலில் பிச்சை எடுத்தவன் பல இலட்சங்களுக்கு அதிபதியாக இருந்து இறந்தான் என்று.

அவனுக்கு எதிர் காலம் பற்றிய பயம். பணத்தை சேமித்துக் கொண்டே இருந்தான். செலவழிக்க மனம் இல்லை. அது அவனின் மன  கிலேசம்.

பதஞ்சலி இது சரி, அது தவறு என்று சொல்ல வரவில்லை.

அவர் சொல்வதெல்லாம் இது தான்...இந்த மன கிலேசம் என்பது மிக மிக ஆழமானது. நம் வாழ்க்கையை நிர்ணயிப்பது. அதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களின் கோபம், பயம், மனப் பான்மை, சந்தோஷம், துக்கம், வேலை, உறவுகளின் தன்மை எல்லாம்  உங்கள் மனதை பொறுத்தே அமைகிறது.

ஆழ்ந்து சிந்தியுங்கள். மீண்டும் மீண்டும் உங்கள் வாழ்வில் தோன்றும் எண்ணம் எது என்று. அது எங்கே இருந்து வருகிறது என்று தேடுங்கள்.

தேடுங்கள்....கண்டடைவீர்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/213.html

Wednesday, December 6, 2017

யோக சூத்திரம் - 2.12 - கர்மா

யோக சூத்திரம் - 2.12 - கர்மா 



क्लेशमूलः कर्माशयो दृष्टादृष्टजन्मवेदनीयः ॥१२॥

kleśa-mūlaḥ karma-aśayo dr̥ṣṭa-adr̥ṣṭa-janma-vedanīyaḥ ॥12॥


kleśa = கிலேசம், மன குழப்பங்கள், தடைகள்

mūlaḥ = மூலம், ஆதி

karma = கர்மா

aśayo = சாயா, நிழல், தொடர்ச்சி, பழக்கம்

dr̥ṣṭa = கண்ணுக்குத் தெரிவது

adr̥ṣṭa = கண்ணுக்குத் தெரியாதது

janma = வாழ்க்கையில்

vedanīyaḥ = அனுபவம், பட்டறிவு

நமது பழக்க வழக்கங்கள், மன கிலேசத்தில் இருந்து வருகின்றன. அதிலிருந்து நமது வினை மற்றும் அதன் பலன்கள் தொடர்கின்றன. அந்த மன கிலேசங்கள் சில சமயம் வெளிப்படையாகத் தெரியும். சில சமயம் தெரிவது இல்லை.


கர்மா என்றால் ஏதோ முன் ஜென்மத்தில் செய்தது, இந்த ஜென்மத்தில் நமக்கு வருகிறது என்று கொள்ள வேண்டியதில்லை. முன் ஜென்மம், இந்த ஜென்மம், மறு பிறவி என்பதெல்லாம் நம்பிக்கையின் பால் பிறப்பது. அவற்றை நிரூபணம் பண்ண முடியாது. வேண்டுமானால் நம்பிக் கொள்ளலாம். இந்து சமயம் தவிர மற்ற சமயங்கள் மறு பிறப்பு என்பதை பற்று பேசுவது இல்லை. எனவே அது எல்லா மக்களும் பின் பற்றக் கூடிய ஒன்று அல்ல. அது உலகளாவிய உண்மை என்று சொல்ல முடியாது. இந்த உலகில், ஒரு சிறு பகுதியினர் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள். அது உண்மையாக  இருக்க வேண்டும் என்று சட்டம் இல்லை.

மேலும், நிரூபணம் பண்ண முடியாத எதையும் பதஞ்சலி சொல்லுவது இல்லை. ஆன்மீக உலகத்தில் பதஞ்சலி வேறு பட்டவர். அனைத்து மதங்களும் எதையாவது நம்பச் சொல்லும். கடவுள், சொர்கம், நரகம், கர்மா, மறு பிறப்பு, நியாயத் தீர்ப்பு என்று சோதித்து அறிய முடியாத ஒன்றை கண்ணை மூடிக் கொண்டு நம்பச் சொல்லும்.


