Tuesday, March 27, 2018

யோக சூத்திரம் - 2.37 - நிறைந்த செல்வம்

யோக சூத்திரம் - 2.37 - நிறைந்த செல்வம் 



अस्तेयप्रतिष्ठायां सर्वरत्नोपस्थानम् ॥३७॥

asteya-pratiṣṭhāyāṁ sarvaratn-opasthānam ॥37॥


asteya = திருடாமை

pratiṣṭhāyāṁ = நிலையாக நின்றபின்

sarvaratn = சர்வ + ரத்தன் = அனைத்து இரத்தினங்களும் , அனைத்து செல்வங்களும்

opasthānam = உப ஸ்தானம் = கிடைக்கும், இருக்கும். ॥37॥

திருடாமை என்பது நிலை நின்றபின், அனைத்து செல்வங்களும் கிடைக்கும். 

முன்பு இதைப் பற்றி சிந்தித்தோம். செல்வத்தை திருடுவதை விட, கருத்து திருட்டு என்பது எப்படி நமக்குத் துன்பத்தைத் தருகிறது என்று பார்த்தோம்.

அதை இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

மற்றவர்கள் பொருளை திருட வேண்டும், அவர் அறியாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம் ?

திருட வேண்டும் என்கிற எண்ணம் எங்கிருந்து வருகிறது ?


முதலில், எனக்கு உள்ளது எனக்குப் போதாது என்ற எண்ணம் திருட்டின் ஆரம்ப விதை.  அங்கிருந்துதான் அது ஆரம்பமாகிறது.

இரண்டாவது, எனக்கு வேண்டியதை என்னால் உழைத்து சம்பாதிக்க முடியாது  என்ற தன்னம்பிக்கை இன்மை. தன் திறமையில், உழைப்பில், அறிவில் நம்பிக்கை இன்மை.

மூன்றாவது, நம்பிக்கை இருந்தாலும் பொறுமை இன்மை. இப்பவே வேண்டும். நாளைக்கே வேண்டும் என்ற அவசரத்தில் திருடச் சொல்கிறது. எப்படியாவது குறுக்கு வழியில்  போயாவது இன்பங்களை அடைய வேண்டும் என்ற  எண்ணம்.

நான்காவது,  மற்றவர்களின் துன்பம் பற்றி கவலைப் படாத மனது. மற்றவர்கள்  பொருளை நாம் அபகரித்துக் கொண்டால் அவர்கள் எவ்வளவு துன்பப் படுவார்கள் என்று நினைக்காத , ஈரமற்ற மனம். கருணை அற்ற உள்ளம்.

திருட்டினால் ஒருவன் தனக்குத் தானே பெரிய தீமைகள் செய்து கொள்கிறான்.

திருடு என்றால் பொருளைத் தான் திருட வேண்டும் என்று இல்லை. மற்றவர் கருத்தைத்  திருடலாம். இன்னும் சொல்லப் போனால் மற்றவர் நிம்மதியை , அமைதியை  திருடலாம். ஒன்று கிடக்க ஒன்றைச் சொல்லி, மற்றவர்களை குழப்பி, அவர்களின் நிம்மதியைத் திருடலாம்.

சில பேர் இருப்பார்கள். எப்போது அவர்களிடம் பேசினாலும் போதும், ஏதாவது சொல்லி நம் நிம்மதியை, அமைதியை குலைத்து விடுவார்கள். நம் சந்தோஷத்தை  அவர்கள் திருடிக் கொள்கிறார்கள் என்றே அர்த்தம்.

நான் இதுவரை திருடவே இல்லை என்று யாரும் சொல்ல முடியாது.

இந்த உலகில் அனைத்துமே ஒரு அளவுதான் இருக்கிறது. நாம் , அளவுக்கு அதிகமாக ஒன்றை எடுத்துக் கொண்டால், அது யாருக்கோ போக வேண்டியதை , அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொள்வது போலத் தான்.

ஒரு ஆண்டில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் அரிசி உற்பத்தி ஆகும். உங்களிடம் பணம் இருக்கிறது  என்று அளவுக்கு அதிகமாக வாங்கி, அளவுக்கு அதிகமாக உண்டால், பணம் கொஞ்சமாக உள்ள யாரோ ஒருவர் பசியோடு செல்ல வேண்டி இருக்கும். அவர் உணவை நீங்கள் திருடியதாகவே அர்த்தம்.

அளவோடு உண்ண வேண்டும். அளவுக்கு அதிகமாக உண்ணும் யாரும் திருடரே.


உணவு மட்டும் அல்ல. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ப்பது, ஆடைகள், நகைகள் எல்லாமே திருட்டு தான்.

ரொம்ப பணம் வைத்திருப்பவர்கள் கொஞ்சம் தானம் செய்வது என்பது அந்த குற்ற உணர்வில் இருந்து விடுபடும் ஒரு முயற்சி.


உலகில் இவ்வளவு பேர் வறுமையில் வாடும் போது நான் இவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேனே என்ற குற்ற உணர்வு.

மற்றவர்களை விடுங்கள். நீங்கள் , உங்களிடம் இருந்து எவ்வளவு திருடுகிறீர்கள் தெரியுமா ?

என்னது ? என்னிடம் இருந்து நானே திருடுகிறேனா ? அது எப்படி முடியும் ?

உங்கள் நேரத்தை, உங்கள் சந்தோஷத்தை, உங்கள் நல்ல அனுபவங்களை, உங்கள் ஆரோக்கியத்தை, உங்கள் ஆயுளை உங்களிடம் இருந்து திருடுவதில் உங்களை விட பெரிய ஆள் யாரும் இல்லை.

உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் குறைத்துக் கொள்ள விரும்புவீர்களா. யாருக்காவது கொடுக்க விரும்புவீர்களா ? மாட்டீர்கள் தானே.

அளவுக்கு அதிகமாக உணவு உட்கொண்டு, உடற் பயிற்சி செய்யாமல், உங்கள் ஆரோக்கியத்தை , உங்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டது யார் ? நீங்கள் தானே.

எண்ணெய் பலகாரத்தை, இனிப்பு பலகாரத்தை ஒரு கை பார்த்தது யார் ?

நல்ல பொழுதை எல்லாம், வீணாக அரட்டையிலும், டீ வி யிலும் கழித்தது யார் ?உங்கள் நேரத்தை திருடியது நீங்கள் தான்.

மற்றவர்களைப் பார்த்து பொறாமை பட்டு, உங்கள் நிம்மதியை, உங்கள் சந்தோஷத்தை உங்கள் அனுமதி இல்லாமல் எடுத்துக் கொண்டது யார் ? நீங்கள் தானே ?

யோசித்துப் பாருங்கள். உங்களின் பெரிய எதிரி நீங்கள்தான் என்பது புரியும். உங்களின் செல்வம், ஆரோக்கியம், சந்தோஷம் இவை அனைத்தையும் உங்களிடம் இருந்து பறித்து தூர எறிவது நீங்கள்தான் என்பது புரியும்.

எனவே, திருடாமை நிலையாக நின்றால், அனைத்து செல்வங்களும் உங்களிடம் இருக்கும்.

சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/237.html

Sunday, March 25, 2018

யோக சூத்திரம் - 2.36 - சத்தியமும் செயலும்

யோக சூத்திரம்  - 2.36 - சத்தியமும் செயலும் 



सत्यप्रतिष्थायं क्रियाफलाअश्रयत्वम् ॥३६॥

satya-pratiṣthāyaṁ kriyā-phala-āśrayatvam ॥36॥

satya = சத்தியத்தில்

pratiṣthāyaṁ  =நிலை பெற்று இருந்தால்

kriyā = காரியம், காரியத்தின்

phala = வெளிப்பாடு

āśrayatvam = தானே அமையும்

சத்தியத்தில் நிலை பெற்று இருந்தால், காரியத்தின் வெளிப்பாடு தானே அமையும். 

நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அன்பு,கருணை, உதவும் மனம், அழகை போற்றும் குணம், தயை, நலிந்தவர்களை காக்கும் எண்ணம், உண்மையாக உழைக்கும் எண்ணம்,  என்று எவ்வளவோ நல்ல குணங்கள் உள்ளே இருக்கிறது. இருந்தும் அவை வெளிப்படுவது இல்லை.

