Wednesday, January 24, 2018

யோக சூத்திரம் - 2.23 - தோற்றமும் அழிவும்

யோக சூத்திரம் - 2.23 - தோற்றமும் அழிவும் 


स्वस्वामिशक्त्योः स्वरूपोप्लब्धिहेतुः संयोगः ॥२३॥

svasvāmi-śaktyoḥ svarūp-oplabdhi-hetuḥ saṁyogaḥ ॥23॥

sva = சுயமான
svāmi = தலைவன், ஆள்பவன்
śaktyoḥ = சக்தி, வலிமை
svarūpa = வடிவம்
upalabdhi = அனுபவம், வெளிப்படுதல்
hetuḥ = ஏதுவான
saṁyogaḥ = சேர்ந்து இருத்தல் , பிணைந்து இருத்தல்

இந்த உலகம் நம்மால் உருவாக்கப்பட்டது என்றால் அதை ஏன் நம்மால் அவ்வாறு உணர முடியவில்லை ? நம்மைத் தவிர்த்த , நமக்கு வெளியே ஒரு உலகம் இருப்பதாகவே நாம் அறிகிறோமே ஏன் ?

அதை மாயை, அவித்தை என்கிறார்கள். ஆனால், அது நம் அறிவுக்கு ஏற்புடையதாக இருப்பது இல்லை.

என்ன மாயை ? உலகம், அதில் உள்ள பொருள்கள், உயிரினங்கள் அனைத்தும் நிஜமாகத்தானே தெரிகிறது. பின் எப்படி அது மாயையாகும் ? இது ஏதோ தத்துவார்த்த தர்க்கம்  போல் தெரிகிறது. நடை முறையில் சரி வருமா என்ற சந்தேகம் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது.

நாம் பார்ப்பது, உணர்வது, அனுபவிப்பது எல்லாம் உண்மையா ?

சூரியன் தினமும் காலையில் கிழக்கில் உதிக்கிறது. மேற்கில் மறைகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகள் மக்கள் அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அது தவறு என்று தெரிந்து கொண்டோம். சூரியன் உதிப்பது அல்ல, பூமி சுத்துகிறது என்று புரிந்து கொண்டோம்.

சரி , பூமி சுத்துகிறதே, அதை நம்மால் உணர முடிகிறதா  என்றால் அதுவும் இல்லை.

நாம் அனுபவத்தில் காணப்பது தவறாகவும், நாம் அனுபவிக்காதது உண்மையாகவும் இருக்கிறது.

பூமி உருண்டை என்று பார்த்து தெரிந்து கொள்ள முடிகிறதா ? இல்லை. தட்டையாக இருப்பது போல இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல.

இப்படி ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்.


நம் புலன்கள் நமக்கு அறிவிப்பது உண்மையாக இருக்க வேண்டும் என்று இல்லை. நம் புலன்களுக்கு புரிபடாதது தவறாக இருக்க வேண்டும் என்றும் அல்ல.

இந்த உலகம் , அதன் தோற்றம், அது தரும் அனுபவம் என்பது உண்மை அல்ல. அது உண்மை போல நமக்குத் தெரியும்.

ஏன் அப்படி தெரிகிறது ? ஏன் நம்மால் அது மாயை என்று உணர முடியவில்லை ? ஏன் அது சாஸ்வதம் என்று நாம் அதைப் பற்றிக் கொண்டு இருக்கிறோம் ?

விடை வருகிறது அடுத்த சூத்திரத்தில் ....

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/223.html

Monday, January 22, 2018

யோக சூத்திரம் - 2.22 - தனித் தனி உலகம்

யோக சூத்திரம் - 2.22 - தனித் தனி உலகம் 


कृतार्थं प्रतिनष्टंअप्यनष्टं तदन्य साधारणत्वात् ॥२२॥

kr̥tārthaṁ pratinaṣṭaṁ-apy-anaṣṭaṁ tadanya sādhāraṇatvāt ॥22॥



kr̥ṭa =  முடிந்த பின், தீர்ந்த பின்
arthaṁ = அர்த்தம்
prati = அதற்காக
naṣṭam = நஷ்டம், அழிவு, மறைதல்
apy = இருந்தாலும்
anaṣṭaṁ = அ - நஷ்டம் ; நஷ்டம் அடையாமல் , சிதையாமல்  remaining in existence
tat = அது
anya = அந்நிய , மற்றவர்களுக்காக
sādhāranatvāt = அது தன் உலகமாக

பொருள்கள் தங்கள் நோக்கம் முடிந்த பின், மறைந்து விடுவது இல்லை. அது மற்றவர்களின் அனுபவத்திற்காக நிலைத்து நிற்கிறது. 

இந்த உலகம் என்பது அனுபவங்களின் தொகுப்பு என்று பார்த்தோம். அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் இரண்டும் சேர்ந்ததுதான் உலகம் என்று பார்த்தோம்.

அதாவது, அனுபவிப்பவன் இல்லை என்றால், இந்த உலகம் இல்லை என்று ஆகும்.

இரண்டும் வேண்டும் இந்த உலகம் வெளிப்பட.

அதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

நான் பிறப்பதற்கு முன்பே இந்த உலகம் இருந்தது. நான் இறந்த பின்னும் இந்த உலகம் இருக்கும்.

அப்படி இருக்கும் போது , என்னைத் தவிர்த்து இந்த உலகம் தனித்து இருக்கிறது என்று தானே ஆகும்.

அப்படி என்றால், அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் சேர்ந்து தான் இந்த உலகம்  என்ற கோட்பாடு சரியாக இல்லை. நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த உலகம் இருக்கும் தானே.

அப்படி என்றால், என்னைத் தவிர்த்த இந்த உலகம் என்னை பாதிக்கும் தானே. எனது இன்ப துன்பங்களுக்கு இந்த உலகம்தானே காரணமாக இருக்க முடியும்.

பின் எப்படி, இன்ப துன்பம் நமக்குள் இருந்து வருகிறது என்று சொல்வது.

பதஞ்சலி சொல்வது சரிதானா என்ற சந்தேகம் நமக்குள் எழுவது சரிதான்.

இந்த சந்தேகத்தை எதிர்பார்த்து, அதற்கு விடையாக இந்த சூத்திரத்தை தருகிறார்.

அதாவது, " நமது அனுபவம் முடிந்து விட்டால், அந்த பொருள்கள் போய் விடுவது இல்லை. மற்றவர்களின் அனுபவத்திற்காக அவை நிலைத்து நிற்கின்றன " என்கிறார்.