பதஞ்சலி அப்படி அல்ல. அவர் சொல்வது ஒவ்வொன்றையும் நீங்கள் சோதித்து அறிந்து கொள்ளலாம். ஒரு விஞ்ஞான  கோட்பாடு மாதிரி. புவி ஈர்ப்பு விசையை அறிந்து கொள்ள நியூட்டன் மேல் நம்பிக்கை தேவை இல்லை. நீங்களே பரிசோதனை செய்து , விடை சரியாக வந்தால் ஏற்றுக் கொள்ளலாம். சரி இல்லை என்றால் விட்டுத் தள்ளி விடலாம். எந்த நம்பிக்கையும் தேவை இல்லை.

அதுபோலத்தான் பதஞ்சலியும்.


அவர் கர்மா என்று சொல்லுவது, நீங்கள் முன்பு கொண்ட கிலேசம்.

அது என்ன முன்பு கொண்ட கிலேசம் ?

உங்களின் ஒவ்வொரு செயலும் எண்ணமும் முன்பு எப்போதோ நீங்கள் உங்களை பழக்கப் படுத்திக் கொண்டதன் விளைவு.

சில விஷயங்களின் மேல் உங்களுக்கு கோபம் வருகிறது, ஆசை வருகிறது, சில பிடித்திருக்கிறது, சிலவற்றை கண்டால் வெறுப்பு வருகிறது, சிலவற்றை நினைத்தால் பயம் வருகிறது....

ஏன் ?

உங்களுக்கு ஒன்றின் மேல் பயம் என்று வைத்துக் கொள்வோம்...அந்த பயம் எல்லோருக்கும் இருக்கிறதா ? இல்லையே ? பின் உங்களுக்கு மட்டும் ஏன் அந்த பயம் ?

காரணம், முன்பு எப்போதோ நீங்கள் உங்கள் மனதில் அந்த பயத்தை ஏற்றுக் கொண்டது.

100 ரூபாய் சேமிப்பு இல்லாதவன், வாழ்க்கையை நம்பிக்கையோடு ஓட்டுகிறான். 5 கோடி ரூபாய் சேமிப்பு உள்ளவன், எதிர் காலம் பற்றி பயம் கொள்ளுகிறான்.

ஏன் ?

நம்முடைய அனைத்து செயல் மற்றும் எண்ணங்களுக்கு காரணம் நமது மனதில் ஏற்கனவே உள்ள கிலேசங்கள்.

நாம் செய்யும் / நினைக்கும் ஒவ்வொன்றும் நமக்குள் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த சேர்த்து வைத்த குவியல் தான் நமது பழக்கமாக மாறுகிறது.

இப்படி செய்தால் - கோபம் வரும்.

அப்படி செய்தால் - ஆசை வரும்

இதற்கு - அன்பு
அதற்கு - வெறுப்பு

என்று ஒரு பட்டியல் உங்களுக்குள்ளே இருக்கிறது. அது உங்கள் பழைய அனுபவத்தில் இருந்து வருவது.


நாம் இந்த கணத்தில் வாழ்வது இல்லை. பழைய அழுக்கு மூட்டைகளை தூக்கிக் கொண்டு அதில் இருந்து வாழ்கிறோம்.

முன்பு செய்தது, நினைத்தது இன்றைய செயல் மற்றும் பழக்கமாக இருக்கிறது.

இன்று செய்வது மற்றும் நினைப்பது நாளைய பழக்கமகாக மாறும்.

இதுதான் கர்மா என்று கூறுகிறார்.

சிலருக்கு என்ன வந்தாலும் கிடைத்தாலும் மகிழ்ச்சி இருக்காது. நிம்மதி இருக்காது.

ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் கிடைத்தாலும் , அதில் 30% வரி போய் விட்டதே  என்று கவலைப் படுவார்கள்.

காரணம் அவர்களுடைய பழைய கர்மா. மன கிலேசம்.

எதை நமது மனதில் படிய விடுகிறோம் என்று கவனமாக இருக்க வேண்டும். இன்று நாம்  படிய விடுவது, நாளை நமது எண்ணங்களை செயல்களை உருவாக்கும்.

இரண்டாவது, நமது இன்றைய செயல்களுக்கு எண்ணங்களுக்கு காரணம் என்றோ நமது மனதில் படிந்த நினைவுகள்.

அந்த விழிப்புணர்வு வந்து விட்டால், நமது எண்ணங்களும், செயல்களும் பழையதில் இருந்து விடுபட்டு, இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார்ப் போல் அமையும்.