ஏன் ?

நல்லவர்களாக இருந்தும், அதை வெளியில் காட்டிக் கொள்ள  முடியவில்லை. காட்டினாலும் , உலகம் நம்ப மறுக்கிறது. ஏன் அப்படி நிகழ்கிறது.

அது மட்டும் அல்ல,  நீங்கள் யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் நிதி நிலை உங்களை தயங்க வைக்கிறது. இப்படி எவ்வளவோ நல்ல காரியங்கள் செய்ய நினைத்தாலும் செய்ய முடியாமல் போகிறது.

ஏன் ?

இதை எப்படி மாற்றுவது ?

"சத்தியத்தில் நிலை  நின்றால் , காரியங்கள் தானே வெளிப்படும் " என்கிறார் பதஞ்சலி.

சத்தியத்தில் நிலை பெறுதல் என்றால், நிலையாக நிற்க வேண்டும். இங்கொரு காலும், அங்கொரு காலும் இருந்தால் நிலையாக நிற்க முடியாது.

உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசக் கூடாது.

 மனமும் செயலும் ஒன்று பட வேண்டும்.

அது எப்படி முடியும். மனதில் நினைப்பதை எல்லாம்  வெளியே அப்படியே சொல்ல முடியுமா ?

முடியும், எப்போது என்றால் மனதில்  நினைப்பது வெளியில் சொல்லும்படி இருந்தால்.

சத்தியத்தில் நிலை நின்றால் என்பது உண்மை பேசுவது மட்டும் அல்ல. அது ஒரு சிறு பகுதி.

உண்மையாய் இருப்பது. முதலில் நமக்கு நாமே உண்மையாய் இருப்பது. சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பது. உள்ளும் புறமும் ஒன்றாக இருப்பது.

அது எப்போதாவது ஒரு முறை அல்ல, "நிலை நிறுத்தல்" , எப்போதும் அப்படி இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், செயல் தானே வெளிப்படும். அந்த செயலுக்கு நீங்கள் காரணம் அல்ல. அவை உங்கள் மூலம் வெளிப்படும்.

நான் செய்கிறேன், எனக்காக செய்கிறேன், என் குடும்பத்துக்காக செய்கிறேன், என்பதெல்லாம் போய் விடும். நான் வேறு, உலகம் வேறு என்பது மறைந்து , நானும் உலகும் ஒன்றாகி விடும்.

என்னுடைய செயல் மாண்ட வா பாடி தெள்ளேணம் கொட்டாமோ என்பார் மணிவாசகர்.



கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

என்னுடைய செயல் என்று ஒன்று இருக்காது.

இது அவன் திரு உரு, இவன் அவன் எனவே என்பார் மணிவாசகர்.

சத்தியத்தில் நிலை நிற்கும் போது தான் என்பது மறையும்.

உள் ஒளி வெளிப்படும்.


http://yogasutrasimplified.blogspot.in/2018/03/236.html

Saturday, March 24, 2018

யோக சூத்திரம் - 1.35 - பொறுப்பு

யோக சூத்திரம் - 1.35 - பொறுப்பு 



अहिंसाप्रतिष्ठायं तत्सन्निधौ वैरत्याघः ॥३५॥

ahiṁsā-pratiṣṭhāyaṁ tat-sannidhau vairatyāghaḥ ॥35॥

ahiṁsā = அகிம்சை

pratiṣṭhāyaṁ  = நிலை பெறுதல்

tat = அவர்களின்

sannidhau  = சூழ்நிலையில்

vairatyāghaḥ  = வைரா (சண்டை,  எதிர் குணம்) தியாக (விட்டு விலகும்)

இவரிடத்தில் அகிம்சை நிலை பெற்று இருக்கிறதோ, அவர்களை சுற்றி எதிர் குணம் (negative feelings ) இருக்காது.

இந்த உலகம் நம்மை எப்போதும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. ஒரு நிமிடம் நிம்மதியாக இருக்க விடுவதில்லை. ஏதாவது ஒரு பிரச்னையை கொண்டு வந்து நம் தலையில் போடுகிறது.

நாம் ஒன்றுமே செய்யாமல் சிவனே என்று இருப்போம். இருந்தும் இந்த உலகமே நம்மை விடுவது இல்லை.

ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை ?

ஏன் இவ்வாறு நிகழ்கிறது ?

பதஞ்சலி சொல்கிறார்.

யார் மனதில் அகிம்சை நிலைத்து நிற்கிறதோ அவர்களை சுற்றி  வெறுப்பும்,சண்டை சச்சரவும் இருக்காது என்கிறார்.

அதற்கும் நான் சொன்னதற்கும் என்ன சம்பந்தம் ?


மனதில் அகிம்சை இருந்தால் வெளியே வெறுப்பும் சண்டையும் இருக்காது என்கிறார். அது எப்படி ?

என் மனதில் அகிம்சை இருந்தால் வெளியே உள்ள உலகம் எப்படி மாறும்?

உலகம் மாறினால் அல்லவா சண்டை சச்சரவு தீரும்?


இல்லை. அங்கு தான் நாம் தவறு செய்கிறோம்.

நமக்கு நடக்கும் ஒவ்வொரு துன்பத்திற்கும் நாம் வேறு யாரையோ குறை சொல்கிறோம்.  "அந்தக் காலத்தில் , படிக்கிற காலத்தில் என்னை ஒழுங்காக படிக்க வைத்திருந்தால் " , "நல்ல இடத்தில் கட்டி கொடுத்திருந்தால் " என்று நமக்கு வரும் துன்பங்களை உலகின் மேல் ஏற்றுகிறோம். யாரும் அகப்படவில்லை என்றால்  இருக்கவே இருக்கிறார் கடவுள் அல்லது விதியின் மேல்  பழியைப் போட்டு விடுகிறோம்.

மொத்தத்தில் நாம் நல்லவர்கள். உலகம் தவறு என்று நினைக்கிறோம்.

அனைத்து சிக்கலுக்கும் அதுவே காரணம்.

நாம் நம்மை மாற்றினால் உலகம் மாறும்.

உங்களுக்கு என்ன துன்பம் என்று சிந்தியுங்கள். அதற்கு காரணம் உங்கள் மனம் தான் என்று    புரியும்.

உங்கள் பொறாமை , நீங்கள் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் உங்களை நிம்மதியாக அனுபவிக்க  விடாது. அடுத்தவன் மனைவி அழகு என்று நினைப்பு வந்துவிட்டால், குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் போய்  விடும். பக்கத்து வீட்டுக்காரன்  பிள்ளை அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்று நினைத்து விட்டால், பிள்ளை மேல் உள்ள பாசம் போய் விடும்.

உங்கள்  சந்தேகம்,கோபம், பொறாமை, வன்மம், பழி வாங்கும் குணம் போன்றவை இருக்கும் வரை உலகமும் அப்படித்தான் இருக்கும்.

உலகை பழி சொல்லி புண்ணியம் இல்லை.

உங்களை மாற்றுங்கள்

உங்கள் மனதில் அகிம்சை வந்தால், உங்களை சுற்றி வெறுப்பும் கோபமும் மறையும்.

உங்கள் மனதில் அன்பு வந்தால், உங்களைச் சுற்றி சாந்தம் தவழும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றார் வள்ளுவர்.

நமக்கு கெடுதல் செய்தவருக்கு நல்லது செய்யச் சொல்கிறார்.

ஏன் ? அவருக்கு திருப்பி கெடுதல் செய்தால் என்ன ?

செய்யலாம். அப்படிச் செய்தால் , அவர் நம் மீது பயம் கொண்டு நம்மிடம் மீண்டும் தவறு செய்ய மாட்டார்.

ஆனால், அந்த பழி வாங்கும் குணம் நமது மனதில் ஊறி விடும். அது ஒரு நஞ்சு.

நாம் அவருக்கு கொஞ்சம் கெடுதல் செய்யலாம். ஆனால், நமக்கு நாமே நிறைய தீமை செய்து கொள்வோம்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டச் சொன்னார் இயேசு பிரான். ஏன், திருப்பி அடிக்க முடியாமல் இல்லை.  அந்த பழி வாங்கும் குணம் இருக்கும் வரை , நமக்கு நிம்மதி கிடையாது.

