Tuesday, August 13, 2019

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும் - பாகம் 4

யோக சூத்திரம் - 2.50 - மூச்சும் மனமும்  - பாகம் 4


बाह्याभ्यन्तरस्तम्भवृत्तिर्देशकालसंख्याभिः परिदृष्टो दीर्घसूक्ष्मः॥५०॥

 bāhya-ābhyantara-sthambha vr̥ttiḥ deśa-kāla-sankhyābhiḥ paridr̥ṣṭo dīrgha-sūkṣmaḥ ॥50॥


bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

மூச்சை வெளியே, உள்ளே இழுத்து, நிறுத்தி செய்வது. இது இடம், காலம், பொறுத்து மாறுபடுகிறது. இது வெளிப்டையாகத் தெரியலாம் அல்லது சூட்சுமமாக இருக்கலாம்.

பிராணன் என்ற உயிர் சக்தி நம்மை செலுத்துகிறது என்பதை பார்த்தோம். அதை நாம் கண்கூடாகவும் அறிய முடிகிறது.

அந்த உயிர் சக்தி எந்த அங்கத்தில் அதிகம் செல்கிறதோ, அந்த அங்கம் தூண்டப் படுகிறது.  ஓடுகிறோம் என்றால், காலுக்கு அதிகமான உயிர் சக்தி தேவைப்படும். உயிர் சக்தி என்றால் பிராணவாயு மட்டும் அல்ல, நாம் உண்ணும் உணவில் உள்ள சக்தி எல்லாம் சேர்ந்துதான்.

இந்த உயிர் சக்தி அவயங்களில் வேலை செய்ய வேண்டும் என்றால், அதற்கு பிராண வாயு தேவை.

நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். நன்றாக உடற் பயிற்சி செய்து உடலை திடமாக வைத்திருங்கள். ஒரு நிமிடம் மூச்சை நிறுத்திப் பாருங்கள். உடல் பதறிப் போய் விடும். ஒரு வேலையும் செய்ய முடியாது. அனைத்தும் நின்று விடும்.

எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், ஒரு நிமிடம் மூச்சு விடாமல் இருக்க முடியாது. பயிற்சி செய்யலாம் ஒரு நிமிடமோ, இரண்டு நிமிடமோ மூச்சை அடக்க. அவ்வளவுதான் முடியும். மேலும், மூச்சை அடக்கி வித்தை காட்டினாலும், வேலை ஒன்றும் செய்ய முடியாது.

எனவே, புலன்கள் வேலை செய்ய, உயிர் சக்தி தேவை.

அந்த உயிர் சக்திக்கு, பிராண வாயு தேவை.

கவனமாக வாசியுங்கள். அடுத்த முடிச்சு இங்கே வருகிறது.

இந்த பிராண வாயு உடலின் எந்த பகுதிக்கு அதிகம் செல்கிறதோ, அந்த பகுதி முனைப்பாக செயல்படும்.

அனைத்து அவயங்களுக்கும் ஒரே மாதிரி சென்றால், அனைத்து புலன்களும் ஒரு புள்ளியில் நிற்கும்.

ஒரு குச்சியை எடுத்து நீள வாக்கில் உங்கள் ஆள் காட்டி விரலின் மேல் நிற்க வைக்கப் பாருங்கள்.  குச்சியின் நடுவில் நிறுத்தினால், குச்சி அங்கும் இங்கும் அசையாமல்  அப்படியே இருக்கும். கொஞ்சம் அந்தப் பக்க, அல்லது இந்தப்பக்கம்   மாற்றி வைத்தால், குச்சி கீழே விழுந்து விடும் அல்லவா?

அது போல, அனைத்து புலன்களுக்கும் சமமாக பிராண வாயு சென்றால், உடல் ஒரு புள்ளியில் நிற்கும். equilibrium என்று சொல்லுவார்களே அது.

இந்த பிராண வாயு அனைத்து அவயங்களும் ஒரே மாதிரி செல்லாமல் இருக்கக் காரணம், நாம் நம் உடலுக்கு தேவையான முழுமையான அளவு பிராண வாயுவை  சுவாசிப்பது இல்லை.

