யோக சூத்திரம் - 2.11 - தியானம்
ध्यान हेयाः तद्वृत्तयः ॥११॥
dhyāna heyāḥ tad-vr̥ttayaḥ ॥11॥
dhyāna = தியானம்
heyāḥ = தாண்டி வர,
tad = அவைகளை
vr̥ttayaḥ = எண்ண அலைகள்
அவற்றை தாண்டி வர தியானம் பண்ண வேண்டும்.
பதஞ்சலி படுத்தறார் இல்ல ? ரொம்பத்தான் வார்த்தை சுருக்கம்.
மன கிலேசம் நிறைய வழிகளில் வருகிறது என்று பார்த்தோம்.
அவித்தை, அஸ்மிதா, ரகா , பயம், என்று பல வழிகளில் வருகிறது.
இவை வருகின்றன ? எங்கிருந்து வருகின்றன ? இவற்றை எப்படி கையாள்வது ?
தியானம் மூலம் இவற்றை கடந்து போகலாம் என்கிறார்.
எப்படி ?
நாம் நினைக்கிறோம் நமது மன சலனங்களுக்கு காரணம் வெளி உலகம் என்று.
கணவனோ மனைவியோ ஏதோ சொல்கிறார்கள். கோபம் வருகிறது. காரணம் அவர்கள் தானே.
நல்ல பொருளை பார்க்கிறோம். அது நமக்கு வேண்டும் என்று ஆசைப் படுகிறோம். அப்படி பார்த்தால், ஆசைக்கு காரணம் வெளியே உள்ள அந்த பொருள் தானே ?
போலீஸ் அராஜகம், கொடுமையான பாலியல் வன் முறை, பட்டினிச் சாவு, கௌரவ கொலை என்று பல விஷயங்களை கேள்விப் படும் போது ,கோபமும் வருத்தமும் வருகிறது அல்லவா. அதற்கு காரணம் அந்த வெளி நிகழ்வுகள்தானே .
இல்லை என்கிறார் பதஞ்சலி.
இந்த மன சலனங்களுக்குக் காரணம் நாம் தான்.
உள்ளே இல்லாத உணர்ச்சி எப்படி வெளியில் இருந்து வரும் ?
ஒரு கணம் சந்தோஷமாக இருக்கிறோம். ஏதோ ஒரு செய்தி வருகிறது. சந்தோஷம் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறது. வருத்தம் வந்து சேர்கிறது.
நமது கோபம், காமம், பொறாமை, வருத்தம், பயம் போன்ற மன கிலேசங்களுக்கு காரணம் நம் அடி மனதில் படிந்துள்ள எண்ணங்கள் தான்.
அவற்றை அறிய வேண்டும் என்றால், நாம் உள் நோக்கி போக வேண்டும்.
எப்ப , எந்த செயல் செய்தாலும், என்ன எண்ணங்கள் வந்தாலும், ஏன் செய்கிறோம், என்ன சிந்திக்கிறோம் , என்ன நினைவுகள் வருகிறது என்று சிந்திக்க வேண்டும். அந்த செயல் மற்றும் சிந்தனைக்கு என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டும்.
எளிய காரியம் இல்லை. நமக்குள்ளே அடுக்கடுக்காக எண்ணங்கள் , படிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு வயதிலும் நிகழும் நிகழ்வுகள், அவ்வப்போது சொல்லப் பட்ட செய்திகள், படித்த புத்தகங்கள் உள்ளே படிந்து கிடக்கின்றன.
நாம் வாழ்வது நமது வாழ்க்கை அல்ல....மற்றவர்களின் வாழ்க்கை.
நமது மனத்தில் , நம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், சமுதாயம் , படித்த புத்தகங்களின் ஆசிரியர்கள் என்று பெரும் கூட்டமே இருக்கிறது. இருந்து கொண்டு அதைச் செய், இதை செய், அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நமக்குத் தெரியாது. இந்த கும்பல் உள்ளே இருந்து நம்மை ஏவிக் கொண்டிருப்பது.
கீ கொடுத்த கடிகாரம் போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கீ கொடுப்பது மேலே சொன்ன கும்பல்.
தியானம் எப்படி செய்வது ?
http://yogasutrasimplified.blogspot.in/2017/12/211.html
No comments:
Post a Comment