Friday, August 18, 2017

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 1

யோக சூத்திரம் - 1.33 - மனச் சாந்தி பெற வழிகள் - பாகம் 1 


मैत्री करुणा मुदितोपेक्षाणांसुखदुःख पुण्यापुण्यविषयाणां भावनातः चित्तप्रसादनम् ॥३३॥

maitrī karuṇā mudito-pekṣāṇāṁ-sukha-duḥkha puṇya-apuṇya-viṣayāṇāṁ bhāvanātaḥ citta-prasādanam ॥33॥

மனம் அமைதி பெற என்ன செய்ய வேண்டும் ?

மனம் பல விதங்களில் அலைக் கழிக்கப்படுகிறது. துக்கம், சோகம், பயம், படபடப்பு,  விரக்தி, எரிச்சல், கோபம், காமம், பொறாமை, துவேஷம் என்று பலப் பல விதங்களில் மனம் அல்லாடுகிறது.

உடலை நோய் பிடிப்பதைப் போல, மனதை இவை பிடித்து ஆட்டுகின்றன.

இதனால் மனம் ஓயாத சஞ்சலத்தில் இருக்கிறது.

இதில் இருந்து எப்படி விடுபடுவது.

மிக நீண்ட பட்டியலைத் தருகிறார். 14 வழிகள் சொல்கிறார். அவை என்னனென்ன என்று பார்ப்போம்.

இவற்றில் ஒன்றோ, ஒன்றுக்கு மேலானவைகளோ உங்களுக்குத் தேவைப் படலாம்.

அவை என்னென்ன ?


maitrī =  அன்பு, நட்பு , அணுக்கத் தன்மை

karuṇā = கருணை

mudito = மகிழ்ச்சி, சந்தோஷமாக இருத்தல்

upekṣana = நடுவு நிலைமை

sukha = சுகம், ஆரோக்கியம்

duḥkha = துக்கம்

puṇya = புண்ணியம்

apuṇya = பாவம்

viṣayānam = சூழ்நிலை

bhāvanātaḥ = பயிற்சி, வளர்த்தல், பழகுதல்

citta = சித்தம்

prasādanam = தெளிவு, அமைதி, இணைந்திருத்தல்

தலையும் புரியல , காலும் புரியலையா ?


எதை எதோடு பொறுத்த வேண்டும் என்று தெரிந்து கொண்டால், சிக்கல் தீர்ந்து விடும்.

அன்பு மற்றும் நட்பை , மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தோடு சேருங்கள்.

சந்தோஷமாக இருப்பவர்களிடம் நட்பாக இருங்கள்.

யோசித்துப் பாருங்கள். கேட்க ரொம்ப எளிமையாக இருக்கும். செய்வது மிக மிக கடினம்.

சந்தோஷமாக இருப்பவர்களை கண்டால், நமக்குள் ஒரு பொறாமை எழும். என்ன பெரிய சாதித்து விட்டான் , இப்படி கிடந்து துள்ளுகிறான் என்று தோன்றும்.

இல்லாவிட்டால்,  எப்படி அவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறான், என்னால் மட்டும் முடியவில்லையே என்று ஆதங்கம் தோன்றும்.

இல்லை என்றால், அவனை விட நான் எந்த விதத்தில் குறைந்து விட்டேன், எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று சுய பரிதாபம் தோன்றும்.


இல்லை என்றால், எனக்கு மட்டும்  அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்து இருந்தால், நானும் தான் சாதித்து சந்தோஷமாக இருந்திருப்பேன் என்று நாம் சந்தோஷமாக இல்லாமல் இருப்பதற்கு ஒரு காரணம் கற்பிப்போம்.

நாம் யாரோடு நட்பு பாராட்ட விரும்புகிறோம் ? நம்மை விட தாழ்ந்தவனிடம், நம்மை விட பிரச்னைகள் அதிகம் உள்ளவரிடம், நம்மை விட சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் அதிகம் உள்ளவர்களிடம் நாம் நட்பாக இருக்கிறோம். "அவனை விட நாம் எவ்வளவோ தேவலை" என்று சந்தோஷப் படுகிறோம்.

மனம் அமைதி பெற வேண்டும் என்றால் நம்மை விட அதிகம் மகிழ்ச்சி உள்ளவர்களிடம் அன்பாக நட்பாக  இருக்கப் பழக வேண்டும்.  முதலில் அது கடினம் தான்.

அதற்கு ஒரே வழி, மனதில் உள்ள பொறாமை அகல வேண்டும்.

மகிழ்ச்சி என்பது பொருள்களில் இல்லை என்ற ஞானம் வர வேண்டும்.

நமக்கு இருப்பதை கொன்டு திருப்தியாக , சந்தோஷமாக வாழ பழக வேண்டும்.

இல்லை என்றால், நம்மை விட உயர்ந்தவர்களை காணும் போதெல்லாம் மனம் ஒரு படபடப்பை அடையும், நாமும் அவனை போல ஆக வேண்டும் என்று ஒரு உத்வேகம் பிறக்கும். எத்தனை பேரை நாம் முந்த முடியும். இந்த போட்டியில் நம்மால் வெல்லவே முடியாது. நமக்கு மிஞ்சி யாரும் இல்லை என்ற நிலையை அடைய முடியுமா ? முடியவே முடியாது.


அதுக்காக , ஒன்றும் செய்யாமல் முடங்கி சோம்பி கிடக்க வேண்டுமா ?

அதுவும் வேண்டாம்.

இருப்பதை கொண்டு நிம்மதியாக வாழப் பழக வேண்டும். நம்மை விட உயர்ந்தவர்களை கண்டால் பொறாமை கொள்ளாமல் அவர்களோடு அணுக்கமாக இருக்கப் பழக வேண்டும்.

நம்மை விட தாழ்ந்தவர்களிடம் நாம் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம். நம்மை விட உயர்ந்தவர்களிடமும் அன்பாக நட்பாக இருக்கப் பழகி விட்டால்  வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி தான்.

போட்டி இல்லை. பொறாமை இல்லை. அசூயை இல்லை. ஏக்கம் இல்லை.

இவை நீங்கும் போது மனம் தானாகவே அமைதி பெறும்.

மேலும் சிந்திப்போம்.

http://yogasutrasimplified.blogspot.in/2017/08/133-1.html

No comments:

Post a Comment