நம் மனதில் இருக்கும் ஒவ்வொரு கெட்ட குணத்துக்கும், உலகம் பதில் தரும்.

அது ஒரு கண்ணாடி போல. நாம் எப்படி இருக்கிறோமோ, பிம்பமும் அப்படியே இருக்கும்.

உங்களுக்கு அமைதி,  சந்தோஷம், நிம்மதி, அன்பு  வேண்டுமா ?

உங்கள் மனதை பாருங்கள். அதில் உள்ள அழுக்கை கழுவுங்கள். உலகம் தானாக மாறும்.

பிறரை குறை கூறுவதை நிறுத்துங்கள். இந்த உலகம் இப்படி இருக்கக் காரணம் நீங்கள்தான் என்று உணருங்கள்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/135.html

Wednesday, March 21, 2018

யோக சூத்திரம் - 1.34 - எண்ணங்களும் விளைவுகளும்

யோக சூத்திரம் - 1.34 - எண்ணங்களும் விளைவுகளும் 



वितर्का हिंसादयः कृतकारितानुमोदिता लोभक्रोधमोहाअपूर्वका मृदुमध्य अधिमात्रा दुःखाज्ञानानन्तफला इति प्रतिप्रक्षभावनम् ॥३४॥

vitarkā hiṁsādayaḥ kr̥ta-kārita-anumoditā lobha-krodha-moha-āpūrvakā mr̥du-madhya adhimātrā duḥkha-ajñāna-ananta-phalā iti pratiprakṣa-bhāvanam ॥34॥

vitarkā = சந்தேகம், குழப்பம்

hiṁsādayaḥ = காயப் படுத்தும்

kr̥ta = தீமை செய்பவர்

kārita = செய்ய

anumoditā  = அனுமதிப்பவர்

lobha = பேராசை

krodha = கோபம், வெறுப்பு

moha = மயக்கம், குழப்பம்

pūrvakā = முன்பு, முன்னால் (பூர்வீகம்)

mr̥du = மிருதுவாக, மென்மையாக

madhya = மத்திய, நடுத்தரமாக

adhimātrā = அதிகமாக

duḥkha = துக்கம்

ajñāna = அஞ்ஞானம்

ananta = எல்லையற்ற

phalā = வெளிப்பாடு

iti = இதுவே

pratiprakṣa =எதிர் நிலையான

bhāvanam  = மனோ பாவம் ॥34॥


வன்முறையான எண்ணங்கள் முடிவில்லா துன்பத்தையும் அறிவீனத்தையும் தரும். நீங்கள் செய்பவரா அல்லது செய்யத் தூண்டுபவரா என்பது முக்கியம் அல்ல. அல்லது அந்த வன்மையான எண்ணங்கள் பேராசை, மயக்கம், குழப்பம் போன்றவற்றால் தோன்றியதா அல்லது வேறு எதில் இருந்தும் தோன்றியதா என்பது முக்கியம் அல்ல. அது போல, அந்த எண்ணங்கள் வலிமை குறைந்ததா, வலிமையானதா, அல்லது இரண்டுக்கும் இடைப் பட்டதா என்பதும் முக்கியம் அல்ல. எது எவ்வாறாயினும் ,  நல்லது அல்லாத எண்ணங்களுக்கு மருந்து அதற்கு எதிரான நல்ல எண்ணங்களை கொள்வதுதான்.

இது ஒரு மிக மிக முக்கியமான சூத்திரம்.

கவனமாக வாசியுங்கள். ஒன்றுக்கு பல முறை வாசிக்க வேண்டும்.


முந்தைய சூத்திரத்தில், ஒரு தவறான அல்லது நெகடிவ் எண்ணங்கள் வந்தால் அதை நல்ல அல்லது பாசிட்டிவ் எண்ணங்கள் மூலம் சரி செய்யலாம் என்று பார்த்தோம்.

இங்கே அதை மேலும் விளக்குகிறார்.

எண்ணங்கள் செயலில் முடிகின்றன. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த எண்ணங்களை கொண்டிருக்கிறோமோ, அந்த எண்ணங்கள் அதற்கு உண்டான செயலை , விளைவை உண்டாக்கும். கட்டாயமாக.

நான் முட்டாள், நான் முட்டாள் என்று எந்நேரமும் நினைத்துக் கொண்டே இருந்தால், நாளடைவில் முட்டாளாகவே ஆகி விடுவோம். சர்வ நிச்சயமாக.

இதில் பதஞ்சலி மிக முக்கியமான ஒன்றை சொல்கிறார்.

அந்த எண்ணங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டாலும் சரி அல்லது மற்றவர்கள் உங்களுக்குள் ஏற்றி விட்டாலும் சரி, விளைவு ஒன்றுதான்.

கெட்ட எண்ணங்கள், தீய எண்ணங்கள், தவறான எண்ணங்கள், நன்மை தராத எண்ணங்கள் அவை கொஞ்சமாக, நடுத்தரமாக அல்லது அதிகமாக எப்படி இருந்தாலும் அதற்கேற்ப தீமை பயக்கும்.


எனவே, அவற்றை அடியோடு உடனே அழித்து ஒழிக்க வேண்டும்.

அதற்கு முந்தைய சூத்திரத்தில் கூறிய எதிர் மனோ பாவம் உதவும்.

எனவே,

எப்போதும் உங்கள் மனதில் என்ன ஓடுகிறது என்று கவனியுங்கள்.

பொறாமை, பயம், கோபம், வெறுப்பு, எரிச்சல், துவேஷம், சலிப்பு, சோம்பல், நம்பிக்கை இன்மை, தன்னம்பிக்கை இன்மை , சந்தேகம் என்று இது போன்ற தவறான எண்ணங்கள் இருந்தால் உடனே அதற்கு எதிர் மறையான எண்ணங்களை கொண்டு வாருங்கள்.

உங்களை சுற்றி உள்ளவர்களை எடை போடுங்கள். அவர்கள் உங்களுக்குள் விதைக்கும்  எண்ணங்களை பற்றி சிந்தியுங்கள். இதில் சிக்கல் என்ன என்றால் உங்களுக்கு மிக மிக அருகில் உள்ளவர்கள் உங்களுக்குள் விதைக்கும் எண்ணங்கள் உங்களுக்கு சட்டென்று விளங்காது.

பெற்றோர், கணவன், மனைவி, சகோதர சகோதரிகள் இவர்கள் உங்களை பற்றி உங்களிடம் சொல்லும் எண்ணங்கள் மிக இயல்பாக உங்களுக்குள் சென்று படிந்து விடும். கவனமாக இருங்கள். "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று மனைவி கணவனைப் பார்த்து அடிக்கடி சொல்லுவது வேண்டுமானால் மிக இயல்பாக இருக்கலாம். ஆனால், அந்த நஞ்சு நாளடைவில் அவன் பல தவறுகள் செய்ய இடம் கொடுத்து விடும். ஒன்றும் தெரியாததால் தவறு செய்து விடுவான். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்காது. நன்றாகத்தானே உழைக்கிறேன் எனக்கு ஏன் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்று கணவன் மண்டையை உடைத்துக் கொண்டிருப்பான்.  காரணம் அவனுக்குள் விதைக்கப் பட்ட நஞ்சு "உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாது "என்று அடிக்கடி சொல்லப்பட்டது.

உங்கள் நன்பர்கள், அலுவலக அதிகாரிகள், உறவினர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர், மாமனார், நாத்தனார், அக்கம் பக்கத்து வீட்டுக் காரர்கள்  என்று பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். இதில் யார் யார் உங்களுக்குள் நல்ல எண்ணங்களை விதைக்கிறார்கள், யார் யார் நல்லது  அல்லாத  எண்ணங்களை விதைக்கிறார்கள் என்று பாருங்கள்.

அடுத்தது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றவர்களுக்கு. நீங்கள் மற்றவர்களுக்குள் தீய எண்ணங்களை விதைத்தால் அது உங்களுக்குள்ளும் இருக்கும். "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று சொல்லும் மனைவி தனக்குள்ளும் அந்த எண்ணங்களை விதைத்துக் கொள்ளுகிறாள். தன்னிடம் ஒன்றும் இல்லை என்பதை மறைக்க மற்றவர்களிடம் ஒன்றும் இல்லை. நான் அவர்களை விட மோசம் இல்லை என்று தனக்குத் தானே உறுதி செய்து கொள்ளும் உத்தி.

நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம், கணவன்/மனைவியிடம், நண்பர்களிடம், உறவினர்களிடம் என்ன மாதிரி எண்ணங்களை விதைக்கிறீர்கள் என்று கவனியுங்கள். நீங்கள் விதைத்தாலும் , உங்களுக்குள் விதைக்கப்பட்டாலும் விளைவு ஒன்று தான்.

அடுத்தது, நீங்கள் வாழும் இடம் மற்றும் அதன் சூழ்நிலை. நன்றாக உங்கள் மனதை கவனித்துப் பாருங்கள். ஒரு கோவிலுக்குப் போகிறீர்கள். உள்ளே நுழைந்தவுடன் உங்கள் மனதில் ஒரு மெல்லிய மாற்றம் நிகழ்வதை கவனித்துப் பாருங்கள். நீங்கள் உங்கள் உள்ளுணர்வை கூர்மை படுத்திக் கொண்டால் அந்த மெல்லிய மன மாற்றங்களை உங்களால் அறிய முடியும். "அந்த கோவிலுக்கு போய் விட்டு வந்தால் , ஏதோ ஒரு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது " என்று சொல்ல கேட்டு இருக்கிறீர்களா ? ஏன் அப்படி ? கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.  அவர்களின் எண்ணங்கள் உங்களை பாதிக்கும். ஒரு எதிர்பார்ப்போடு, ஒரு நம்பிக்கையோடு பலர் அங்கே வருவதால், அவர்களின் நம்பிக்கை எண்ணங்கள் உங்களையும் பாதிக்கும், உங்களுக்குள்ளும் ஒரு நம்பிக்கையை உண்டாக்கும்.

மாறாக ஒரு மருத்துவ மனைக்கு சென்று பாருங்கள்.  உங்கள் மன நிலை வேறு மாதிரி மாறும்.

நீங்கள் வாழும் இடம், பணி புரியும் இடம், நீங்கள் செல்லும் இடங்கள் உங்கள் மனதை பாதிக்கும். சினிமா கொட்டகை, உணவு விடுதி இங்கெல்லாம் மக்கள் தங்கள் எண்ணங்களை விட்டுச் செல்கிறார்கள். உங்களை அறியாமலேயே அவை உங்களுக்குள் செல்லும்.

எனவே தான், நாம் வாழும் இடம், நம்மை சுற்றி உள்ளவர்கள், நாம் அடிக்கடி போகும் இடம் இவற்றை பற்றி நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும். தேவை என்றால் மாற்றவும் வேண்டும்.

உங்கள் கணவரோ மனைவியோ உங்களுக்குள் தீய எண்ணங்களை விதைத்துக் கொண்டிருந்தால், அவர்களிடம் சொல்லித் திருத்துங்கள்.

முடியவில்லையா, அவர்கள் சொல்வதற்கு எதிர் மனோ பாவத்தை கொண்டு வாருங்கள்.

உலகை நம்மால் திருத்த முடியாது. எனவே நாம் எப்படி நம்மை சரி செய்து கொள்ளலாம் என்று பதஞ்சலி சொல்லித் தருகிறார்.

எண்ணங்களை கவனியுங்கள்.

அவை வாழ்க்கையை உண்டாக்குபவை.

தூக்கத்தில் இருந்து விழித்துக் கொள்ளுங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள்.

நலமே அடைய வாழ்த்துக்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/134.html

யோக சூத்திரம் - 1.33 - எதிர்பதம்

யோக சூத்திரம் - 1.33 - எதிர்பதம் 


वितर्कबाधने प्रतिप्रक्षभावनम् ॥३३॥

vitarka-bādhane pratiprakṣa-bhāvanam ॥33॥

vitarka  = சந்தேகம்

bādhane = செயல்படும் போது

pratiprakṣa  = எதிர்பதம்

bhāvanam = பாவனை  ॥33॥

செயல்படும்போது சந்தேகம் வந்தால் அதற்கு எதிர்பதத்தை பாவிக்க வேண்டும்.

இதுக்கு சமஸ்கிரதமே பரவாயில்லை போல் தெரிகிறதா?

பொறுமை...பொறுமை.

உடலுக்கு நோய் வருவது போல மனதுக்கும் நோய் வரும். கோபம், தாபம், தயக்கம், பட படப்பு (anxiety ), பயம், மன அழுத்தம் (depression ), பொறாமை , என்று எவ்வளவோ மனம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வரும். அவற்றை எவ்வாறு சரி செய்வது ?

உடலுக்கு ஒரு சிக்கல் என்றால், அதை சரி செய்து கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. உடம்பு அந்த சிக்கலை தானே சரி செய்து கொள்ளும். முடியாத நேரங்களில் நாம் சில மருந்துகளை தந்து அதை குணப் படுத்தலாம்.

உதாரணமாக, நாள் பட்ட உணவை உண்டால், வாந்தி பேதி என்று வந்து உடம்பு அந்த கெட்ட உணவை வெளியே தள்ளி விடும்.

காயம் பட்டு, இரத்தம் கசிந்தால், தானே இரத்தம் உறைந்து மேலும் இரத்தம் வெளியேறுவதை தடுக்கும்.


மனதுக்கு அப்படி ஒரு வழி இல்லை. சிக்கல் வந்தால், அதை தானே சரி செய்து கொள்ளத் தெரியாது.

நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்று பதஞ்சலி சொல்கிறார்.

உங்களுக்கு எந்த விதமான மன சிக்கல் இருக்கிறதோ அதற்கு எதிரான மன நிலையை பாவித்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக,

ஒருவர் மேல் உங்களுக்கு அளவு கடந்த கோபம். ஏனோ தெரியவில்லை, அவரைப் பார்த்தாலே பத்திக் கொண்டு வருகிறது. அனால், அவர் உங்கள் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். அவரை தவிர்க்கவும் முடியாது.

என்ன செய்யலாம் ?

கோபத்திற்கு எதிர் நிலை, அன்பு, கருணை. அவர் மேல் அன்பு செலுத்துங்கள் என்று சொல்லவில்லை. மனதில் அன்பை வரவழைத்துக் கொள்ளுங்கள். கோபம் போய் விடும். அன்பு என்ற பாவனை கொள்ளுங்கள். மனம் ஒரே நேரத்தில் இரண்டு எதிர் நிலையில் இருக்க முடியாது.

அன்பு இருந்தால் , கோபம் இருக்காது. கோபம் இருந்தால் அன்பு இருக்காது.

மனம் சோர்வாக இருக்கிறதா (depression )? மிக மிக உற்சாகமாக இருப்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். சுறு சுறுப்பாக இருப்பதாக கற்பனை செய்யுங்கள். உடனே நீங்கள் எழுந்து ஓட வேண்டாம். சுறு சுறுப்பாக இருந்தால் மனம் எப்படி பர பரப்பாக இருக்குமோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள். சோர்வு பறந்து விடும்.

பயமாக இருக்கிறதா? மிக மிக தைரியமாக இருப்பதாக பாவித்துக் கொள்ளுங்கள். தைரியம் வருகிறதோ இல்லையோ, பயம் போய் விடும்.

தயக்கம் இருக்கிறதா? உறுதியாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் மனம் எப்படி இருக்கிறதோ, அதையே எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தால், அந்த மன நிலையே மேலும் உறுதிப்படும்.

வாழ்வில் எதைப் பார்த்தாலும் பயமாக இருந்தால், எல்லோரிடமும் அதையே சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். மாறாக, "பயமா, எனக்கா, எனக்கு எதை கண்டும் பயம் இல்லை ..." என்று சொல்லுங்கள். நாளடைவில் பயம் உங்களை விட்டு விட்டுப் போய் விடும்.

பல மாணவர்களுக்கு கணக்கை கண்டால் காலனை கண்டதைப் போல பயம். எனக்கு கணக்கு வராது, கணக்கு டீச்சர் சரி இல்லை, கணக்கு புத்தகம் சரி இல்லை என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். அப்படி சொல்லிக் கொண்டிருந்தால் கட்டாயம் கணக்கு வராது.