அது என்ன நம் அனுபவம், மற்றவர் அனுபவம் ?


ஒரு பெண் (உதாரணத்திற்கு, ஆண் என்றும் வைத்துக் கொள்ளலாம்) இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.

அவளை , அவளுடைய தந்தை மகளாகப் பார்க்கிறார்,
கணவன், மனைவியாக பார்க்கிறான்
பிள்ளைகள், தாயாக பார்க்கிறார்கள்
உடன் பிறந்தவர்கள் , சகோதரியாக பார்க்கிறார்கள்
மாமியார் , மருமகளாக பார்க்கிறாள்
தாத்தா, பேத்தியாக பார்க்கிறார்

ஒரு பெண்தான். பார்ப்பவரை பொறுத்து அவளின் தோற்றம், குணம் , அனைத்தும் மாறும் அல்லவா ?

தந்தை பார்ப்பது போல, கணவன் பார்ப்பது இல்லை.

கணவன் பார்ப்பது போல, பிள்ளைகள் பார்ப்பது இல்லை.

உண்மையில் அவள் யார் ?

மகளா, மனைவியா, சகோதரியோ, தாயா, மருமகளா ?

அவளுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னும் அவள் இருந்தாள். குழந்தை பிறந்த பின், தாயானாள் . தாத்தா இறந்த பின்னும் அவள் இருப்பாள். பேத்தியாக இருக்க மாட்டாள். ஆனால், மற்ற வடிவங்களில் இருப்பாள்.

தாத்தா இறந்த பின், பேத்தியும் மறைந்து போகிறாள். அவள் யார்க்கும் பேத்தி இல்லை இனிமேல். அதற்காக அவளே இல்லை என்று சொல்ல முடியுமா ? மனைவியாக, தாயாக அவள் இருப்பாள்.

ஒரு வேளை கணவன் இறந்து போனால், அவள் மனைவியாக இருப்பதும் மறைந்து போகும். ஆனால், தாயாக, சகோதரியாக அவள் இருந்து கொண்டு இருப்பாள்.

அதைத்தான், பதஞ்சலி சொல்கிறார்.

உங்கள் அனுபவம் மறைந்த பின், பொருள்கள் மறைவதில்லை. அது மற்றவர்களின் அனுபவத்திற்காக இருக்கிறது.

அவர்கள் அந்த  பொருளை வேறு விதமாக பார்ப்பார்கள். அனுபவிப்பார்கள்.

புரிகிறதா ?

இந்த உலகம், பார்ப்பவரைப் பொறுத்து மாறுகிறது.

தாத்தாவின் நிலையில் இருந்து பார்த்தால், பேத்தியாக தெரிவாள்.

காதலன் நிலையில் இருந்து பார்த்தால், காதலியாகத் தெரிவாள்.

அவள் அப்படியேதான் இருக்கிறாள். அவள் ஒன்றும் மாறி மாறி வேடம் இடுவதில்லை. அவளை சுற்றி இருப்பவர்கள் அவளை ஒவ்வொருவிதமாக  பார்க்கிறார்கள்.

அவர்களின் உறவும், பாசமும், நேசமும், அவர்களின் நிலைக்கு தகுந்தாற்போல மாறுகிறது.

நீங்கள் ஒரு பொருளின் மேல் ஆசைப் படுவதற்கு காரணம், அந்த பொருள் மட்டும் அல்ல. நீங்களும்தான் காரணம்.

நீங்கள்தான் அந்த பொருளை உருவாக்குகிறீர்கள். உங்கள் கற்பனையில், மனதில். பின் அதன் மேல் ஆசைப் படுகிறீர்கள்.

பார்வையை மாற்றுங்கள் , உலகம் மாறும்.

பெண்ணை தாயகப் பார்ப்பதும், தாரமாக பார்ப்பதும் பார்ப்பவரின் நிலையைப் பொறுத்தது. அவள் அப்படியேதான் இருக்கிறாள்.

பொருளின் மேல் ஏன் ஆசை வருகிறது ?

பொருளில் ஒன்றும் இல்லை. எல்லாம் உங்களில் இருக்கிறது.

சரி தானே ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/222.html


Sunday, January 14, 2018

யோக சூத்திரம் - 2.21 - உருவாக்கப்பட்ட உலகம்

யோக சூத்திரம் - 2.21 - உருவாக்கப்பட்ட உலகம் 



तदर्थ एव दृश्यस्याअत्मा ॥२१॥

tadartha eva dr̥śyasya-ātmā ॥21॥



tad =  அவை
artha = அர்த்தம்
eva = அப்போது
dr̥śyasya = பார்க்கப் பட்டது , உருவாக்கப் பட்டது
ātmā = தன்னால், தான், நான் , உள்ளுணர்வு


இந்த உலகம் பார்ப்பவனும் , பார்க்கப் படுவதும் இரண்டும் சேர்ந்து உருவாக்கப்பட்டது. 

இது ஒரு மிக மிக முக்கியமான சூத்திரம்.

இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அவற்றை கடந்து செல்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்று பார்த்தோம்.

இந்த  இன்ப துன்பங்கள் ஏன் வருகின்றன ?

வெளியில் இருந்து வருகின்றதா ? அன்பும், பாசமும், காதலும், கோபமும், ஏமாற்றமும் வருத்தமும்  வெளியில் இருந்து வருகிறதா ?

வெளியில் இருந்தும் வருகிறது. நாம் அவற்றை எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பதிலும் இருக்கிறது.

வெளி உலகு மட்டும் நமது இன்ப துன்பங்களுக்கு காரணம் அல்ல.

நாம் அவற்றை எவ்வாறு கையாள்கிறோம் என்பதைப் பொருத்தும் அமைகிறது.

இந்த உலகம் என்பது பார்ப்பவனும், பார்க்கப் படுபவதும் சேர்ந்து உருவாவது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை.

பார்ப்பதற்கு யாருமே இல்லை என்றால் வானம் நீலமாக இருக்குமா என்று சங்கரர் கேட்டார்.

அனுபவிப்பவனும், அனுபவிக்கப் படுவதும் இரண்டும் சேர்ந்தே இந்த உலகம் உருவாகிறது.

என்ன இது ஒரே குழப்பமாக இருக்கிறதா ?

சில உதாரணங்கள் பார்ப்போம்.

