Monday, September 11, 2017

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற

யோக சூத்திரம் - 1.35 - மன அமைதி பெற 




विषयवती वा प्रवृत्तिरुत्पन्ना मनसः स्थिति निबन्धिनी ॥३५॥

viṣayavatī vā pravr̥tti-rutpannā manasaḥ sthiti nibandhinī ॥35॥


viṣaya = விஷயங்களின்
vatī = உணர்வுகளை
vāt = மேலும்
pravrtti = அலைகளை, சலனங்களை
utpannā = உற்பத்தி செய்யும்
manasaḥ = மனதில் , அறிந்து
sthiti = நிதானமாக
nibandhanī = தொகுத்து

ஏதோ ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத வார்த்தைகளைப் போல இருக்கிறது அல்லவா ?

நாம் சேர்ப்போம்.


நமக்கு சில விஷயங்கள் பிடிக்கிறது. சில பிடிப்பதில்லை. சில பேரை கண்டால் சந்தோஷமாக இருக்கிறது. சிலரை நினைத்தாலே கோபமும் எரிச்சலும் வருகிறது. சில அனுபவங்கள் சுகமாக இருக்கிறது. சில வருத்தத்தை  கொண்டு வருகின்றன.


நல்லதோ, கெட்டதோ, சுகமோ , துக்கமோ எதுவாக இருந்தாலும் அவை மனதில்  அலைகளை கிளப்பி விடுகின்றன.

நல்லவை, சுகமானவை என்றால் அவை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று ஆசை பிறக்கிறது. இன்னும் அதிகம் வேண்டும் ஆசை பிறக்கிறது. ஒரு வேளை  மீண்டும் கிடைக்காதோ என்று கவலையும் பயமும் பிறக்கிறது.


கெட்டவை , தீயவை என்றால் அவை மீண்டும் வராமல் இருக்க மனம் ஆசைப் படுகிறது. வந்தால் என்ன செய்வது என்று யோசனை செய்கிறது. வரமால் எப்படி  காத்துக் கொள்வது என்று சிந்திக்கிறது.

எப்படி இருந்தாலும், அனைத்து விஷயங்களும், அனுபவங்களும் மனதில் எண்ண அலைகளை  தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றன.

சித்தம் கலங்கிக் கொண்டே இருக்கிறது. கலங்கிய சித்தத்தில் ஒரு தெளிவும் பிறக்காது.

சரி.

விஷயங்களையும், அனுபவங்களையும் விட்டு விட முடியுமா என்றால் அதுவும் முடியாது.

பின் என்னதான் வழி ? அனுபவிக்கவும் வேண்டும், ஆனால் அதனால் பாதிப்பும் இருக்கக் கூடாது என்றால் எப்படி முடியும் ?

முடியும். பதஞ்சலி வழி சொல்கிறார்.

"அனுபவங்களை அறிவதன் மூலம்"

என்கிறார்.

அது என்ன அனுபவங்களை அறிவதன் மூலம் ?

உங்களுக்கு தலை வலிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உடனே என்ன செய்வீர்கள் ? தலை வலி தைலம் இருந்தால் எடுத்து போடுவீர்கள். சில பேர்  கை பக்குவமாக ஏதாவது அரைத்து பத்து போடுவார்கள். சிலர் சூடாக ஒரு  காப்பி குடித்தால் சரியாகி விடும் என்று காப்பி குடிப்பார்கள். சிலர், தலையை இறுக்க துண்டால் கட்டுவார்கள்.

வழி எதுவாக இருந்தாலும், அந்த வலியில் இருந்து உடனடியாக விடுதலை பெற வேண்டும் என்பதே நோக்கம்.

வலியோடு போராடுவீர்கள். எப்படியாவது அதை விரட்டி விட வேண்டும், அதில் இருந்து விடுதலை அடைய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

சரி தானே.


மாறாக, இப்படி செய்து பாருங்கள் ஒரு முறை.