மாறாக, 'கணக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும். கடினம் என்றாலும் அதில் ஒரு த்ரில் இருக்கு. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ , நான் கணக்கு போட்டு பார்ப்பேன் " என்று சொல்ல வேண்டும்.

எனக்கு வயதாகி விட்டது. நின்னா உக்கார முடியல, உக்காந்தா நிக்க முடியலை என்று ஒரு நோயாளி போல சொல்லிக் கொண்டு திரியக் கூடாது.

வயதான காலத்திலும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அது தான், எதிர் வினை.

மனம் போல மாங்கல்யம் என்று சொல்லுவார்கள்.

நாம் என்ன நினைக்கிறோமோ அதுவே நடக்கும். உலகுக்கு அல்ல, நமக்கு.

எனவே, எப்போதும் நல்ல சிந்தனைகளை மட்டும் மனதில் வையுங்கள்.

எப்போது பார்த்தாலும் ஏதாவது பிரச்சனை என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்களை விட்டு தூர விலகி நில்லுங்கள்.

நல்லவர்களோடு சேர்ந்து இருங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். மனதை உயர்ந்த சிந்தனைகளால் நிறையுங்கள்.

வாழ்வு சிறப்பாக இருக்கும்.

இருக்கட்டும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/133.html




Tuesday, March 20, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 5

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 5



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

தூய்மை, சந்தோஷம், தவம் , தன்னை அறிவது   பற்றி சிந்தித்தோம். 

கடைசியாக சரணாகதி. ஈஸ்வர ப்ரணிதானி.

ஈஸ்வரன் என்று இங்கே குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட கடவுளை அல்ல. சிவா, விஷ்ணு, அல்லா, இயேசு என்று எந்த ஒரு கடவுளையும் குறித்து அல்ல.

சரணாகதி என்றால் வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது. வாழ்வோடு சண்டை போடுவது கிடையாது. எது வந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வது. 

அப்படி என்றால், ஒரு முயற்சியும் வேண்டாமா ? துன்பம் வந்தால் அதை எதிர்த்து போராட வேண்டாமா ? நோய் வந்தால் அதற்கு வைத்தியம் பார்க்காமல் அந்த நோயையை சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமா ? அது என்ன பைத்தியகாரத் தனமாக இருக்கிறதே என்று கேள்வி எழலாம். 

அது அல்ல அர்த்தம். 

எது நடந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு அதில் இருந்து மேலும் எப்படி வாழ்க்கையை மேம்படுத்துவது என்று யோசிக்க வேண்டும். 

சில உதாரணங்கள் தர முடியும். 

யேசுதாஸ் ஒரு பெரிய பாடகர். பல பட்டங்கள், பெருமைகள் கொண்டவர். அவர் குரலுக்கு மயங்காதவரே கிடையாது. 

அவர், திருவனந்தபுரம் வானொலியில் அறிவிப்பாளராக சேர விண்ணப்பம் செய்தார்.  அவர் குரலை கேட்டுவிட்டு, அது நன்றாக இல்லை என்று சொல்லி அவருக்கு அந்த வேலை தரவில்லை. 

நல்ல அரசாங்க உத்யோகம் போய் விட்டது. என்ன செய்வது. கையில் காலணா இல்லை. வேலையும் இல்லை. 

தோல்வி  தானே ?  வருத்தம் தானே?

அந்த வருத்தத்தோடு, வண்டி ஏறி சென்னை வந்தார். கர்நாடக சங்கீதம் பயின்றார். உலகப் புகழ் பெற்றார். 

ஒரு வேளை அவர் அந்த அறிவிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால்? 

வாழ்க்கையில் எது  வந்தாலும்,அதை பிரசாதம் போல ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவும் நல்லதிற்கே என்று ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்ல வேண்டும். 

வேண்டத் தக்கது அறிவோய் நீ 
வேண்ட முழுவதும் தருவோய் நீ 

என்பார் மணிவாசகர். எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும் என்று வாழ்வை நடத்திச் செல்வது. 

வாழ்வோடு போராட்டம் இல்லை. வாழ்வோடு சுமுககமாகப் போவது. 

எப்படி இருந்தாலும் வாழ்விலே தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது.

மிக மிக அருமையான, இது வரை யாரும் சொல்லாது வழியைச் சொல்கிறார் பதஞ்சலி. 

கோபம், வருத்தம், சோகம், தனிமை, மன அழுத்தம் என்று வரும் போது என்ன செய்ய வேண்டும் ? அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்று இது வரை யாரும் சொல்லாத ஒன்றை சொல்கிறார். 

அது என்ன ?

http://yogasutrasimplified.blogspot.com/2018/03/132-5.html

Monday, March 19, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 4


யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 4



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

தூய்மை, சந்தோஷம், தவம்   பற்றி சிந்தித்தோம். 

அடுத்தது தன்னை அறிவது. 

Self Study.

தூய்மை, சந்தோஷம் மேலும் தவம் இவற்றை கடந்த பின் தான் தன்னைத் தான் அறிய முடியும். 


தன்னைத் தான் அறிவது என்றால் என்ன?

நாம் என்று கூறுவது நமது மனம், அறிவு, ஞாபகம், சிந்தனை இவற்றின் தொகுதி. இல்லையா?

இந்த அறிவு, ஞாபகம், சிந்தனை என்பது நம்முடைய சிந்தனையா? நம் அறிவா? 

நமக்குள் ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது. 

நமது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் படித்த புத்தகங்களின் ஆசிரியர்கள் என்று எல்லோரும் நமது மண்டைக்குள் இருந்து கொண்டு நம்மை ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்கிறார்கள். 

அது சரி, இது தவறு, மதம், கடவுள், பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று ஆயிரம் விஷயங்கள்  நமது மண்டைக்குள் திணிக்கப் பட்டு இருக்கிறது. 

இவை எதுவும் நமக்குச் சொந்தமில்லை. நாம் அறியாத வயதில் நமக்குள் திணிக்கப் பட்டவை. 

இவற்றை எல்லாம் தள்ளிவிட்டு, உண்மையிலேயே நாம் யார் என்று அறிய வேண்டும். 

சங்கரர் ஒரு புறம், இராமானுஜர் மறு புறம், இயேசு, முகமது, புத்தர், மஹாவீரர், வள்ளுவர், கம்பர், வியாசர், கார்ல் மார்க்ஸ், என்று ஒரு பெரிய கும்பல் உள்ளே இருக்கிறது. 

இதில் யார் சொல்வது சரி, யார் சொல்வது தவறு என்று எப்படி கண்டு பிடிப்பது. எல்லாம் சரி என்றால், முரண்களை எவ்வாறு சரி செய்யவது?

நாம் யாரை வேண்டுமானாலும் , அவர் சொல்வது தான் சரி என்று நினைக்கலாம். நாம் நினைப்பதால் அது சரியாக இருக்க வேண்டும் இல்லை. ஒவ்வொருத்தரும் தாங்கள் நம்பும் குரு தான்  சரி என்று நம்புகிறார்கள். நம்புவது என்ன பெரிய காரியம். யார் வேண்டுமானாலும் , எதை வேண்டுமானாலும் நம்பலாம். 

எனவே, இவர்களை எல்லாம் விலக்கி விட்டு, உண்மையிலேயே நாம் யார் என்று அறியத் தொடங்க வேண்டும். 

நமது ஆசைகள் , பயங்கள், கனவுகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், இவை எல்லாம் எங்கிருந்து வந்தன, அவற்றிற்கு காரணம் என்ன என்று யோசிக்க வேண்டும். 

கடன் வாங்கிய ஞானத்தை திருப்பிக் கொடுத்து விட்டு, உண்மையில் நாம் யார் என்று அறிய வேண்டும். 

பல மூக மூடிகளை அணிந்து கொண்டிருக்கிறோம். ஆண் , பெண், குலம் , ஜாதி, நாடு, மொழி, அரசியல் சார்பு, சமய சார்பு, குரு சார்பு என்று முக மூடியின் மேல் முகமூடி .போட்டுக் கொண்டு, நித்தம் கண்ணாடியில் பார்த்து அந்த முகமூடியில் உள்ளது தான் நம் முகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான முகம் எது என்றே தெரியாமல் இருக்கிறோம். 