நீங்கள் கோவிலுக்குப் போகிறீர்கள். வெளியில் செருப்பை விட்டு விட்டு போகிறீர்கள். உள்ளே மணி அடிக்கிறது, இறைவன் மேல் பாடும் பாடல் ஒலிக்கிறது. உள்ளே அர்ச்சகர் அர்ச்சனை செய்கிறார். கற்பூர ஆராதனை காட்டுகிறார். அந்த சூழ் நிலையும், அங்குள்ள பாடல் ஒலிகளும், மணியின் ஒலியும் , அர்ச்சகரின் குரலும், எண்ணெய் விளக்கில் இருந்து கசியும் ஒளியும், கற்பூர மணமும் ஒரு தெய்வீக சூழ்நிலையை உருவாக்குகிறது. கன்னத்தில் போட்டுக் கொள்கிறீர்கள். மனதில் ஒரு பக்தி. ஒரு சாந்தம் வருகிறது அல்லவா ?

அடுத்த முறை கோவிலுக்குச் செல்லும் போது உங்கள் கிறித்துவ அல்லது இஸ்லாமிய நண்பரை கூட்டிச் செல்லுங்கள். அவருக்கு அதே போல் பக்தி வருகிறதா என்று கேளுங்கள்.

அல்லது

நீங்கள் ஒரு சர்ச்சுக்கோ அல்லது மசூதிக்கோ சென்று பாருங்கள் . பக்தி வருகிறதா என்று பாருங்கள்.

சரவண பேல குளா சென்றால் அங்கே பிரமாண்ட சிலை வடிவில் கோமதேஸ்வரர் உடம்பில் ஒரு போட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக நிற்பதை பார்க்கலாம். ஒரு ஜைன மத பக்தனுக்கு பக்தி வரும். மற்ற மதத்தை சார்ந்தவர்கள் சங்கடத்தில் நெளிவார்கள். அதுவும் பக்கத்தில் மகளோ, மகனோ , மனைவியோ இருந்தால் சங்கடம் இன்னும் அதிகமாகும் ?

ஏன் ?

ஒருவருக்கு பக்தி வருகிறது. இன்னொருவருக்கு சங்கடம் வருகிறது .

சர்ச்சுக்குள் போனால் , செருப்போடு வருகிறார்கள். காலில் ஷூ அணிந்து வருகிறார்கள். இறைவன் முன்னால் செருப்போடு போகலாமா ? பக்தி வருமா ?

அவர்களுக்கு வருகிறது. நமக்கு வருவதில்லை.

உணர்வுகள் என்பது வெளி உலகும், நம் உள் உணர்வும் சேர்ந்தே உண்டாகிறது.

அது ஒரு உதாரணம்.

பல நாள் உருகி உருகி காதலித்து திருமணம் செய்து கொள்கிறான். சில வருடங்களில் , இவளையா காதலித்தேன் என்று வருந்துகிறான்.

என்னவாயிற்று ?

அவள் அப்படியே தான் இருக்கிறாள். இவன் மன நிலை மாறிவிட்டது.

காதல் , வெறுப்பாக மாறிவிட்டது.

இப்படி நீங்கள் ஒன்று வெறுப்பதோ விரும்புவதோ அந்த பொருள் மேல் மட்டும் இல்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதையும் பொறுத்தது.

யோசித்துப் பாருங்கள்.

யோகா ஒரு படி மேலே போகிறது.

இந்த உலகம் என்று வெளியில் ஒன்றும் இல்லை. நாம் தான் அதை உருவாக்குகிறோம்.

எனவே, இன்ப துன்பங்களுக்கு இந்த வெளி உலகும், நாமும் காரணம் என்று தெரிகிறது அல்லவா ?

சரி. அடுத்த கட்டத்துக்குப் போவோம்.

சில விஷயங்கள் நமக்கு துன்பம் தருகின்றன. அந்த துன்பத்தில் இருந்து நமக்கு விடுதலை வேண்டும்.

என்ன செய்யலாம் ?

ஒன்று இந்த உலகை மாற்றலாம். அல்லது நம்மை மாற்றலாம்.

இரண்டும் சேர்ந்ததுதானே உலகம்.

உலகை மாற்ற நம்மால் ஆகாது.

நம்மை மாற்ற நம்மால் முடியும். முடிய வேண்டும்.

நம் மனம் மாறினால் உலகம் மாறும்.


படிக்கிற காலத்தில் ஆசிரியர் மேல் வெறுப்பும், கோபமும் இருக்கும். படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்தவுடன், அந்த ஆசிரியர்களை நன்றியோடு நினைத்துப் பார்ப்போம்.

என்ன ஆயிற்று ?

நம் மனம் மாறிவிட்டது. அவர் நல்லவராகி விட்டார்.

அதெல்லாம் சரி. மனதளவில் இது சரியாக இருக்கலாம். உடல் வலி, பசி, போன்றவை இருக்கிறதே. அது என் உடலை மட்டுமே சார்ந்து இருக்கிறது. மனம் மாறினால் அந்த வலி போகுமா ?

போகும்.


நாவுக்கரசரை ஒரு அறையில் தூக்கிப் போட்டு , உள்ளே நிறைய விறகுகளை போட்டு தீ மூட்டினார்கள். எரிந்து சாகட்டும் என்று. விறகு திகு திகு என்று எரிகிறது.

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

விண்ணுற அடுக்கிய விறகின் வெம்மையான அந்த தழல், எண்ணிப் பார்த்தால் அது ஒன்றும் இல்லை என்கிறார்.

பண்ணிய உலகில் பயின்ற பாவத்தை ....

இந்த உலகம் அப்படியே இருப்பது அல்ல. நாம் அதை பண்ணுகிறோம்.

யோகத்தின் உச்சம் அது.

பெரிய புராணம் படித்தால் , அதன் நெடுகிலும் யோகிகளின் வாழ்க்கை தெரியும். இன்பமும், துன்பம் கடந்த நிலை புரியும்.

இன்பமும் துன்பமும் உள்ளானே இல்லானே 

என்பார் மணிவாசகர்.

இன்பமும் துன்பம் இந்த உலகில் இருக்கும். ஆனால் ஒரு யோகிக்கு இருக்காது. அவன் அவற்றை கடந்தவன்.

நாமும் கடக்க முடியும். அது எப்படி என்று பதஞ்சலி கூறுகிறார்.