ப்ரதி பிரசவ என்று முந்தைய ஸ்லோகத்தில் கூறியதும் இதைத்தான்.

ஏதோ ஒரு சினிமாவில், புத்தகத்தில் வந்த கணவன்/மனைவி பாத்திரம் மனதுக்கு பிடித்துப் போய் விடுகிறது. கணவன் என்றால் அப்படி இருக்க வேண்டும். மனைவி என்றால் அப்படி இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு கற்பனை விழுந்து விடுகிறது. நிஜ வாழ்வில் கணவனோ மனைவியோ அப்படி அமைவதில்லை. என்ன ஆகிறது. கற்பனை கணவனுக்கும் நிஜ கணவனுக்கும் இடையில்  .போராட்டம்.

இது இந்த ஒரு கற்பனையில் மட்டும் அல்ல. இது வெளிப்படையாக தெரியும்.

பல விஷயங்கள் வெளிப்படையாக தெரிவது இல்லை.

சில பேர் சில விஷயங்களை பற்றி பேசவே  தயங்குவார்கள்.

ஏன் ?

அவர்களுக்கு அப்படி சொல்லப்பட்டது. அவர்கள் படித்த புத்தகங்கள், எல்லாம் சேர்ந்து அவரக்ளை அப்படி உருவாக்கி விட்டது.

நாம் நமது  கடந்த காலத்தின் கைதிகளாக இருக்கிறோம்.

இறந்த காலம் என்ற சிறையில் அடைப்பட்டு கிடக்கிறோம். அப்படி சிறையில் இருக்கிறோம் என்று கூடத் தெரியாமல் இருக்கிறோம்.

நல்லாதானே இருக்கிறது. காத்து வருகிறது. வெளிச்சம் வருகிறது. சாப்பாடு வருகிறது. சுகமாகத்தான் இருக்கிறது. இதுக்கு என்ன குறை என்று சிறை நமக்கு பிடித்துப் போய் விடுகிறது.

வெளியில் உள்ளவன் வா என்று அழைத்தாலும், வருவதில்லை. இதில் என்ன குறை இருக்கிறது என்று சுதந்திரமாக வெளியே வரச் சொல்கிறாய் என்று அவனோடு வாதம் செய்கிறோம்.

தங்க விலங்கு.

இந்த விழிப்புணர்வு (awareness ) வர வேண்டும். இறந்த காலத்துக்கும், நிகழ் காலத்துக்கும் உள்ள தொடர்பை அறிய வேண்டும். அதில் இருந்து விடுபட வேண்டும்.

கர்ம வினையில் இருந்து விடுபடுவது என்பது  அதுதான்.

கோடிக்கணக்கான வருடங்களின் சுமையை தூக்கிக் கொண்டு அலைகிறோம் .

அதை இறக்கி வைத்து விட்டால். சுகம். சொர்கம். விடுதலை. முக்தி. வீடு பேறு.

சிந்தியுங்கள். நீங்கள் இன்றிருப்பது எப்படி என்று. அது எங்கிருந்து வருகிறது என்று.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/212.html

Tuesday, December 5, 2017

யோக சூத்திரம் - 2.11 - தியானம்

யோக சூத்திரம் - 2.11 - தியானம் 




ध्यान हेयाः तद्वृत्तयः ॥११॥

dhyāna heyāḥ tad-vr̥ttayaḥ ॥11॥

dhyāna = தியானம்

heyāḥ = தாண்டி வர,

tad = அவைகளை

vr̥ttayaḥ = எண்ண அலைகள்

அவற்றை தாண்டி வர தியானம் பண்ண வேண்டும். 

பதஞ்சலி படுத்தறார் இல்ல ? ரொம்பத்தான் வார்த்தை சுருக்கம்.

மன கிலேசம் நிறைய வழிகளில் வருகிறது என்று பார்த்தோம்.

அவித்தை, அஸ்மிதா, ரகா , பயம், என்று பல வழிகளில் வருகிறது.

இவை  வருகின்றன ? எங்கிருந்து வருகின்றன ? இவற்றை எப்படி கையாள்வது ?

தியானம் மூலம் இவற்றை கடந்து போகலாம் என்கிறார்.

எப்படி ?

நாம் நினைக்கிறோம் நமது மன சலனங்களுக்கு காரணம் வெளி உலகம் என்று.