நாடகத்தில் இராஜா வேடம் போட்டவன், அதே வேடத்தோடு, தான் உண்மையிலேயே இராஜா என்று நினைத்து உலாவிக் கொண்டிருந்தால் அது எவ்வளவு பைத்தியக்காரத்தனமோ, அதே போல் நாம் அலைந்து கொண்டிருக்கிறோம்.

உண்மை முகம் என்ன என்று அரியத் தலைப்படுவோம். 

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-4.html

Friday, March 16, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 3

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 3



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

தூய்மை, சந்தோஷம் பற்றி சிந்தித்தோம். 

அடுத்தது தவம். 

தவம் என்றால் என்ன? 

சில வார்த்தைகள் சமஸ்க்ரிதத்தில் ஒரு அர்த்தம் தரும். அதே போல் வார்த்தை தமிழிலும் இருக்கும். தமிழ் தெரிந்தவர்களுக்கு உடனே தமிழ் அர்த்தம் தான் உடனே தோன்றும். 

தவம் என்றால் காட்டில் போய் , இறைவனை நோக்கி ஒரு மனதாக பிரார்த்தனை பண்ணுவது என்று தோன்றும். 

சமஸ்க்ரிதத்தில் தவம் என்றால் எளிய, சிக்கனமான என்று பொருள். Austerity என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது. 

அது என்ன சிக்கன, எளிய வாழ்க்கை ?

சிக்கனம் என்றால் கருமித்தனம் அல்ல. தேவைக்கு அதிகமாக எதையும் கொள்வது கிடையாது. அதே போல் எல்லாவற்றையும் சந்தோஷமாக அனுபவிப்பது அவற்றை சொந்தம் கொண்டாடாமல். 

சற்று விரிவாக பார்ப்போம். 

அளவுக்கு அதிகமாக எதையும் கொள்வதால் தான் அனைத்து சிக்கலும் வருகிறது. 

அளவுக்கு அதிகமாக உண்பதால் அனைத்து நோயும் வருகிறது. 

அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்க வேண்டும் என்று நினைப்பதால் பதற்றம், பயம், நடுக்கம், போட்டி, பொறாமை, வாழ்க்கையை அனுபவிக்காமல் பணத்தின் பின் செல்வது என்று  நிகழ்கிறது. 

பேராசை போல் ஒரு அழிவு கிடையாது. 

தேவைக்கு மட்டும் அனுபவிப்பது. 

எத்தனை சட்டை வேண்டும் - அஞ்சு அல்லது ஆறு போதாதா ?

எத்தனை புடவை வேண்டும் ? பத்து பதினைஞ்சு ? 

வாங்கி அடுக்குவது. எதற்கு ?

எத்தனை செருப்பு வேண்டும் ? எத்தனை கை பை வேண்டும் ? 

எதிலும் ஒரு கணக்கு. தேவைக்கு அதிகமாக மனிதன் சேர்க்க / அனுபவிக்க நினைப்பதால் இயற்கை வளங்களை  சுரண்ட வேண்டி இருக்கிறது. மண் வளம் இழந்து போகிறது. சுற்று சூழல் மாசு படுகிறது. 

நமக்குத் தேவை இல்லை என்றாலும், மற்றவர்களுக்கு காட்டுவதற்காக பெரிய கார், அளவுக்கு அதிகமான நகை, என்று வாங்கி குவிக்கிறோம். 

அது நமது வாழ்க்கை இல்லை. மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்று அவர்கள் எதை பாராட்டுவார்களோ அந்த வாழ்க்கை வாழ்க்கை வாழ்கிறோம். 

எத்தனை பேருக்காக நாம் வாழ முடியும். 

நம் மனதுக்கு சந்தோஷமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டும். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா.  அது தான் முக்கியம். 

தேவைகள் குறைந்தால், பணம் பணம் என்று அலைவது குறையும். 

தேவைகளை குறைத்து என்று சொல்லும் போது ஏதோ கஞ்சத் தனமான வாழ்க்கை வாழச் சொல்லவில்லை. 

நமக்கு எது தேவையோ  அவற்றை கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வது.

அப்படி ஒரு வாழ்க்கை வாழும் போது , மனம் உள் நோக்கித் திரும்பும். இல்லை என்றால் வேறு என்ன வாங்குவது, சந்தையில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்று அலையும். அதை அடைய பணம் சம்பாதிக்க ஓடும். முடிவில்லா ஓட்டம் அது. 

நிறைவான வாழ்க்கை. எளிய வாழ்க்கை. அது தவம். 

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-3.html

Thursday, March 15, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 2



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

நேற்று தூய்மை பற்றி சிந்தித்தோம்.

அடுத்தது "சந்தோஷம்".

யாராவது சந்தோஷமாக இருக்கிறார்களா ? எல்லோரும் சந்தோஷத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். யாரும் அதை அடைந்த மாதிரி தெரியவில்லை. 

நான் சந்தோஷத்தை அடைந்து விட்டேன் என்று யாராவது சொல்கிறார்களா?

அதை மட்டும் அடைந்து  விட்டால், அப்புறம் சந்தோஷமாக இருப்பேன் என்று எத்தனையோ நினைத்து அடைந்தும் இருக்கிறோம். சந்தோஷம் வந்ததா ? இல்லை. 

எதை அடைய வேண்டும் என்று நினைத்தோமோ, அதை அடைந்தவுடன், அதை விட பெரியது வேண்டும் என்று மனம் அடுத்ததை நோக்கி பயணப் படுகிறது. சந்தோஷம் என்பது ஒரு கானல் நீராகவே இருக்கிறது. 

உங்களுக்கு இருப்பதை எல்லாம் ஒரு பட்டியல் போடுங்கள். அவை வேண்டும் என்று கனவு காண்பவர் உலகில் கோடி. அவை எல்லாம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. ஒரு நிமிடம் சந்தோஷமாக இருந்து பாருங்களேன்.

இதற்கு காரணம் என்ன ? எல்லாம் இருந்தும் ஏன் நாம் ஏன் சந்தோஷமாக இருக்க மாட்டேன் என்கிறோம்?

சந்தோஷமாக இருப்பது ஒரு குற்றம் என்று நம் மனதில் ஆழப்  பதிந்து விட்டது.

துக்கம்தான் நமது இயற்கையான நிலை. சந்தோஷம் என்பது எப்போதாவது வந்து போவது என்று நினைக்கிறோம். 

சந்தோஷமாக இருந்தால் ஏதோ தவறு என்று நினைக்கிறோம்.

நினைத்துப் பார்த்தால் சந்தோஷப்பட அவ்வளவு இருக்கிறது. ஒவ்வொன்றையும் நினைத்து அவ்வளவு சந்தோஷப் படலாம்.

எல்லாவற்றையும் விடுங்கள். சொத்து, சுகம், கார், வீடு, வாசல், நகை, பதவி, பணம் எல்லாவற்றையும் விடுங்கள்.

முயற்சி இல்லாமல் இயல்பாக மூச்சு விட முடிகிறதா? எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம்.  ஆஸ்துமா வந்து துன்பப் படுகிறவர்களிடம் கேட்டுப் பாருங்கள். மூச்சு விடுவது எவ்வளவு சந்தோஷமான விஷயம் என்று சொல்லுவார்கள்.

வலி இல்லாமல் நீர் பிரிகிறதா. அந்த சில நொடிகளை அனுபவியுங்கள். கிட்னியில் கல் வந்து நீர் பிரிய துடித்துப் போபவர்களை கேட்டுப் பாருங்கள் அது என்ன சுகம் என்று தெரியும்.

நேற்று இரவு தூங்கினீர்களா? என்ன சுகம்.

இப்படி யோசித்துப் பார்த்தால், சந்தோஷம் கொட்டிக் கிடக்கிறது. அள்ள அள்ள குறையாத  அளவு சந்தோஷம் உங்களுக்கு இருக்கிறது.

அதை எல்லாம் விட்டு விட்டு, இல்லாத ஒன்றை நினைத்து துன்பப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.

முயற்சி செய்ய வேண்டியதுதான். பெரிதினும் பெரிது கேட்க வேண்டியது தான். ஆனால், அது கிடைத்தால்தான் சந்தோஷமாக இருப்பேன் என்று சொல்லாதீர்கள்.