கேட்போமா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/blog-post.html

















Monday, January 8, 2018

யோக சூத்திரம் - 2.20 - புலன்கள் மற்றும் மனதை கடந்து

யோக சூத்திரம் - 2.20 - புலன்கள் மற்றும் மனதை கடந்து 


द्रष्टा दृशिमात्रः शुद्धोऽपि प्रत्ययानुपश्यः ॥२०॥

draṣṭā dr̥śimātraḥ śuddho-'pi pratyaya-anupaśyaḥ ॥20॥


draṣṭā  = பார்ப்பவன்

dr̥śi = பார்ப்பது

mātraḥ = மட்டும்

śuddha = சுத்தமான,

api = இருந்தும்

pratyaya = பார்த்தல் என்பது

anupaśyaḥ = தோற்றம் அளிக்கிறது


என்னது இது பார்ப்பவன், பார்வை, பார்த்தல் என்று ஒரே குழப்பமாக இருக்கிறதே...

பொறுமை...பொறுமை...நிதானமாக அணுக வேண்டும்.

இன்பம் துன்பம் இவற்றில் இருந்து விடுதலை பெறுவதே வாழ்வின் நோக்கம் என்று பார்த்தோம்.

எப்படி விடுதலை பெறுவது என்பது உடனடி கேள்வி.

இன்பமும் துன்பமும் ஏன் வருகின்றன ? எங்கிருந்து வருகின்றன ?

இன்பமும் துன்பமும் வெளியில் இருந்து வருகின்றன இல்லையா.

இனிப்பை தின்றால் இன்பம். ஐஸ் கிரீம் சாப்பிட்டால் இன்பம். மனைவியை அணைத்தால் இன்பம். பிள்ளைகள் மேலே ஏறி விளையாடினால் இன்பம். நல்ல இசை கேட்டால் இன்பம்.

கோபப்படும் மாமியார் துன்பம், அலுவலக மேல் அதிகாரி துன்பம், நோய் துன்பம்.

இப்படி இன்பமும் துன்பமும் வெளியில் இருந்து தானே வருகிறது ?

அதில் சந்தேகம் இல்லையே ?

சரி.

இந்த இன்ப துன்பங்கள் வெளியில் இருந்து மட்டுமே வருகிறதா ?

இனிப்பு சாப்பிடுவது இன்பம் என்றால் அது எல்லோருக்கும் இன்பமாக இருக்க வேண்டுமே ? சில பேர் இனிப்பை கண்டால் காத தூரம் ஓடுகிறார்களே ஏன் ?

ஏன், நாமே சில சமயம் இனிப்பு வேண்டாம் என்போம். காய்ச்சல் வந்து, நாக்கு கசந்து கொண்டிருந்தால் எதுவுமே சாப்பிட பிடிக்காது.

அலுவலகத்தில் பெரிய பிரச்சனை. கம்பெனி யை மூடி விடுவார்கள் போல இருக்கிறது. கடன் வேறு நிறைய இருக்கிறது. மனைவி வந்து கட்டி அணைத்தால் இன்பமாகவா இருக்கும். எரிந்து விழ தோன்றும்...."நேரம் காலம் தெரியாமல் " என்று.

வயதான தாத்தா. காது அவ்வளவா கேக்காது. அவரிடம் போய்நல்ல இசையை போட்டால் அவருக்கு என்ன தெரியும்.

அப்படி என்றால், இன்பமும் துன்பமும் வெளி உலகும், நமது புலன்களும் ஒன்று சேரும் போது உண்டாகிறது என்று தெரிகிறது. வெளி உலகம் மட்டுமே இன்பம் இல்லை. நமது மனமும், புலன்களும் சரியாக இருந்தால் தான் இன்பமும் துன்பமும் நிகழும்.

சரி தானே. சந்தேகம் இல்லையே.

சரி, இந்த இன்ப துன்பங்கள் யாருக்கு நிகழ்கிறது ?

நமது புலன்களுக்கா ? ஐஸ் கிரீம் சாப்பிட்டால் நாக்கு மகிழ்கிறதா ? நல்ல படம் பார்த்தால் கண் சந்தோஷப் படுகிறதா ? நல்ல நறுமணம் முகர்ந்தால் மூக்கு குஷியாகிறதா ?

இல்லை. புலன்கள் செய்திகளை அனுப்புவதோடு சரி. இன்பமோ துன்பமோ அவைகளுக்கு இல்லை. நமது மூளை அவற்றை அனுபவிக்கிறது.

நன்றாக தூங்குபவன் முன்னால் நறுமண மண புகை போட்டுப் பாருங்கள். மூக்குக்குள் அந்த பபுகை போகும், ஆனால், அவன் அதை அனுபவிக்க மாட்டான் ? ஏன் ? புத்தி வேலை செய்யவில்லை. மனம் வேலை செய்யவில்லை.

சரி புலன்கள் அனுபவிப்பதில்லை. மூளை அனுபவிக்கிறதா ? மூளைக்கு அனுபவம் உண்டா  ? அது ஒரு கருவி. அவ்வளவுதான்.

அப்படி என்றால் எது அனுபவிக்கிறது ?

மனம் என்று சொல்லலாம். ஆனால், இந்த மனம் என்பது என்ன ? அதற்கு வடிவம் இருக்கிறதா ? எங்கே இருக்கிறது ? தெரியாது.

முடிச்சு அங்கே தான்  இருக்கிறது.

இந்த முக்குணங்களும் சரியான விகிதத்தில் இருக்கும் போது நான் , எனது என்பதை தாண்டி ஒன்று இல்லாத ஒரு நிலையை அடைவோம் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அனுபவிப்பவன் என்று ஒருவன் கிடையாது. நான் என்ற ஒன்று இல்லாவிட்டால் அனுபவமும் கிடையாது. யார் அனுபவிப்பது ?

வீடு இருக்கிறது. குளிர் சாதனம் இருக்கிறது. நல்ல படுக்கை, காற்றோட்டம் இல்லாம இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லை. எனவே அனுபவம் என்று ஒன்று அங்கு நிகழ்வதில்லை.

சரி. அப்படி ஒரு நிலையை அடைய முடியுமா ? அப்படி ஒரு நிலையை அடைந்தால் என்ன ஆகும் ?

இது வரை நாம் இந்த புலன்களுக்கும் மனதுக்கும் அடிமையாக இருந்தோம். அந்த நிலை அடைந்த பின், புலன்களும் மனமும் நமக்கு அடிமையாக இருக்கும்.


அந்த நிலை சாமியார் நிலை அல்ல. இன்ப துன்பங்களை விட்டு விட்டு ஓடி விடுவது அல்ல. அவற்றை இன்னும் பூர்ணமாக அனுபவிக்க முடியும். இன்பம் துன்பம் கடந்த நிலை அது.

புலன்களும் மனமும் நம்மை அங்கும் இழுத்துக் கொண்டு ஓடாது. நாம் செலுத்தும் இடத்துக்கு அவை செல்லும்.