கணவனோ மனைவியோ ஏதோ சொல்கிறார்கள். கோபம் வருகிறது. காரணம்  அவர்கள் தானே.

நல்ல பொருளை பார்க்கிறோம். அது நமக்கு வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். அப்படி பார்த்தால், ஆசைக்கு காரணம் வெளியே உள்ள அந்த பொருள் தானே ?

போலீஸ் அராஜகம், கொடுமையான பாலியல் வன் முறை, பட்டினிச் சாவு, கௌரவ கொலை  என்று பல விஷயங்களை கேள்விப் படும் போது   ,கோபமும்  வருத்தமும் வருகிறது அல்லவா. அதற்கு காரணம் அந்த  வெளி நிகழ்வுகள்தானே .

இல்லை என்கிறார் பதஞ்சலி.

இந்த மன சலனங்களுக்குக் காரணம் நாம் தான்.

உள்ளே இல்லாத உணர்ச்சி எப்படி வெளியில் இருந்து வரும் ?

ஒரு கணம் சந்தோஷமாக இருக்கிறோம். ஏதோ ஒரு செய்தி வருகிறது. சந்தோஷம்   இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. வருத்தம் வந்து சேர்கிறது.


நமது கோபம், காமம், பொறாமை, வருத்தம், பயம் போன்ற மன கிலேசங்களுக்கு காரணம் நம் அடி மனதில் படிந்துள்ள எண்ணங்கள் தான்.

அவற்றை அறிய வேண்டும் என்றால், நாம் உள் நோக்கி போக வேண்டும்.

எப்ப , எந்த செயல் செய்தாலும், என்ன எண்ணங்கள் வந்தாலும், ஏன் செய்கிறோம், என்ன சிந்திக்கிறோம் , என்ன நினைவுகள் வருகிறது என்று  சிந்திக்க வேண்டும். அந்த செயல் மற்றும் சிந்தனைக்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும்.

எளிய காரியம் இல்லை. நமக்குள்ளே அடுக்கடுக்காக எண்ணங்கள் , படிந்து கிடக்கின்றன.

ஒவ்வொரு வயதிலும் நிகழும் நிகழ்வுகள், அவ்வப்போது சொல்லப் பட்ட செய்திகள், படித்த புத்தகங்கள் உள்ளே படிந்து கிடக்கின்றன.

நாம் வாழ்வது நமது வாழ்க்கை அல்ல....மற்றவர்களின் வாழ்க்கை.

நமது மனத்தில் , நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், சமுதாயம் , படித்த புத்தகங்களின் ஆசிரியர்கள் என்று பெரும் கூட்டமே இருக்கிறது. இருந்து கொண்டு அதைச் செய், இதை செய், அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்குத் தெரியாது. இந்த கும்பல் உள்ளே இருந்து நம்மை ஏவிக் கொண்டிருப்பது.

கீ கொடுத்த கடிகாரம் போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கீ கொடுப்பது  மேலே சொன்ன கும்பல்.

தியானம் எப்படி செய்வது ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/211.html

Monday, December 4, 2017

யோக சூத்திரம் - 2.10 - காரணத்தை நோக்கி பயணி

யோக சூத்திரம் - 2.10 - காரணத்தை நோக்கி பயணி



ते प्रतिप्रसवहेयाः सूक्ष्माः ॥१०॥

te pratiprasava-heyāḥ sūkṣmāḥ ॥10॥

This burden (klesha) should be nipped in the bud. || 10||


te = அது
prati = மறுபடியும், மூலம், ஆதி
prasava = பிரசவம்
heya = மாற்ற, மறுக்க ,
sūkṣmāḥ = சூக்ஷும, நுண்ணிய

அதை மாற்ற மூலத்தை நோக்கி போ !

எதாவது புரிகிறதா ?

எதை மாற்ற ? எது மூலம் ? ஒண்ணும் புரியவில்லை அல்லவா ?

மன கிலேசத்தை மாற்ற மூலத்தை நோக்கி போ என்கிறார்.

மன கிலேசம் என்பது அவித்தை, அஸ்மிதா, ரகா , பயம் இவற்றால் உண்டாகிறது என்று பார்த்தோம்.

சரி, இவை எல்லாம் இருக்கிறது என்று புரிகிறது. பயம் இருக்கிறது. ஆசை இருக்கிறது. அதெல்லாம் சரி. இவற்றை எப்படி போக்குவது ?