இப்போது சந்தோஷமாக இல்லாவிட்டால், அது கிடைத்தாலும் சந்தோஷமாக இருக்க மாட்டீர்கள்.

 கிடைத்த   ஒவ்வொரு சந்தோஷத்தையும் அனுபவியுங்கள். இந்த நொடியில் எப்படி சந்தோஷமாக இருப்பது என்று பாருங்கள். நாள் முழுவதும் சந்தோஷத்தால் நிறையுங்கள்.

இது ஏதோ போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து மன நிலை அல்ல. இருப்பதில் சந்தோஷம் காண்பது.

நமது இயற்கையான நிலையே சந்தோஷமாக இருப்பது தான். துக்கம் நாமே தேடிக் கொள்வது.

சிரியுங்கள். அன்பைக் கொட்டுங்கள். அன்பை அள்ளுங்கள். கிடைத்த அனைத்துக்கும் நன்றி சொல்லுங்கள்.

பரமானந்த சாகரத்தே என்பார் அருணகிரி.

கடல் போல் ஆனந்தம் முன்னே கிடைக்கிறது. கிளிஞ்சல்களை தேடி பொறுக்கிக் கொண்டு இருக்கிறீர்கள். அவனுக்கு அவ்வளவு கிளிஞ்சலா ? என்னை விட அவனுக்கு அதிகமா என்று பொறாமை வேறு.

சந்தோஷமாக இருங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர். ஒரு குறையும் இல்லை.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-2.html

Tuesday, March 13, 2018

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் - பாகம் 1

யோக சூத்திரம் - 1.32 - நியமங்கள் -   பாகம் 1



शौच संतोष तपः स्वाध्यायेश्वरप्रणिधानानि नियमाः ॥३२॥

śauca saṁtoṣa tapaḥ svādhyāy-eśvarapraṇidhānāni niyamāḥ ॥32॥

śauca = தூய்மை

saṁtoṣa = நிறைவு, சந்தோஷம்

tapaḥ  = தவம்

svādhyāy = தன்னில் அறிவது

eśvarapraṇidhānāni  = ஈஸ்வர ப்ரணிதானி

niyamāḥ  = நியமம் ॥32॥

இயமம் என்பது என்ன என்று முந்தைய சூத்திரத்தில் பார்த்தோம்.

இங்கே நியமம் என்றால் என்ன என்று சொல்கிறது யோக சாத்திரம்.

இயமம் என்பது நமக்கும் வெளி உலகுக்கும் உள்ள தொடர்பு பற்றியது. நியமம் என்பது நமக்கு நாமே செய்யக் கூடியது.

நாம், நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால், முதலில் நமக்கும் வெளி உலகுக்கும் உள்ள  உறவை சரி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால்  அது நம்மை தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

உதாரணமாக, இயமம் என்பதில் திருடாமை பற்றி சொன்னார். நாம் திருடி விட்டால், என்ன தான் தியானம், பூஜை, தவம் செய்தாலும் , மாட்டிக் கொள்வோமோ என்ற  பயம் இருந்து கொண்டே இருக்கும். மாட்டிக் கொண்டால் பின்  நம்மால் நம் விருப்பப் படி எதுவும் செய்யக் முடியாது. எனவே, வெளி உலக உறவை முதலில் சரி செய்த பின்,  அக உலகுக்கு வர வேண்டும்.

சிலருக்கு பொறுமை இருக்காது. எவ்வளவு நாள் இந்த வெளி உலக உறவை சரி செய்து கொண்டு இருப்பது என்று  சலித்து, உலக தொடர்புகளை விட்டு விட்டு  துறவியாக காடு மலை நோக்கி சென்று விடுகிறார்கள். ஊருக்குள் இருந்தால் தானே  ஊரைப் பற்றி கவலைப் பட வேண்டும்.

எல்லோராலும் அது முடிவது இல்லை. யோக சாத்திரத்தின் நோக்கமும் அது அல்ல. அது எல்லோரையும் சாமியாராகப் போகச் சொல்லவில்லை.

அக உலகுக்கு வரும் போது , முதல் படி தூய்மை.

எது தூய்மையாக இருக்க வேண்டும்?

முதலில் உடல் தூய்மை.

நாம் என்பது பெரும்பாலும் உடல் தான். மிகச் சிறிய அளவே மனம், அறிவு, ஆத்மா என்று  வருகிறது. இல்லை என்றால், நாம் நம் உடலைத்தான் நாம் என்கிறோம்.

உடல் தூய்மைக்கு முதல் தேவை தூய்மையான உணவு. நாம் சாப்பிடும் உணவு தான் நாம்.  நாம் எதை சாப்பிடுகிறோமோ , அதாகவே இருக்கிறோம்.
You are what you eat என்று சொல்லுவார்கள்.  முதலில் உணவு தூய்மை வேண்டும்.

போதை ஊட்டக் கூடிய மது, காப்பி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். எது உங்கள மனதை தவறான வழியில் கொண்டு சொல்கிறதோ, அதைத் தவிருங்கள். எது தவறான வழியில் கொண்டு செல்கிறது என்று நீங்கள் தான் கூர்மையாக கவனிக்க வேண்டும். உள்ளுணர்வை கூர்மையாக வைத்துக் கொண்டால், எந்த உணவு   எந்த மன நிலையை தருகிறது என்று அறிய முடியும்.  உள்ளுணர்வு கூர்மை படாவிட்டால் , விலங்குகள் போல , தீனி தின்பது போல எதை வேண்டுமானாலும் உண்பது என்று ஆகி விடும்.

உடல் எப்படி அதற்கு தரும் உணவைப் பொறுத்து மாறுகிறதோ, அது போலவே மூளையும்/மனமும். அதற்குள் எதைப் போடுகிறோமோ அதைப் பொறுத்து  அது மாறும்.


உயர்ந்த நூல்களை படிக்க வேண்டும். கற்றறிந்த நல்லவர்களோடு பழக வேண்டும். மனதை கெடுக்கும் நூல்கள், டிவி சீரியல்கள், தேவையற்ற வெட்டி பேச்சு என்று இவற்றை தவிர்க்க வேண்டும். இவை மனதை கெடுக்கும். Whatsapp , facebook  என்று  இவற்றின் மூலம்  அர்த்தம் இல்லாத பேச்சுகள், வீண் அரட்டைகள் என்று  பொழுது போனாலும், அவை நம்மை அறியாமலேயே நம் மனதை பாதிக்கின்றன. உங்கள் மூளைக்குள் எவை எல்லாம் போகின்றனவோ, அவை எல்லாம் உங்களை கட்டாயம் பாதிக்கும்.


whatsapp மெசேஜ்  படித்தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்காதீர்கள்.  அந்த விஷம் கொஞ்சம் கொஞ்சமாக மனதுக்குள் ஏறும். நீங்கள் அறியாமலேயே அது உங்களை பாதிக்கும். கவனமாக இருக்க வேண்டும்.

உண்ணும் உணவு, படிக்கும் புத்தகங்கள்/கேட்கும் செய்திகள் இவை உடலையும் மனதையும் பாதிக்கும்.

உடல் தூய்மை என்பது உணவில் மட்டும் அல்ல. உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்வது. தூய்மையான ஆடைகளை அணிவது. வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது என்று அனைத்து விதத்திலும் தூய்மையை கடை பிடிக்க வேண்டும்.

கண்ட இடத்தில் குப்பை போடுவது, எச்சில் துப்புவது, சிறு நீர் கழிப்பது, என்று இருக்கக் கூடாது.

நாம் இருக்கும் இந்த உடல், வீடு, அலுவலகம், நம் தெரு, நம் நாடு என்று அனைத்து இடத்திலும் தூய்மை வேண்டும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

நாட்டில் எங்கும் குப்பை கூளம் கிடையாது, சாக்கடை தண்ணீர் கிடையாது, சாலைகளில் எங்கும் ஒரு தூசு தும்பு கிடையாது. ஒவ்வொரு வீடும், அலுவலகமும் துடைத்து வைத்தது போல ஒரு சுத்தம். ஒவ்வொரு மனிதனும் குளித்து முழுகி, தூய்மையான ஆடை அணிந்து சுத்தமாக இருக்கிறான்/ள். தொழிற்சாலைகள்  உள்ள கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டு காற்றிலோ அல்லது நீரிலோ  விடப் படுகிறது.  அனைத்து நீர் நிலைகளும் தெளிந்த நீரோடு இருக்கின்றன. ஆற்று தண்ணீரை அப்படியே எடுத்து பருகலாம்.