யானை நம்மை தூக்கிக் கொண்டு ஓடுவதற்கும், நாம் அதன் மேல் இருந்து சவாரி செய்வதற்கும் உள்ள வேறுபாடு.

இரண்டிலும் யானை தான் நம்மை கொண்டு செல்கிறது.

முதலாவதில், யானை நம்மை தன்னுடைய தும்பிக்கையால் தூக்கி, வளைத்து  அது போன இடத்துக்கெல்லாம் நம்மை கொண்டு செல்கிறது.

இரண்டாவதில், நாம் அதன் மேல் ஏறி அமர்ந்து, அங்குசம் கொண்டு அதை கட்டுப் படுத்தி நாம் விரும்பும் இடத்துக்கு அதை செலுத்துகிறோம்.

அதை அடைய முடியும். ஆழ்ந்து சிந்தியுங்கள். இன்பம், துன்பம், அனுபவம், புலன்கள், மனம், இவற்றின் இயக்கம் பற்றி எல்லாம்.

ஒரு முறை வாசித்தவுடன் வருவது அல்ல இது. ஆழ்ந்த சிந்தனை, அது பற்றிய விவாதம், குழப்பம், தெளிவு என்று வர வேண்டும்.

வரும்.

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/220.html

Saturday, January 6, 2018

யோக சூத்திரம் - 2.19 - வெளிப்பாடு

யோக சூத்திரம் - 2.19 - வெளிப்பாடு 



विशेषाविशेषलिङ्गमात्रालिङ्गानि गुणपर्वाणि ॥१९॥

viśeṣa-aviśeṣa-liṅga-mātra-aliṅgāni guṇaparvāṇi ॥19॥

viśeṣa = விசேஷ = தனித்துவமான

aviśeṣa = அ விவேஷ = தனித்துவம் இல்லாத

liṅga-mātra = லிங்க மாத்ர = குறியீடு உள்ள

aliṅgāni = குறியீடுகளுக்கு அப்பால், குறித்து சொல்ல முடியாத

guṇaparvāṇi = குண + பிரவாணி = குணங்களை உடைய


வாழ்வின் நோக்கம் இந்த இன்ப துன்பங்களை விட்டு கடந்து போவது அல்லது இந்த சூழலில் இருந்து விடுபடுவது என்று முந்தைய பிளாகில் சிந்தித்தோம்.

மேலும், நமது ஆசை, கோபம், துக்கம், பொறாமை, எரிச்சல், பயம் போன்ற குண வெளிப்பாடுகளை சாத்வீகம், தமோ மற்றும் ரஜோ குணங்களே காரணம் என்றும் பார்த்தோம்.

பிரச்சனைகளின் ஆணி வேரை பிடிக்க நாம் முயல்கிறோம்.

இன்பம் வேண்டும் - அது வெளி உலகில் உள்ள பொருள்கள் மற்றும் மனிதர்களிடம் இருந்து கிடைக்கிறது - ஆனால் அவற்றை அனுபவிக்க நம் புலன்களும்  மனமும் தேவை என்று பார்த்தோம் - அந்த புலன்களையும் மனதையும்  செயல்படுத்துவது முக்குணங்கள் என்று பார்த்தோம்.

சரி, இதனால் நமக்கு என்ன பலன். மூன்று குணங்கள் நம்மை செலுத்துகின்றன என்று அறிந்து என்ன பிரயோஜனம் ? இதை அறிவதன் மூலம் நாம் எப்படி இந்த இன்ப துன்ப சூழலை கடந்து போக முடியும் ?

அது சரியான கேள்வி.

அதற்கு பதில் இந்த சூத்திரம்.

குணங்கள் நம்மிடம் நான்கு விதங்களில் வெளிப்படுகிறது.

முதல் நிலை

viśeṣa = விசேஷ = தனித்துவமான

தனித்த ஒரு பொருள் மாதிரி இருத்தல். நாற்காலி, பேணா, டிவி, படுக்கை, போல தனித்து நிற்கும் ஒரு பொருள் போல இருத்தல். அது எப்போது நிகழ்கிறது ?

தமோ குணம் மிகுந்து இருக்கும் போது மனிதன் ஒரு ஜடப் பொருள் போல் இருக்கிறான். 

ஆழ்ந்து தூங்கும்  ஒருவனைப் பாருங்கள். மரக் கட்டை போல கிடப்பான். ஒரு உணர்ச்சியும்  இருக்காது. அவனும் ஒரு பேனா, நாற்காலி போல ஒரு பொருள். அவ்வளவுதான்.

அடுத்த வெளிப்பாடு 

aviśeṣa = அ விவேஷ = தனித்துவம் இல்லாத 

ஒரு இடத்தில் இருக்க மாட்டான். இங்கே ஒரு வேலை, அங்கே ஒரு வேலை. ஒரே ஆள் பல விதங்களில்....தந்தையாக, மகனாக, கணவனாக, அதிகாரியாக, சேவகனாக ஒரு தனித்துவம் இல்லாமல் இருப்பான். ரஜோ குணம் மேலிடும் போது மனிதன் தான் யார் என்று அறியாமல் செயலில் முக்கியத்துவம் கொண்டு அலைவான். 

பல அரசர்கள் மற்ற நாட்டின் மேல் போர் தொடுத்து , பலரை கொன்று நாடு பிடித்தார்கள். எதற்கு ? சந்தோஷமாக வாழத்தானே ? சந்தோஷமாக வாழ நாடு பிடிக்க வேண்டும் யார் சொன்னது ? ரஜோ குணம் மேலிட்டால் , மனிதன் தனித்துவம் இழந்து அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருப்பான். 

பெரிய நிறுவங்களில் வேலை செய்யும் சிலரைப் பார்த்தால் தெரியும். இரவும் பகலும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருப்பார்கள். எதற்கு ? தெரியாது. என்னவோ வேலை பிடித்திருக்கும். அதில் ஒரு ஆர்வம். செய்து முடித்தால் அதில் ஒரு சந்தோஷம். 

மலை ஏறுபவனை கேளுங்கள். எதற்கு மலை ஏறுகிறாய் என்று. 

ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவனை கேளுங்கள் , ஓடி என்ன ஆகப் போகிறது என்று. 

தெரியாது. இருந்தாலும், அதில் ஒரு மகிழ்ச்சி. 

இது ரஜோ குணத்தின் வெளிப்பாடு. 