காய்ச்சல் இருக்கிறது என்று தெரிகிறது. தெரிந்தால் மட்டும் போதாதே அதை  எப்படி குணப்படுத்துவது என்றும் தெரிய வேண்டுமே ?

சொல்லித் தருகிறார் பதஞ்சலி.

மூலத்தை நோக்கி சென்றால் இவற்றை மாற்ற முடியும் என்கிறார்.

எது மூலம் ?

நமது ஒவ்வொரு  குணாதிசயத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அந்த மூல காரணத்தை  கண்டு பிடிக்க வேண்டும்.

பயம் - அது எந்த பயமாக இருந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். மரண பயம், எதிர் காலம் பற்றிய பயம், மூப்பு பற்றிய பயம், தனிமை பயம், இப்படி எந்த பயம் என்றாலும், அதற்கு சிறு வயதில் நடந்த ஏதோ ஒன்று காரணமாக இருக்கும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணத்துக்கு பின்னாலும் ஒரு சிறு வயது நிகழ்வு காரணமாக இருக்கும்.

கடவுள் நம்பிக்கை, மதம், எதிர் பாலின் மேல் ஈர்ப்பு, வெறுப்பு, படிப்பு, செல்வம், அரசியல் பிடிப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் உங்கள் சிறு வயதில் ஏற்பட்ட ஏதோ ஒரு நிகழ்வே காரணம்.

நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்....."நான் ஒரு பெரிய புத்திசாலி , நான்  செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு முடிவும் நான் திட்டமிட்டு, அலசி ஆராய்ந்து எடுக்கும் முடிவு " என்று.

இல்லவே இல்லை.

நீங்கள் எப்படி முடிவு எடுக்கப் போகிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள் என்பதெல்லாம் உங்களின் பத்து வயதுக்கு முன்பே தீர்மானிக்கப் பட்டுவிட்டது. அந்த தீர்மானத்தில் இருந்து நீங்கள் விலகுவதே இல்லை, பெரும்பாலும்.

எத்தனை ஆயிரம் சிந்தனைகளை, சாட்சிகளை, நிரூபணங்களை தந்தாலும், உங்களின் ஆழ்மன சிந்தனையில் இருந்து நீங்கள் விடுபடுவது இல்லை. மேலோட்டமாக மாறினால் போலத் தோன்றினாலும், அடிப்படையில் நீங்கள் நீங்கள் தான். மாறுவது  இல்லை.


மாறுவதா, மாறாமல் இருப்பதா என்பதல்ல கேள்வி. பதஞ்சலி க்கு அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை.

உங்களின் இன்றைய நிலைக்குக் காரணம் உங்கள் கடந்த காலம்.

அது என்ன என்று நீங்கள் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும்.

பிரசவம் என்றால் பெறுவது. உதிப்பது. பெற்று எடுப்பது.


பிரதி பிரசவ என்றால் பிரசவித்த அந்த நிலைக்கு போ என்கிறார்.

அது தான் நீங்கள் தோன்றிய அந்த முதல் நிலை. அங்கிருந்து உங்கள் எண்ணங்கள் வலுப் பெற தொடங்குகின்றன.

வாழ்க்கையில் குழப்பமா, பயமா, சபலமா, வெறுப்பா, நடுக்கமா, சூன்யமா ...நீங்கள் எதையும் மாற்ற முடியும். அதற்கான காரணத்தை தேடி கண்டு பிடித்தால்.

சிலருக்கு காரணம் இல்லாமல் முரட்டு பிடிவாதம் இருக்கும், சிலருக்கு அளவுக்கு அதிகமா சாப்பிடத் தோன்றும், தூங்குவது, மது அருந்துவது, ஊர் சுற்றுவது, படிப்பது என்று நல்லது மற்றும் கெட்டது அனைத்துக்கும் உங்கள் பிள்ளை பருவமே காரணம்.

உங்கள் உடல் நிலைக்குக் கூட காரணம் உங்கள் சிறு பிரயாம் தான்.

சிலருக்கு படபடப்பு இருக்கும், இரத்த கொதிப்பு, தூக்கம் இன்மை, என்று பல வித வியாதிகளுக்கும் காரணம் சிறு வயதில் நடந்த நிகழ்வுகள்.