நாடே ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் வரவேற்பறை போல இருந்தால் எப்படி இருக்கும் ?

தூய்மை என்பது நாம் மற்றவர்களுக்காக செய்வது அல்ல, சட்டத்திற்கு பயந்து செய்வது அல்ல. நமக்கு நாமே செய்து கொள்ள வேண்டிய ஒன்று அது.

நியமத்தின் முதல் படி தூய்மை.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/132-1.html









Sunday, March 11, 2018

யோக சூத்திரம் - 2.31 - நிலைகளை கடந்தது

யோக சூத்திரம் - 2.31 - நிலைகளை கடந்தது 



जातिदेशकालसमयानवच्छिन्नाः सार्वभौमामहाव्रतम् ॥३१॥

jāti-deśa-kāla-samaya-anavacchinnāḥ sārvabhaumā-mahāvratam ॥31॥

jāti = ஜாதி

deśa = தேசம்

kāla = காலம்

samaya = சமயம்

anavacchinnāḥ  = தடையற்ற

sārvabhaumā = அனைத்திலும்

mahāvratam = மிகப் பெரிய ஞானம் , அறிவு ॥31॥

ஜாதி, மதம், காலம், சமயம் மற்றும் தடையற்ற அனைத்திலும் , இதுவே மிகப் பெரிய ஞானம்.

என்ன இது தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.

அதாவது, முந்தைய சூத்திரத்தில் அகிம்சை, திருடாமை, தன்னடக்கம் என்று ஐந்து வித கூறுகளை  கூறினார் அல்லவா.

அவற்றை யார் யாரெல்லாம் கடை பிடிக்க வேண்டும் ?

அல்லது யார் யாரெல்லாம் கடை பிடிக்கக் கூடாது ? என்று இங்கே சொல்கிறார்.

இந்த யோக சூத்திரங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான்  சொல்லப்பட்டதா ?

இல்லை, அனைத்து ஜாதியினரும் இதை கடைபிடிக்க வேண்டும் என்கிறார்.

இது எங்களுக்கு மட்டும் தான், மற்றவர்களுக்கு அல்ல என்று சிலர் இதை சொந்தம் கொண்டாடக் கூடும் என்று அறிந்து முன்பே சொல்லி வைத்திருக்கிறார். அனைத்து மதத்தினரும் இதை கடைபிடிக்கலாம் என்று.

சரி, இது வெளி நாட்டவருக்கும் பொருந்துமா அல்லது இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் தான்  இது பொருந்துமா என்றால், அனைத்து தேசத்தினரும் இதை கடைபிடிக்கலாம்.

சரி, இந்த யோக மார்கத்தை கடை பிடிக்க வயது வரம்பு ஏதாவது உண்டா என்றால், அப்படி ஒன்றும் இல்லை. சிறியவர் முதல் வயதானவர் வரை எல்லோரும்  கடை பிடிக்கலாம் என்கிறார் (காலம்).

சரி, இப்படி அனைத்துக்கும் சரி சரி என்று சொல்லிக் கொண்டே போனால், யாரவது  செய்யக் கூடாது என்று இருக்கிறதா என்றால், அப்படி ஒரு பிரிவினையே இல்லை. எல்லோரும் கடைபிடிக்கலாம். எந்த பிரிவும் கிடையாது.

ஆண் , பெண், பணக்காரன், ஏழை, படித்தவன், படிக்காதவன், என்ற எந்த பாகுபாடும் கிடையாது.

சில சாத்திரங்களை, மந்திரங்களை பெண்கள் சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள். பெண்களும் அது சரிதான் என்று ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

பதஞ்சலி அப்படி எந்த ஒரு பாகுபாடும் ஏற்படுத்தவில்லை. அனைத்து தரப்பினரும் இதை செய்யலாம் என்கிறார்.

யோக சாத்திரம் என்பது அறிவியல் பூர்வமானது.

நியூட்டனின் விதி பெண்களுக்கு செல்லாது  என்று யாராவது சொல்வார்களா ? சொன்னால் அது எவ்வளவு நகைப்பு இடமாக இருக்கும்.

அது போல, யோக சாத்திரம் எல்லோருக்கும் பொது. யார் வேண்டுமானாலும்  கடை பிடிக்கலாம்.

ஜாதி, மத, பால், நாடு, கால வேறுபாடுகளை கடந்தது அது.

என்ன ஒரு தீர்க்க தரிசனம்.

நீங்கள் யாராக இருந்தாலும் சரி. பாவம் பண்ணியவர், புண்ணியவான், நோயாளி, ஆரோக்கியமானவன், வயதானவன், இளைஞன் ...யாராக இருந்தாலும், யோக சாத்திரம் இரு கை நீட்டி உங்களை வரவேற்கிறது.

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/231.html


யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 5

யோக சூத்திரம் - 2.30 - உலகோடு வாழ ஐந்து வழிகள் - பாகம் 5


अहिंसासत्यास्तेय ब्रह्मचर्यापरिग्रहाः यमाः ॥३०॥

ahiṁsā-satya-asteya brahmacarya-aparigrahāḥ yamāḥ ॥30॥

ahiṁsā = அகிம்சை

satya = சத்யம்

asteya = திருடாமை

brahmacarya = ப்ரம்மச்சாரியம்

aparigrahāḥ  = தன்னடக்கம்

yamāḥ = இயமம் 

அகிம்சை, சத்யம், திருடாமை, பிரம்மச்சாரியம் பற்றி இதுவரை சிந்தித்தோம். 

அடுத்தது, aparigrahāḥ. இதற்கு தன்னடக்கம், பற்றின்மை, துறத்தல், என்று பல பொருள் உண்டு.  

அனைத்தும் குறிப்பது ஒன்றைத்தான். 

தன்னடக்கத்திற்கு எதிரான தற்பெருமை எப்படி வருகிறது ?

நான் பெரிய பணக்காரன், நான் பெரிய அறிவாளி, நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன் என்ற எண்ணங்களால் வருகிறது. 

ஏதோ ஒன்றையோ அல்லது பலவற்றையோ நாம் சொந்தம் கொண்டாடுவதால் தற்பெருமை, ஆணவம் வருகிறது. அவற்றை விட்டு விட்டால் , ஆணவம் போய்விடும். அடக்கம் வந்து விடும். 

அதற்காக இருக்கிற செல்வத்தையெல்லாம் தானம் வழங்கிவிட்டு, துறவியாக போய் பிச்சை எடுக்கச் சொல்லவில்லை யோக சாத்திரம். 


செல்வம் இருக்கிறதா, இருந்துவிட்டுப் போகட்டும். அனுபவித்துக் கொள் .

படிப்பறிவு இருக்கிறதா, இருந்துவிட்டுப் போகட்டும். மகிழ்ச்சியாக இரு. 

ஆனால் , என்னிடம் செல்வம் இருக்கிறது, அறிவு இருக்கிறது என்று அவற்றின் மேல் பற்று கொள்ளாதே. 

ஏன் னென்றால், பற்று வந்து விட்டால், அதை பெரிதாக வளர்க்கத் தோன்றும். இன்னும் பணம் வேண்டும்  என்று மனம் அலையும். நம்மை விட இன்னொருவன் அதிகம் வைத்திருக்கிறான் என்றால், அவன் மேல் பொறாமை வரும். நம்மிடம் உள்ளதை வேறு யாராவது எடுத்துக் கொள்வார்களோ என்ற  பயம் வரும். 

மனம் அந்த செல்வத்தை காப்பதிலும், பெருக்குவதிலுமே சென்று விடும். 

எனவேதான், அடக்கமாக இரு என்கிறது யோக சாத்திரம். 

அடக்கம் அமரருள் உய்க்கும்  என்பார் வள்ளுவர்.

மேலும் சிந்திப்போம். 

http://yogasutrasimplified.blogspot.in/2018/03/230-5.html