योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥
yogaś-citta-vr̥tti-nirodhaḥ ॥2॥
யோகா சித்த விருத்தி நிரோதா
சித்தம் என்பது இந்த உலகை அறிய உதவுவுகிறது என்று போன பிளாகில் பார்த்தோம்.
சித்தம் என்பது நம் புலன்கள், அவற்றைக் கொண்டு அறியும் மூளை, மூளையைத் தாண்டி மனம் என்ற இவை அனைத்தின் தொகுதி பார்த்தோம்.
இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
ஒரு இசை அமைப்பாளர் இசை அமைக்கிறார். நாம் அதை கேட்கிறோம். "ஆகா, என்ன இனிமையாக இருக்கிறது " என்று சொல்கிறோம்.
அந்த இசையை அமைப்பதற்கு முன், அந்த இசை எங்கே இருந்தது ?
தெரியாது. தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆனால், அந்த இசை அந்த இசை அமைப்பாளரின் சித்தத்தின் மூலம் வெளிப்பட்டது என்று மட்டும் தெரியும்.
அதே போல, ஒரு கதாசிரியன் ஒரு புத்தகம் எழுதுகிறான். அவன் எழுதுவகற்கு முன், அந்த புத்தகம் எங்கே இருந்தது ? தெரியாது. ஆனால், அந்த கதாசிரியரின் சித்தத்தின் மூலம் அந்த புத்தகம் உருவானது.
இதை நீங்கள் சிந்தித்துக் கொண்டே போனால் , இந்த உலகம் அனைத்தும் பல சித்தங்களின் வெளிப்பாடு என்று தெரியும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
நாம் இசையை கேட்கிறோம், புத்தகத்தை வாசிக்கிறோம் , அவற்றை உணர்ந்து இரசிக்கிறோம். அது நமது சித்ததினால் விளைவது.
அடடா, இந்த காப்பி எவ்வளவு சுவையாக இருக்கிறது என்கிறோம்.
எனவே,இந்த உலகம் தோன்றியது சித்தத்தில் இருந்து, இந்த உலகம் அறியப்படுவது அல்லது அனுபவிக்கப் படுவது சித்தத்தின் மூலம். இது இரண்டைத் தவிர உலகம் என்று தனியாக ஒன்றும் இல்லை.
சித்தம் உலகை உருவாக்கிறது. உலகை அறிகிறது.
அப்படியென்றால் இந்த சித்தம் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம்மால் இந்த உலகை சரியாகப் பார்க்க முடியும்.
ஒரு குளத்தில் மோதிரம் ஒன்று தவறி விழுந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். குளத்தின் நீர் சலனமற்று இருந்தால் , நம்மால் சரியான வெளிச்சத்தில் அந்த மோதிரத்தை முடியும். குளத்தின் நீரும் தெளிந்து இருக்க
வேண்டும்.
குளத்தின் நீர் தான் சித்தம். மோதிரம் நாம் காணும் உலகம்.
நீர் தெளிந்து , சலனம் இல்லாமல் இருந்தால் மோதிரம் தெரியும்.
இல்லையென்றால் தெரியாது அல்லது மங்கலாகத் தெரியும் அல்லது தெரியவே தெரியாது.
அது போல, நம் சித்தம் தெளிவாக, சலனம் இல்லாமல் இருந்தால் இந்த உலகை நாம் தெளிவாக காண முடியும்.
இல்லையென்றால் அரைகுறையாக கண்டு குழம்பிப் போவோம்..குழம்பிய நீரையும், அலை அடிக்கும் நீரையும் மறந்து விட்டு, இந்த உலகமே இப்படித்தான் என்று உலகை குறை சொல்கிறோம்.
யோகே சித்த விருத்தி நிரோதம் என்பது சூத்திரம்.
இந்த விருத்தி என்றால் விளைவது. பெருகுவது. செய்வது என்று பொருள்.
நம் புலன்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கின்றன. புத்தி அங்கும் இங்கும் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது. குளத்தில் அலை அடிப்பது போல புலன்களும் மனமும் சர்வ காலமும் அலைந்து கொண்டே இருக்கின்றன.
இந்த சலனத்தை நிறுத்து , அவை எங்கு போக வேண்டுமோ அங்கு கொண்டு செல்வது "நிரோதம் " என்று சொல்லப்படுகிறது.
நிரோதம் என்றால் ஒரு நிறுத்துவது, தடுப்பது என்றுதான் நேரடிப் பொருள் (நிரோத் என்பதும் இந்த வேர்ச்சொல்லில் இருந்து வந்தது தான் )
ஆனால், ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது.
சித்தத்தை அடக்குவது அல்ல. புலன்களை அடக்குவது அல்ல. அவற்றை நம் வழியில் கொண்டு செல்வது.
ஒரு தேர்ப்பாகன் லகானை கையில் வைத்து இருப்பான். குதிரை ஓடும். லகான் என்பது குதிரை ஓடாமல் பிடித்து நிறுத்துவதற்கு அல்ல. குதிரையை நாம் விரும்பும் திசையில் செலுத்த.
தறி கெட்டு ஓடும் புலன்களை அதன் போக்கில் விடாமல், நம் வழிக்கு கொண்டு வருவதுதான் நிரோதம்.
யோகப் பயிற்சியின் மூலம், சித்தத்தை (புலன்கள், அறிவு, மனம், அவற்றிற்கு இடையே ஆன தொடர்பு எல்லாம் சேர்ந்தது சித்தம் ) நல் வழிப் படுத்துவதே யோக சாதனம் ஆகும்.
எவ்வளவு முக்கியமான விஷயம் ? தெரிந்து கொள்ள வேண்டாமா ?