சிலரால் தங்கள் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தத் தெரியாது. அன்பை, காதலைக் கூட சொல்லத் தெரியாது. மனதில் இருக்கும். அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் ஒன்று கிடக்க ஒன்று சொல்லி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவார்கள்.

என்னை ஏன் யாருமே புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று வருந்துவார்கள்.

இதன் மூல வேர் பிள்ளை பிரயாத்தில் இருக்கிறது.


அதை அறிந்து கொண்டால், இப்போதுள்ள குறையை மாற்ற முடியும்.

காரணத்தை கண்டு பிடித்து விட்டால், காரியம்  சரியாய் விடும்.

இதைத்தான் உளவியல் அறிஞர்கள் ஹிப்னாடிசம், regression to the past என்று ரொம்ப மெனக்கெடுகிறார்.

பதஞ்சலி 5000 ஆண்டுகளுக்கு முன்பே இவற்றை பற்றி தீவிரமாக சிந்தித்து இருக்கிறார்.


ஆசை தான், அனைத்தையும் கண்டு பிடித்து நம்மை ஒரு புதிய மனிதனாய் உருவாக்க, தேவை இல்லாத பயம் மற்றும் கவலைகளில் இருந்து விடு பட்டு வாழ்வில் நிம்மதியாக , இன்பமாக இருக்க ஆசைதான்.

நம்மை நாமே ஆராய முடியுமா ? அது பற்றி பதஞ்சலி ஏதாவது சொல்லி இருக்கிறாரா ?

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/210.html

Sunday, December 3, 2017

யோக சூத்திரம் - 2.9 - பயம்

யோக சூத்திரம் - 2.9 - பயம்


स्वरस्वाहि विदुषोऽपि समारूढोऽभिनिवेशः ॥९॥

svarasvāhi viduṣo-'pi samārūḍho-'bhiniveśaḥ ॥9॥

sva  = சுயம், தானே

rasa = ரச = இயற்கை, தன்மை

vahi = வாழ்கை ஓட்டத்தில்

viduṣo = குரு, படித்து அறிந்தவர்கள்

api = மேலும்

sama  = முழுவதும் , இணையாக

rudhah  = மேலோங்கி

abhiniveśaḥ = பயம்

கற்றறிந்த ஞானிகளிடம் கூட வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருவது பயம்.

அவித்தை, அஸ்மிதா, ரகா , துவேஷ இவற்றை பார்த்தோம். இவை எல்லாம் மன கிலேசத்தை உண்டாக்குபவை.

அடுத்தது பயம்.

பயம் என்பது வாழ் நாள் எல்லாம் நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது.

நாம் வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு இருக்கும் போது பயம் நம்மை ஒவ்வொரு கணமும் செலுத்திக் கொண்டே இருக்கிறது. நாம் மற்ற உணர்ச்சிகளை அறிந்து கொண்ட அளவுக்கு பயத்தை அறிந்து கொள்வதில்லை ஏன் என்றால், பயம்.

பயம் எப்படி வருகிறது. அதன் விளைவுகள் என்ன என்று பார்த்தால் நமக்கே பிரமிப்பாய் இருக்கும்.

எதிர் காலத்தைப் பற்றிய பயம், மரணம் பற்றிய பயம், ஆசைப் பட்டது கிடைக்காதோ என்ற பயம், கிடைத்தது கை விட்டு போய் விடுமோ என்ற பயம் என்று பயம் ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் பின்னி பிணைந்து கிடக்கிறது.

பயத்தில் இருந்து தப்பிக்க நாம் நம்பிக்கையை கை கொள்கிறோம்.

இவற்றை சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.

கணவன் முழுவதும் மனைவியை சார்ந்து இருக்கிறான். அவள் வீட்டு நிர்வாகம் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறாள். அனைத்தையும் அவள் பொறுப்பில் விட்டு விடுகிறான். இவள் இல்லாவிட்டால் நான் என்ன செய்வேன் என்ற பயம் அவனுள் எழுகிறது. அந்த பயத்தினால் அவள் செய்யும் செயல்கள் அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து போகிறான். அடி நாதமாய் இருப்பது பயம்.  மேலோட்டமாக சொல்லுவது சகிப்புத் தன்மை, (compromise ), விட்டு கொடுத்து போவது, மனைவி மேல் காதல் / நேசம்  என்று.

