Monday, July 17, 2017

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 1

யோக சூத்திரம் - 1.17 - அறிவின் படிகள் - பாகம் 1 


वितर्कविचाराअनन्दास्मितारुपानुगमात्संप्रज्ञातः ॥१७॥

vitarka-vicāra-ānanda-asmitā-rupa-anugamāt-saṁprajñātaḥ ॥17॥

அறிவு படிப்படியாக விதர்கா, விசாரா, அநந்தா , அஸ்மிதா என்ற நிலைகளில் செல்கிறது.

இந்த தமிழ் உரை , மூல சமஸ்கிரத உரைக்கு வலு சேர்ப்பதாக அமையவில்லை.

இப்போதைக்கு அறிவு  படிப்படியாக முன்னேறுகிறது என்று தெரிந்து கொள்ளுவோம். அவை என்னென்ன படிகள் என்று ஆராய்வோம். முழுவதும் படித்த பின்னால், இந்த சூத்திரத்தின் அர்த்தம் விளங்கலாம்.

அதற்கு முன் சமாதி என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம்.

சமாதி என்றால் ஏதோ இறந்தபின் , ஒருவரை புதைத்து அதற்கு மேல் கட்டும் ஒன்று என்று  நினைத்துக் கொள்ளக் கூடாது.

எப்படியோ அந்த சொல், இறந்தவரை புதைத்த இடத்திற்கு பெயராகி விட்டது.

அதை கொஞ்சம் தள்ளி வைப்போம்.

சமாதி என்றால் சமம் + ஆதி.  ஆதி என்றால் முதலில் எப்படி இருந்தோமோ அதோடு அல்லது அதற்கு சமாக இருப்பது.

ஆதி என்றால் , முதலில் நாம் தோன்றியபோது எப்படி இருந்தோம் ?

 ஒரு குழந்தைக்கு நல்லது, கெட்டது , உயர்வு, தாழ்வு,  பணக்காரன், ஏழை என்ற பாகுபாடும் கிடையாது.

நாளடைவில் இவற்றை நாம் அறிந்து கொள்கிறோம்.

இவற்றை அறிந்த பின்னும், அந்த குழந்தை மனம் போல் இருப்பது சமாதி.

இருமை அகன்று ஒருமையில் நிலைப்பது சமாதி.


கல்லார்க்கும் கற்றவர்க்கும்  களிப்பருளும் களிப்பே என்பார் வள்ளலார்.

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

என்பது திருவருட்பா

‘கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார்
ஓடும் செம்பொனும் ஒக்கவே  நோக்குவார்.’’

என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

ஒன்றாக காண்பதுவே காட்சி என்பார் ஒளவையார்

இப்படி இருமை (duality ) மறைந்து , ஒருமை நிலை அடைவதுதான் சமாதி.

அந்த சமாதி இரண்டு வகைப்படும்.

ஒன்று  ஸம்ப்ரஜானதா இன்னொன்று அஸம்ப்ரஜானதா

இதில் ஸம்ப்ரஜானதா என்றால் என்ன என்று இங்கு சிந்திக்க இருக்கிறோம்.

தர்க்கம் என்றால் ஆராய்ச்சி, ஆராய்தல், அலசுதல், சரி எது தவறு எது என்று வாதம் செய்து உண்மையை நிலை நிறுத்துதல்.

நாம்  எதை  ஆராய்ச்சி செய்கிறோமோ , அவை , அவற்றினுள் இருக்கும் இரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன.

உதாரணமாக, நாம் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறோம் என்று வைத்துக் கொண்டால், அந்த அணு எப்படி வேலை செய்கிறது, அதனுள் என்னென்ன இருக்கிறது, அதில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்றெல்லாம் போக போக புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ?

அதே போல நம் உடலை பற்றி ஆராயத் தொடங்கினால் , அதன் உறுப்புகள், அவை எவ்வாறு வேலை செய்கின்றன, அதில் வரும் நோய்கள், அவற்றை எப்படி குணப் படுத்துவது என்றெல்லாம் நம்மால் அறிய முடிகிறது அல்லவா ?

இது வெளி உலகை ஆராயும் போது நாம் அறிந்து கொள்ளும் முறை.

இது விதர்கம்.

மற்றவற்றையும் ஒவ்வொன்றாக அறிவோம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/07/117.html

No comments:

Post a Comment