மூன்றாவது வெளிப்பாடு 

liṅga-mātra = லிங்க மாத்ர = குறியீடு உள்ள 

குறியீடு மாத்திரம். அது என்ன குறியீடு. சாத்வீகம் மேலிடும் போது , இந்த உடல், இதன் பெயர், இதன் நினைவுகள், இதன் உறவுகள் எல்லாம் போய் விடும். மனிதன் இந்த உடல் என்பது ஒரு குறியீடு அவ்வளவுதான். 

ஒரு ஊருக்குப் போகிறோம். அந்த ஊர் நுழைவில் அந்த ஊரின் பெயர் பதித்த ஒரு பலகை இருக்கும். அந்த பலகையா அந்த ஊர் ? இல்லை , அது ஒரு குறியீடு. 

பெயர், ஊர், உறவு, நிறம், உயரம் எல்லாம் ஒரு குறியீடு. மனிதன் இந்த உடலை தாண்டி  போகிறான். அந்த மாதிரி மகான்கள் தங்களை உடலோடு சேர்த்து அடையாளம் காண்பது இல்லை. ஊருக்குப் பெயர் பலகை மாதிரி, இந்த உடல் ஒரு பெயர் பலகை. ஊர் உள்ளே இருக்கிறது. 

இது சாத்வீகம் உச்சம் பெற்றால் நிகழும் நிலை. 

இந்த மூன்றும் , மூன்று குணங்கள் உச்சம் பெற்றால் நிகழும் நிலைகள். 

இந்த மூன்றிலும் இன்ப துன்பங்கள் உண்டு. சாத்வீகம் உச்சம் பெற்றாலும் சிக்கல்தான். வேறு விதமான சிக்கல். நான் என்பது இந்த நிலையிலும் நிகழும். 

இந்த மூன்றும் சரியான விதத்தில் சேரும் போது நிகழ்வது நான்காவது வகை வெளிப்பாடு. 

aliṅgāni = குறியீடுகளுக்கு அப்பால், குறித்து சொல்ல முடியாத 

குறியீடும் இல்லாத ஒரு நிலை. 


நான் என்பது இல்லாமல் போய் விடும். அது எப்படி இருக்கும் என்று குறித்து சொல்ல முடியாது. ஒன்றும் இல்லாத நிலை. 


தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து
நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து
பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் 

அனைத்தும் மறந்த இடம். 

ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே

என்பது கந்தரலங்காரம்.

வெளியில் விளைந்த வெறும் பாழை பெற்ற வெறும் தனியை ....என்று திணறுகிறார் அருணகிரிநாதர். 


ஒன்றும் இல்லை அங்கே. அதை எப்படிச் சொல்வது. ஏதாவது இருந்தால் அது இன்னது என்று சொல்லி விடலாம். இல்லாத ஒன்றை எப்படி விவரிப்பது ?

வெளியில் = ஆகாயத்தில் 
விளைந்த பாழை = பாழானது என்றால் ஒன்றும் இல்லாதது, மறைந்து போனது, இல்லாமல் போனது. "விதை போட்டேன், ஒண்ணும் வரல எல்லாம் பாழா போச்சு "என்று சொல்வது போல. 

அந்த பாழ் வெளி என்ன செய்தது ?


அது ஒன்றை பெற்றது ? ஒன்றும் இல்லாத பாழ் வெளி ஏதோ ஒன்றை பெற்றது. 

அது என்ன ?

வெறும் தனியை = ஒன்றும் இல்லாத தனித்த ஒன்றை பெற்றது. 

ஒன்றும் இல்லாததை எப்படிச் சொல்வது.

ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற் காயிரந்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ.

என்பார் மணிவாசகர். 

ஒரு நாமும் இல்லை. 
ஒரு உருவமும் இல்லை.
ஒன்றும் இல்லை 

அப்படி பட்ட ஒன்றிற்கு ஆயிரம் திருநாமம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ என்கிறார். 

கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,
அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்
மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய
செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!

என்பதும் அவர் வாக்கே.

அயல் மாண்டு = வெளியில் உள்ள அனைத்தும் மாண்டு (இறந்து, மறைந்து)
அருவினை = வினைகள் 

சுற்றமும் மாண்டு = சொந்த பந்தங்கள் மறைந்து 

அவனியின் மேல் மையல் மாண்டு = உலகின் மேல் உள்ள பற்று மறைந்து 

மற்று உள்ள வாசகம் மாண்டு = வேதம், புராணம், இதிகாசம், மந்திரம், 
தந்திரம் என்று எல்லாம் மாண்டு 

என்னுடைய செயல் மாண்ட = என்னுடைய அனைத்து செயல்களும் மாண்டு 


எல்லாம் போய் விட்டால் என்ன இருக்கும் ?  ஒரே ஆனந்தம் தான் என்கிறார் மணிவாசகர். இப்படி அனைத்தும் மாண்டதை தெள்ளேணம் கொட்டி ஆடுவோம் என்கிறார். 

"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே "

என்பார் அருணகிரி. 

அனைத்தையும் இழந்த நலம் என்கிறார். 

அனைத்தையும் கடந்து போக முடியும் என்று திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார்கள். 

மற்றவர்கள் சொன்னதோடு விட்டு விட்டார்கள். 

பதஞ்சலி ஒரு படி மேலே போய் அதை எப்படி அடைவது என்றும் சொல்கிறார். 


Wednesday, January 3, 2018

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 3

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 3


प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियाअत्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥

prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dr̥śyam ॥18॥

prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத

śīlaṁ = சில

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்

apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்

dr̥śyam = திரிஷ்யம், பார்வை, பார்க்கப் படுவது ॥18॥



வாழ்வின் நோக்கம் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். (பார்க்க முதல் இரண்டு பாகங்கள்).

இன்பம் தான் குறிக்கோள் என்றால் துன்பமும் கூடவே வரும் என்று பார்த்தோம். 

அப்படி என்றால் வாழ்வின் குறிக்கோள் இந்த இரண்டையும் கடந்து செல்வது என்றும் சிந்தித்தோம்.


கடப்பது என்றால் என்ன ? இன்பமும் துன்பமும் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ? அது ஒரு வாழ்க்கையா ? 

இப்போது சூத்திரத்துக்குள் போவோம் 

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்


apavarga-= அபவர்க , விடுதலை அடைய,



நாம் இன்ப துன்பங்களை எப்படி அனுபவிக்கிறோம் ?

நமது புலன்களாலும், மனதாலும் (மனம், அறிவு, புத்தி ).

இந்த புலன்கள் ஐம்பூதங்களால் ஆனது. 

bhūtendriya என்கிறார். பூதங்களால் ஆனா இந்திரியம். 

இவற்றின் மூலம் "போக" , அனுபவிக்கிறோம். 