வலி எங்கே இருக்கிறது. எந்த இடத்தில் இருக்கிறது. எவ்வளவு அழுத்தமாக வலிக்கிறது, வலி விட்டு விட்டு வருகிறதா, அல்லது தொடர்ந்து இருக்கிறதா,  வலிக்கும் போது வேறு என்ன செய்கிறது என்று வலியோடு ஒன்றி இருங்கள்.  அதை விட்டு விலக வேண்டும், அதை விரட்டி அடிக்க வேண்டும் என்று நினைக்காமல். உங்கள் கவனம் முழுவதையும் அந்த வலியின் மேல் வையுங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள், வலி போகிறதோ இல்லையோ, அது உங்களை  சிரமப் படுத்தாது. வலி இருக்கும். ஆனால் அது உங்களை பாதிக்காது.


நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு வலியோடு போராடுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு அது வலிமை பெறும் . வலியோடு ஒன்றி இருங்கள். வலி போய் விடும்.

வலி மட்டும் அல்ல, மகிழ்ச்சியாக இருக்கும் போது , எது மகிழ்ச்சி தருகிறது, மகிழும் போது என்ன நிகழ்கிறது,  எது சந்தோஷத்தை தூண்டுகிறது என்று மகிழ்ச்சியைப் பற்றி  ஆராயுங்கள்.

நாளடைவில் துன்பமும் இன்பமும் வரும் ஆனால் அவை உங்களை பாதிக்காது. வந்தாயா, வா என்று , போகிறாயா போ என்று சொல்லும் பக்குவம் வரும்.

நாம் வேறு , நம் அனுபவம் வேறு என்று நாம் பிரித்து விடுகிறோம். நாமே அனுபவம் என்று ஆகும் போது அனுபவிப்பன் என்று யாரும் கிடையாது. எனவே அனுபவமும் கிடையாது.

அனுபவம் இல்லாத இடத்தில் மன சஞ்சலங்கள் வராது.

லட்டை வாயில் போட்டவுடன் கரைகிறதா ? சந்தோஷமாக இருக்கிறதா. ஒரு நிமிடம் நிறுத்தி யோசித்துப் பாருங்கள். எது சந்தோஷம் ? லட்டா ? வாயில் உள்ள சுவையா ? சுவை என்றால் அது எங்கே இருக்கிறது ? லட்டிலா ? நாக்கிலா ? மூளையிலா ? மனத்திலா ?

சிந்தித்துப் பாருங்கள். எங்கிருந்து அந்த இன்பம் வருகிறது ? வெளியில் இருந்தா ? உள்ளிருந்தா ? அல்லது இரண்டும் சேரும் ஒரு புள்ளியில்லா ? இரண்டும் கலக்கும் ஒரு புள்ளி என்றால் அது எது ? அது என்ன ?


அனுபவிக்கப் படும் பொருள்,
அனுபவிப்பவன்,
அனுபவம்

இந்த மூன்றும் ஒன்றாக கலந்து ஒரு புள்ளியில் நிற்கும். அதை அறிந்து கொண்டால், இன்பமும் துன்பமும் இல்லை.

" இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே" என்பார் மணிவாசகர்.

"ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்" என்பார் அதிவீரராம பாண்டியர் வெற்றி வேற்கையில் .


"அல்லும் பகலுமில்லாச்  சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்" என்பார் அருணகிரிநாதர்.

அல்லும் பகலும் என்றால் இரவும் பகலும் என்று அர்த்தம். உள் அர்த்தம் துன்பமும் (இரவு) இன்பமும் (பகல்) என்று பொருள்.

இரண்டும் அற்று சும்மா இருக்க வேண்டும் என்கிறார்.

வேதா கமசித்ர வேலா யுதன் வெட்சி பூத்ததண்டைப்
 பாதார விந்தம் அரணாக அல்லும் பகலுமில்லாச்
 சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
 போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.

அனுபவங்களோடு ஒன்றுங்கள்.

நல்ல சூரிய உதயத்தைப் பார்த்தால் "ஆகா என்ன அழகு " என்று நினைக்காதீர்கள்.  அந்த அழகோடு ஒன்றுங்கள்.

அந்த அழகும், அந்த  அழகு தரும் அனுபவமும் உங்களுக்குள் ஒன்றாகி விடும்.

சிந்தித்துப் பாருங்கள்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/135.html

No comments:

Post a Comment