கணவன் தான் சம்பாதிக்கும் ஒரே நபர். அவன் இல்லாவிட்டால் வீட்டின் பொருளாதாரம் குலைந்து விடும். எனவே, அவன் என்ன செய்தாலும், சொன்னாலும் மனைவி பொறுத்து சகித்துப் போகிறாள். அடி நாதம், பயம். அதற்கு வைத்திருக்கும் பெயர் காதல், கற்பு,  கணவன் மேல் பக்தி என்று ஏதேதோ பெயர்கள். இவன் இறந்து போனால் நமக்கு விதவை பட்டம் கிடைக்குமே, சமுதாயம் நம்மை மதிக்காதே என்ற பயம். இந்த பயத்துக்கு வேறு வேறு பெயர்கள்.

நிறைய தவறுகள் செய்கிறோம். ஐயோ, என்ன ஆகுமோ என்ற பயம். நரகம், மோசமான மறு பிறப்பு, பிள்ளைகள் தலையில் விழுந்து விடக் கூடாதே என்ற பயம். சமயங்கள் இந்த பயத்தை பயன் படுத்திக் கொள்கின்றன. பாவம் செய்து விட்டாயா  ? மறு பிறப்பை பற்றி பயமா ? நரகம் பற்றி பயமா ? சொர்கம் போக மாட்டோம் என்று பயமா ? என்னிடம் வாருங்கள். இறைவனை வழி பட்டால் பாவம் போய் விடும், மன்னிப்பு கிட்டும், சொர்கம் போகலாம் என்று அந்த பயத்தை பயன் படுத்தி சாதாரண மக்களை ஆசை காட்டி  பணம் பறிக்கின்றன. கோவிலுக்கு வா, உண்டியலில் காணிக்கை போடு, அந்த பூஜை செய், இந்த பூஜை செய்,  இதை வாங்கு , அதை வாங்கு என்று சாதாரண மக்களை வதைக்கின்றன.

மதம் ஒரு புறம் என்றால், அரசியல் இன்னொரு புறம்.

உன் மொழியை அவன் அழித்து விடுவான், உன் கலாச்சாரம் போய் விடும், படிப்பில், வேலை வாய்ப்பில் உனக்கு ஒரு முன்னுரிமை (reservation ) போய் விடும் என்று பயமுறுத்துகின்றன. பயந்தவர்கள் என்னிடம் வாருங்கள். எனக்கு வோட்டு போடுங்கள். நான் உங்களை பாதுகாக்கிறேன் என்று சாதாரண மனிதர்களை ஏமாற்றி வோட்டு வாங்குகின்றன.

நமக்கு  ஒன்று மற்றவர்களிடம் இருந்து தேவை இருக்கிறது என்றால், அவர் நமக்குத் தர மாட்டாரோ என்ற பயம் வரும். பயத்தின் ஆணி வேர் ஆசை.

பயத்தில் இருந்து நம்பிக்கை (hope ) பிறக்கிறது.

பெற்றோர் மேல் பயம், ஆசிரியர்கள் மேல் பயம், வேலை பார்க்கும் இடத்தில் மேலதிகாரிகளிடம் பயம்,  கடவுள் மேல் பயம், மனைவி/கணவன் மேல் பயம், சமுதாயத்தின் மேல் பயம், சட்டம், காவல்துறை, இராணுவம், மற்ற சமுதாயக் குழுக்கள், ...இப்படி வாழ் நாள் முழுவதும் பயத்தினால் நடத்தப் படுகிறது.

 பயத்தில் பெரிய பயம் மரண பயம். மரண பயம் இல்லாதார் யார் ?

தேவைகள் குறைந்தால் பயம் குறையும்.

அவித்தை குறைந்தால் பயம் குறையும்.


நாம் நமது பயங்களுக்கு வேறு பெயர் வைத்திருக்கிறோம்.

காதல், பக்தி,  புண்ணியம் என்று வேறு வேறு நல்ல பெயர்கள் வைத்திருக்கிறோம்.

பயம் இருக்கும் வரை மன அமைதி என்பது கானல் நீரே.

பதஞ்சலி பயம் நல்லதா கெட்டதா என்ற தர்க்கத்தில் இறங்கவில்லை. பயம் இருந்தால்  மன கிலேசம் வரும். அவர் சொல்வது அவ்வளவுதான்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/12/29.html