எதற்காக என்றால், 


apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

அவற்றில் இருந்து விடுதலை அடைய வேண்டும். 

ஆனால், நாம் சிந்தித்துப் பார்த்தால் ஒன்று புரியும். இந்த புலன்களுக்கு என்று ஒரு அறிவும் கிடையாது. 

இதை சாப்பிடு என்று நாக்கு சொல்வதில்லை. மனம் சொல்கிறது. கை எடுத்து வாயில் போடுகிறது. நாக்கு அதன் சுவையை அறிய உதவுகிறது. நாக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சொல்வதில்லை.

அது கொடுத்தவற்றை அனுபவிக்க உதவுகிறது.

புலன்கள் நமக்கு உதவி செய்கின்றன. எனவே, புலன்களை விட்டு விடுவோம். 

புலன்களை கட்டி மேய்ப்பது அறிவு அல்லது மனம்.

அது தான் அனைத்துக்கும் காரணம். 


அதை நாம் எவ்வாறு கட்டுப் படுத்துவது ? புலன்களை கட்டுப் படுத்தி விடலாம். கண்ணில் இனிப்பை காட்டினால் தானே அதை சாப்பிடவேண்டும் என்ற ஆசை வரும். காட்டமலேயே இருந்து விட்டால் அந்த ஆசை வராது. புலன்களை கட்டுவது எளிது. 

மனதை கட்ட முடியாது. இனிப்பை மனம் நினைக்கும். அடடா, இப்போது ஒரு ஐஸ் கிரீம் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனம்  நினைக்கும். அதை எப்படி கட்டுப் படுத்துவது ?

மனம் ஏதோ ஒரு வழியில் செயல்பட மூன்று காரணங்கள் இருக்கிறது. அது மனதின் மூன்று நிலைகளை பொறுத்தது. மனம் எந்த நிலையில் இருக்கிறதோ, அதற்கு தகுந்தாற் போல அது செயல்படும். 

அவை என்ன மூன்று நிலைகள் ?


prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத


பிரகாச என்றால் சாத்வீகம். ஒளி பொருந்திய. 

க்ரியா என்றால் கிரியை, வேலை, கர்மம் செய்யும் நிலை - ரஜோ குணம். 

ஸ்திதி என்றால் ஒன்றும் செய்யாமல் நிலைத்து நிற்பது. ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது. தமோ குணம். 

இந்த மூன்று குணங்களால் மனம் உந்தப் படுகிறது. 

ரஜோ குணம் மிகுந்தால் நல்ல சாப்பாடு, உடை, இசை, பார்ட்டி, ஊர் சுற்றுவது, இடங்களைப் போய் பார்ப்பது என்று மனம் அலையும். 

சாத்வீகம் மிகுந்தால் படிப்பு, ஆராய்ச்சி, ஞானம், என்று உண்மையைத் தேடி அலையும். 

தமோ குணம் மிகுந்தால் தூக்கம், அசதி, சோம்பல் என்று மனம் வேலையின்மையை அனுபவிக்கும். 

அப்படி என்றால் நமக்கு மொத்தமே மூணு குணங்கள்தானா ?

 இல்லை.இந்த மூன்று குணங்களும் வேறு வேறு சதவிகிதத்தில் கலக்கும் போது ஒவ்வொரு குணம் உண்டாகிறது. 

அப்படி என்றால், இந்த குணங்களை சரி செய்தால் நாம் மாறி விடுவோம் அல்லவா ?

நமது விருப்பு வெறுப்பு, ஆசை, கோபம், காமம், தாபம், ஏக்கம், எரிச்சல் எல்லாம் இந்த முக்குண சேர்க்கையால் வருகிறது. 

இதை கண்டுகொண்டு , அவற்றை சரி செய்தால் நம் வாழ்க்கை நேராகி விடும். 

புலன்கள் மூலம் வரும் இன்பங்களை , அனுபவிப்பதன் மூலம், அவற்றின் தன்மை அறிந்து, முக்குணங்களை மாற்றி நாம் அவற்றில் இருந்து விடுதலை அடையலாம். 

இது வரை நாம் இந்த புலன்களுக்கும், மனதுக்கும் அடிமை பட்டுக் கிடந்தோம். கிடக்கிறோம். 

இவற்றில் விடுதலை அடைவதுதான் வாழ்வின் குறிக்கோள்.

சிறையில் இருப்பவனுக்கு என்ன குறிக்கோளாக இருக்க முடியும். சிறையை விட்டு விடுதலை அடைவதுதான் அவனின் ஒரே சிந்தனையாக இருக்கும். 

நாம் சிறையில் இருக்கிறோம் என்பதே தெரியாமல் இருக்கிறோம். இந்த புலன்கள் மற்றும் மனம் நம்மை சிறை வைத்திருக்கின்றன. அவை ஆட்டுவித்தபடி நாம் ஆடுகிறோம். 


அந்த வீடு வேண்டும், இந்த கார் வேண்டும், அந்த ஊருக்குப் போக வேண்டும், இந்த உடை வேண்டும், அந்த பெண் வேண்டும், இந்த பதவி வேண்டும் என்றும் என்று வண்டியில் பூட்டிய மாட்டை அங்கும் இங்கும் ஓட்டுவதைப் போல இந்த புலன்களும் மனமும் நம்மை ஓட்டுகின்றன . நாமும் அது அறியாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம். 

இந்த புலன்களை மற்றும் மனதை வெல்வதன் மூலம் அவற்றில் இருந்து நமக்கு விடுதலை கிடைக்கும். விடுதலை பெற்று வெளியில் வந்தால் தான் உண்மை என்ன என்று புரியும். 


apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்


விடுதலை அடைவதே வாழ்வின் நோக்கம். 

புலனைந்தும் வஞ்சனையை செய்ய என்பார் மணிவாசகர். 


 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

    வகைதெரிவான் கட்டே உலகு. 

என்பார் வள்ளுவர். 

சரி. எப்படி இந்த குணங்களை நமது கட்டுக்குள் கொண்டு வருவது ?

அது அடுத்த படி. 

