Thursday, November 23, 2017

யோக சூத்திரம் - 1.51 - எண்ணங்களை கடந்த படிமங்கள்

யோக சூத்திரம் - 1.51 - எண்ணங்களை கடந்த படிமங்கள் 



तस्यापि निरोधे सर्वनिरोधान्निर्बीजः समाधिः ॥५१॥

tasyāpi nirodhe sarva-nirodhān-nirbījaḥ samādhiḥ ॥51॥



tasya =  அதில் இருந்து
api = மேலும்
nirodhe = நிறுத்துதல், கட்டுப்பாடு, கட்டுப்படுத்தல்
sarva = அனைத்தும்
nirodhat = கடந்த பின்
nirbījaḥ = விதை இல்லாமல்
samādhiḥ = சமாதி

சமாதி பாதத்தின் கடைசி சுலோகம்.

சமாதியின் உச்சம், முடி இந்த சுலோகம்.

பீஜம் என்றால் விதை. வித்து. விதையில் இருந்து, செடி முளைக்கிறது. செடியில் இருந்து மரம், பின் காய், கனி, அதில் இருந்து இன்னொரு விதை என்று போய் கொண்டே இருக்கிறது. ஒரு விதையில் இருந்து பல்லாயிரக்கணக்கான விதைகள் தோன்றும்.

நிர் பீஜம் என்றால் விதை இல்லாத.

நிர் பீஜ சமாதி என்றால் = விதை இல்லாத சமாதி. அது தான் சமாதியின் இறுதி நிலை. உச்ச நிலை.

அது என்ன விதை இல்லாத சமாதி ?

சமாதியின் தொடக்கத்தில் யோகி இந்த உலகை அவற்றில் உள்ளவற்றை அவற்றின் பெயர் கொண்டு அறிகின்றான். இது மரம், செடி, தாய், தந்தை, கணவன் , மனைவி என்று அனைத்துக்கும் ஒரு பெயர். அவை செய்யும் செயல்களுக்கு ஒரு பெயர். இவை தான் அவை அறிந்தவை.

அடுத்தது, பெயர் இல்லாமல் அவன் அவற்றை அறிய முற்படுகிறான். வார்த்தை அவனது  சிந்தனைக்கு இடையில் வருவது இல்லை. சூரிய உதயத்தைப் பார்க்கிறான் என்றால், அது சூரியன், கடல், காலை நேரம், சிவப்பாக அழகாக இருக்கிறது என்று அவன் நினைப்பது இல்லை. அந்த அழகை  வார்த்தை ஏதும் இல்லாமல் உணர தலைப்படுகிறான்.

கொஞ்சம் கொஞ்சமாக, வெளியே செல்லும் சிந்தனைகளை உள் நோக்கி திருப்புகிறான்.

தன்னைத் தானே அறிய முற்படுகிறான்.

அடுத்த கட்டத்தில் உலகில் உள்ளவற்றை புலன்கள் மற்றும் அறிவின் துணையின்றி நேரடியாக அறிய தலைப்படுகிறான்.

இதுவரை , ஏதோ ஒரு விதத்தில் அறிந்து கொண்டிருந்தான். அறிதல் என்று ஒன்று இருந்தால், அறிபவன், அறியப் படுவது என்ற இரண்டும் உண்டு.

நாம் அறிகிறோம் என்ற எண்ணம் இருக்கும் வரை, நான் என்ற அந்த உணர்வு இருக்கும் வரை உலகம் முழுவதும் புரிபடுவது இல்லை.

நான் அறிகிறேன் என்றால், அறிதல் நிகழும், அறியாமை புலப்படும், என் அறிவின் எல்லை தெரியும், அறிவின் கண் கொண்டு பார்ப்பதால், உண்மை என்ன என்று தெரியாது.

அந்த மாதிரி சமயத்தில் ஒரு அறிதல் , பல அறியாமைகளை சுட்டிக் காட்டும். அதில் இருந்து மேலும் சில அறிதல்கள் நிகழும். அதில் இருந்து மேலும் பல அறியாமை என்று  விதையில் இருந்து மரம், மரத்தில் இருந்து விதை என்று போய் கொண்டே இருக்கும்.

ஒரு உதாரணம் பார்ப்போம்.

நான் உங்களிடம் ஒரு பேனாவை காட்டி, இது இந்த கம்பெனி செய்த பேனா என்று சொல்லுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இது ஒரு புதிய செய்தி. புது அறிவு.

இப்போது இந்த அறிவு என்ன செய்கிறது தெரியுமா ?

இதன் விலை என்ன ? எங்கே தயாரிக்கிறார்கள் ? எந்த மாதிரி மை போடணும் ? ஒரு தரம் போட்டால் எவ்வளவு நாளைக்கு வரும் ? வேறு யார் எல்லாம் இது மாதிரி பேனா தயார் செய்கிறார்கள் ? இது எத்தனை நிறத்தில் வருகிறது ?  இதன் எடை என்ன ? கீழே விழுந்தால் உடையுமா ?

என்று ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் வரும்.

அறியாமை வெளிப்படும். விடை தேடி மனம் அலையும். ஒரு சில கேள்விகளுக்கு விடை தெரியலாம். அந்த தெரிந்த விடையில் இருந்து இன்னும் பத்து கேள்விகள் புறப்படும்.

இதுதான் பீஜம். நிர் பீஜம் என்பது இந்த தொடர்பை அறுப்பது.

அறிவு வேலை செய்வது நின்று போகும்.

அறிவு என்பது பழையனவற்றின் தொகுப்பு. அறிவு என்பது இறந்த காலம்.

அறிகிறோம், அறிதல் என்ற ஒன்றே இருக்காது இந்த நிர் பீஜ சமாதியில்.


அறிபவன் என்று யாரும் இல்லை.

அந்த நிலை வரும்போது, அனுபவம் நிகழாது. அனுபவிப்பவன் இல்லாததால். அனுபவ தொகுப்பு இருக்காது.  அறிதலும் அறியாமையும் இருக்காது.

அமைதி மட்டுமே இருக்கும்.

அறிதல் என்பது ஒரு செயல். ஒரு நிகழ்வு. அது நிகழும் போது மனதில் , சித்தத்தில் ஒரு  சலனம் உண்டாகத்தான் செய்யும். நிர் பீஜ சமாதி நிலையில், அறிதல் என்பது இல்லை என்பதால், சலனம் என்பதே இல்லை. மனம் சலனமற்று இருக்கும்.

அதை எப்படி அடைவது என்று அடுத்து வரும் அத்தியாயங்களில் காணலாம்.

சமாதி பாதம் நிறைவு பெற்றது.

சாதன பாதம் நாளை தொடங்கும்.


http://yogasutrasimplified.blogspot.in/2017/11/151.html

No comments:

Post a Comment