Friday, September 8, 2017

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 4

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 4 


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்

முதல் வழி, நம்மை விட மகிழ்ச்சியாக உள்ளவர்களிடம் மகிழ்வோடு பழகுவது. அதாவது, நம்மை விட  உயர்தவர்கள் மேல் பொறாமை கொள்ளாமல் இருத்தல். 

இரண்டாவது, நம்மை விட தாழ்ந்தவர்களிடம் கருணையோடு இருத்தல். இரக்கம் இல்லை. கருணை.  கருனை என்பது அன்பு சார்ந்தது. 

மூன்றாவது, நல்லொழுக்கம் கொண்டவரை காணும்போது மகிழ்ச்சி.

இதுவரை பார்த்தோம். 

அடுத்தது நான்காவது, 

தீமைகளிடம் விருப்பு வெறுப்பு அற்று இருப்பது.  

விருப்பு இல்லாமல் இருக்கச் சொன்னால் , அது சரி. 

ஏன், தீமையை வெறுக்கக் கூடாது ?

நாம்  எதன் மேல்  நம் மனதைச் செலுத்துகிறோமோ அதை நாம் அடைகிறோம். 

நிறைய பேர் உடல் பருமனை குறைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் எண்ணம் முழுவதும் எப்படி பருமனை குறைப்பது, எதை சாப்பிட்டால் எடை குறையும்,  எந்த பயிற்சி செய்தால் உடல் எடை குறையும், என்ன குடித்தால் எடை குறையும் என்று எண்ணம் பூராவும் அதிக எடையின் மேலேயே இருக்கும். 

மெலிந்து இருந்தால் எப்படி இருக்கும், மெலிந்தால் எப்படி அழகாக இருப்போம், மெலிந்தால் எப்படி ஆரோக்கியமாக இருப்போம் என்று சிந்திக்க மாட்டார்கள். 

எடை குறையவே மாட்டேன் என்கிறதே, என்ன செய்தாலும் இந்த தொப்பை குறைய மாட்டேன் என்கிறதே  என்று பருமன் மற்றும் தொப்பையின் மேல் அவர்கள் கவனம் இருக்கும். 

இதில் கவனம் இருக்கிறதோ, அதையே நாம் அடைவோம். 

தீயவற்றை வெறுக்க வேண்டும் என்றால், அதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அது எப்படி செய்யப் பட்டது என்று தெரிந்து கொள்ள வேண்டும். 

இப்படி மனம் தீயவற்றில் நிலைத்தால் , நாளடைவில் நம்மை அறியாமல் அது நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்ளும். 

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற 
தீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார் 
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு 

இணங்கி இருப்பதுவும் தீது.

என்பார் ஒளவையார்.  தீயவற்றை பார்க்கக் கூடாது, கேட்கக் கூடாது, பேசக் கூடாது, சேர்ந்து இருக்கக் கூடாது. 

தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பார் வள்ளுவர். 

பதஞ்சலியைப் பொறுத்தவரை மனம் சலனம் அடையக் கூடாது. தீயவற்றைன் மேல் வெறுப்பு காட்டினால் , மனம் அதையே நினைத்து உழலும். 

தீயவற்றை நினைக்கும் போது மனம் சஞ்சலப் படும். எனவே, மனம் அமைதியாக இருக்க வேண்டுமா ?  

தீயவற்றைப் பற்றி விருப்பு வெறுப்பு இல்லாமல் இருங்கள். 

மேலும் சொல்கிறார். கேட்போம். 

http://yogasutrasimplified.blogspot.in/2017/09/133-4.html

No comments:

Post a Comment