யோக சூத்திரம் - 2.4 - அவித்தையின் வெளிப்பாடுகள்
अविद्या क्षेत्रमुत्तरेषाम् प्रसुप्ततनुविच्छिन्नोदाराणाम् ॥४॥
avidyā kṣetram-uttareṣām prasupta-tanu-vicchinn-odārāṇām ॥4॥
avidyā = அவித்யா , அறிவீனம்
kṣetram = நிலைக்களன்
uttareṣām = மற்றவற்றிற்கு
prasupta = மறைந்து இருத்தல், அடங்கி இருத்தல்
tanu = வலுவில்லாத
vicchinn = வலுவோடு
odārā =உதார், வெளிப்படையாக
aṇām =இவாறாக
அறிவீனம் மற்ற நான்கு துன்பங்களுக்குக் காரணம். அந்த அறிவீனம் நான்கு விதங்களில் வெளிப்படுகிறது - வலு குறைந்து, வலுவுடன், மறைந்து இருந்து, வெளிப்படையாக
நான் முன்பே கூறியது போல, அவித்தை என்பது அறிவீனம் என்று நேரடியாக கூற முடியாது. வித்தை, அவித்தை. Lack of Awareness தான் அவித்தை என்பது.
இந்த அறிவீனம் இருக்கிறதே, அது தான் அனைத்து துன்பங்களுக்கும், அனைத்து மன கிலேசங்களுக்கும் காரணம். கிலேசம் என்றால் விஷம் என்கிறது சமஸ்க்ரிதம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு போதும். உங்களிம் ஆயிரம் நல்ல குணங்கள் இருக்கலாம், முட்டாள்தனம் என்ற ஒரு கெட்ட குணம் இருந்தால் போதும் அது அனைத்து நல்ல குணங்களையும் வீணடித்து விடும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
இந்த அறிவீனம் நான்கு வழிகளில் வெளிப்படுகிறது.
அறிவு வேண்டுமானால் பல வழிகளில் வெளிப்படலாம். அறிவீனம் எப்படி பல வடிவில் வெளிப்படும். ?
அறிவீனம் சில சமயம் மறைந்து வெளிப்படும்.
அதுஎப்படி மறைந்தும் , வெளிப்படும் ஒரே சமயத்தில் இருக்க முடியும் ?
ஒரு உதாரணம் பார்ப்போம்.
உடல் பருமனை குறைக்க வேண்டும். கண்டதையும் சாப்பிடக் கூடாது என்ற அறிவு நமக்கு இருக்கும். இருந்தாலும், நல்ல உணவை பார்த்தவுடன் , சாப்பிடும் ஆர்வத்தில், சாப்பிடக் கூடாது என்ற அறிவு மறைந்து போகும்.
புகை பிடிக்கக் கூடாது என்ற அறிவு புகை பிடிக்கும் எல்லோருக்கும் இருக்கும். இருந்தும் , புகை பிடிக்கிறார்கள். ஏன் ? அந்த அறிவு மறைந்து இருக்கிறது.
ஒருவரிடம் ஒரு சில விஷயங்களை பேசக் கூடாது என்று நினைத்திருப்போம், பின் நம்மை அறியாமல் பேசி விடுவோம்.
வாழ்வில் பல விஷயங்கள் நாம் தெரிந்தே, அறிந்தே செய்யும் தவறுகள் தான். காரணம், அறிவீனம். அறிவு மங்கி , அறிவீனம் வெளிப்படும்.
அடுத்தது, வலு குன்றி, வலுவுடன்.
நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று வாதம் செய்வது, என் மதம், என் கடவுள் , என் உண்மைதான் உயர்ந்தது என்று உரக்கச் சொல்லுவது, அதற்காக யுத்தம் செய்வது, மனிதர்களை கொல்லுவது என்பது அறிவீனத்தின் வலுவான வெளிப்பாடு.
அதையே வெளியே சொல்லாமல், சண்டை பிடிக்காமல், அதே கொள்கைளை கொண்டிருப்பது வலு இழந்த வெளிப்பாடு.
எத்தனை விவாதங்கள், எத்தனை சர்ச்சைகள், நீயா நானா, எது சரி, யார் உயர்ந்தவன், என்று ஆயிரம் தர்க்கங்கள். எல்லாம், அறிவீனத்தின் வெளிப்பாடு.
இதற்கெல்லாம் காரணம் தெளிவற்ற சிந்தனை. Lack of Awareness .
நான் யார், நான் ஏன் இப்படி இருக்கிறேன், இப்படி பேசுகிறேன், என் கொள்கைகள் என்ன, அவை எங்கிருந்து வந்தன, அவை சரியா தவறா, அவற்றை நான் எப்படி பயன்படுத்துகிறேன் , எப்படி வெளிப்படுத்துகிறேன் என்று அறியாமல், உணர்ச்சிகளால் உந்தப்பட்டு செயலாற்றுவது.
அது மனதை விஷமாக்குகிறது.
இந்த அவித்தையின் தன்மை என்ன ? அது எப்படி செயல் படுகிறது என்பதைப் பற்றி அடுத்த ஸ்லோகத்தில் பார்க்க இருக்கிறோம்.
http://yogasutrasimplified.blogspot.in/2017/11/24.html
No comments:
Post a Comment