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/218-3.html

Tuesday, January 2, 2018

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 2

யோக சூத்திரம் - 2.18 - வாழ்க்கையின் நோக்கம் என்ன ? - பாகம் 2


प्रकाशक्रियास्थितिशीलं भूतेन्द्रियाअत्मकं भोगापवर्गार्थं दृश्यम् ॥१८॥

prakāśa-kriyā-sthiti-śīlaṁ bhūtendriya-ātmakaṁ bhoga-apavarga-arthaṁ dr̥śyam ॥18॥

prakāśa = பிரகாச, ஒளி பொருந்திய

kriyā = கிரியா, வேலை, கர்மம், தொழில்

sthiti = ஸ்திதி, நிலைத்த, அசையாத

śīlaṁ = சில

bhūta = பூத, பஞ்ச பூதங்களால் ஆன

endriya = இந்திரிய, இந்திரியங்கள்

ātmakaṁ = அப்படி

bhoga= போக , அனுபவித்தல்

apavarga-= அபவர்க , விடுதலை அடைய,

arthaṁ = அர்த்தம் - நோக்கம், குறிக்கோள்

dr̥śyam = திரிஷ்யம், பார்வை, பார்க்கப் படுவது ॥18॥


வாழ்வின் நோக்கம் எது  என்பது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தோம். (பார்க்க : முந்தைய பிளாக்).

பணம், செல்வம், அதிகாரம், புகழ், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, வீடு பேறு , முக்தி, சொர்கம் என்று பட்டியல் போட்டுக் கொண்டே போனாலும், இவை எல்லாம் எதற்கு என்ற கேள்வி வரும். 

பணம் எதற்கு ? புகழ் எதற்கு ? அதிகாரம் எதற்கு ? ஏன் சொர்கம் போக வேண்டும் ...என்று கேள்வி கேட்டால், இந்த பட்டியலில் உள்ளவை எல்லாம் அவற்றிற்காக அல்ல ஆனால் அவை தரும் வேறு ஏதோ ஒன்றிற்காக என்று புலப்படும். 

பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது ? பணம் இருந்தால் பொருள்களை வாங்கலாம், அனுபவங்களை வாங்கலாம்...எனவே பணம் அல்ல முக்கியம். அது தரும் சுகம் தான் குறிக்கோள். 

சரி, அந்த சுகம் எதற்கு என்று கேட்டால் நாம் விடைக்கு நெருங்கி விடுவோம். 

வாழ்வின் குறிக்கோள் இன்பமாக இருப்பது. இந்த உலகிலும், மறு உலகிலும். சொர்கத்திற்கு போய் விட்டால் ஒரே சுகம் தான். கடவுளுக்கு பக்கத்தில் இருக்கலாம். அவர் பார்த்துக் கொள்வார். மறு பிறப்பு இல்லை. ஜாலி. 

எனவே அனைத்தும் இன்பம் வேண்டி அல்லது துன்பம் தவிர்க்க என்று புலப்படும். 

இன்னும் கொஞ்சம் ஆழமாக போவோம். 

இன்பம் வேண்டினால், துன்பம் கூட வந்தே தீரும். அவை இரண்டும் வேறு வேறு அல்ல. இன்பம் தலை என்றால், துன்பம் வால் . தலையை தூக்கினால் வாலும் கூடவே வரும். 

நாணயத்தின் இரு பக்கம் போல. 

நாம் பார்த்த வரை ஒவ்வொரு இன்பத்துக்கும் ஒரு துன்பம் இருக்கிறது. துன்பமே இல்லாத இன்பம் ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம். அப்படி ஒன்று இல்லவே இல்லை. 

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், சொர்கம் , இறைவன் திருவடி போன்றவை இன்பம் மட்டுமே உள்ளவை, துன்பமே இல்லாதது என்று. நினைத்துப் பாருங்கள். வெறும் இன்பம் மட்டுமே உள்ள ஒன்று எப்படி இருக்கும் என்று. 

தாகம் துன்பம். நீர் குடித்தால் "அடடா என்ன சுகம் " என்று சொல்கிறோம். எங்கே,  சுகம் தானே, நாள் முழுவதும் தண்ணி குடித்துக் கொண்டே இருங்கள் பார்ப்போம். 


பசி துன்பம். உணவு உண்டால் சுகம். எனக்கு துன்பமே வேண்டாம். வெறும் இன்பம் மட்டுமே வேண்டும். எனக்கு பசிக்கவே கூடாது என்று யாராவது விரும்புவோமா ? பசியே இல்லை என்றால் மருத்துவரிடம் போவோம். ..."டாக்டர் எனக்கு பசியே இல்லை...ஏதாவது டானிக் தாருங்கள் " என்று கேட்போம். பசி துன்பம் என்றால் அதை ஏன் வேண்டி விரும்பி கேட்கிறோம் ? 

நாளெல்லாம் ஓடி ஆடி உழைக்கிறோம். அலுத்து வீடு வருகிறோம். ஒரே அசதி. சாப்பிட்டுவிட்டு படுகிறோம். சுகமான தூக்கம். சுகம் தானே ? ஒரு ஐந்தாறு நாள் தூங்குவது தானே ? முடியாது. 

இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் துன்பம் வேண்டும். 

தாகம் இல்லாவிட்டால் தண்ணீர் குடிப்பதன் சுகம் தெரியாது. 

பசி இல்லாவிட்டால் உணவின் சுகம் தெரியாது. 

உழைப்பின் துன்பம் இல்லாவிட்டால் உறக்கத்தின் சுகம் தெரியாது. 

அறியாமையின் வலி இல்லாவிட்டால் அறிவின் ஆனந்தம் புரியாது. 

அப்படியென்றால் எந்த ஒரு இன்பமும், இன்பமாகவே இருக்க வேண்டும் என்றால், நடு நடுவே கொஞ்சம் துன்பம் வேண்டும். சிற்றின்பத்துக்கு , சின்ன துன்பம். 

கடிகாரத்தின் பெண்டுலம் போல எவ்வளவு தூரம் இடது பக்கம் போகிறதோ, அவ்வளவு தூரம் வலது பக்கம் போயே தீரும். 

அப்படியென்றால் இன்பம் துன்பம் இதில் கிடந்து உழல்வதுதான் வாழ்க்கையா ? 

இல்லை. 

இதை இரண்டையும் கடந்து போவதுதான் வாழ்வின் குறிக்கோள். 

எப்படி கடப்பது ? கடந்தால் என்ன ஆகும் ?  இன்பமும் துன்பமும் இருக்கும் வரை மனம் சஞ்சலித்துக் கொண்டே இருக்கும். துன்பத்தில் இருந்து துள்ளி வெளி வர முயலும், இன்பத்தில் அழுந்தி கிடக்க முயலும். இந்த சூழலில் இருந்து எப்படி வெளிப்படுவது ?

அதுதான் இந்த சூத்திரம். 

அது என்ன என்று நாளை பார்போமா ?

http://yogasutrasimplified.blogspot.in/2018/01/218-2.html