அதன் அளவு குறையும் போது , உடல் தானாகவே இருக்கின்ற அளவு பிராண வாயுவை அங்கங்களுக்கு பங்கிட்டு கொடுக்கிறது.

இப்படி சமச்சீர் இல்லாத பிராண வாயுவின் ஓட்டத்தால் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு புலன்கள் தூண்டப் படுகின்றன.

சமமாக எப்படி பிராணவாயுவை செலுத்துவது ?

இங்கு வருகிறது இந்த சுலோகம்.


bāhya - வெளிப்புறமாக
ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி
vṛtti - மாற்றங்கள்
deśa - இடம்
kāla - காலம்
saṃkhyā - வெளிப்படுத்துதல்
paridṛṣṭa - தெரிகிறது
dīrgha - நீண்ட
sūkṣma - குறைந்த, தெரியாத, நுண்ணிய

முதலில் பிராண வாயுவை முழுவதுமாக உள்ளே இழுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு. இழுத்து விட்டீர்களா ? அப்படியே நிறுத்துங்கள்.

ābhyantara - உட்புறமாக
stambha - நிறுத்தி

ஸ்தம்பம், கும்பம் என்று சொல்கிறார்கள். அதாவது, குடத்தில் நீர் முழுவதும் நிறைந்து இருந்தால், அது தளும்பாது. அது போல நுரையீரல் முழுவதும் பிராண வாயு நிறைந்து இருந்தால், மனம் தழும்பாது.

உட்புறமாக பிராண வாயுவை இழுத்து, நிறுத்த வேண்டும்.

நாம் எப்போதும் நம் நுரையீரல் நிறைய காற்றை உள் இழுப்பது இல்லை. நம் நுரையீரலின் பெரும்பாலான பகுதி உபயோகப் படமால் கெட்டு போய்க் கொண்டிருக்கிறது.

ஆழமாக மூச்சை இழுத்து பயிற்சி செய்ய வேண்டும்.

மூச்சை இழுத்தவுடன், விட்டு விடக் கூடாது. உள்ளே நிறுத்த வேண்டும். நம் இரத்தம், பிராண வாயுவில் நன்றாக குளிக்க வேண்டும். அந்த உயிர் சக்தியை அது  உடல் எங்கும் கொண்டு செல்லும்.

அடுத்தது,

bāhya - வெளிப்புறமாக
stambha - நிறுத்தி

மூச்சை வெளியே விட வேண்டும். விட்டவுடன் உடனே உள்ளே இழுக்கக் கூடாது. "நிறுத்தி" என்கிறார் பதஞ்சலி.  வெளியே விட்டவுடன், கொஞ்ச நேரம் நிறுத்த வேண்டும்.

bahya என்றால் வெளியே விடுவது.
ābhyantara என்றால் உள்ளே இழுப்பது 
stambhaஎன்றால் நிறுத்துவது 
vriti என்றால் செயல்படும் முறை.

இப்படி உள்ளே இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி செயல்படும் முறைக்கு பிராணாயாமம் என்று பெயர். 

சரி, உள்ளே இழுப்பது, வெளியே விடுவது, நிறுத்துவது என்று சும்ம்மா மொட்டையாக சொன்னால் எப்படி? எவ்வளவு நேரம் உள் இழுக்க வேண்டும், எவ்வளவு நேரம் உள்ளே நிறுத்த வேண்டும், எவ்வளவு நேரம் வெளியே விட வேண்டும், விட்ட பின் எவ்வளவு நேரம் நிறுத்தி வைக்க வேண்டும். அதெல்லாம் சொல்ல வேண்டாமா ?

சொல்லி இருக்கிறார். இந்த ஸ்லோகத்திலேயே சொல்லி இருக்கிறார். 

அது என்ன என்று அடுத்த பகுதியில் காண இருக்கிறோம். 


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-4.html



முதல் மூன்று  பகுதிகளை கீழே காணலாம்.

------------------------------------------------------------------------------
பாகம் 3

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-3.html

----------------------------------------------------------------------------------------------
பாகம் 2

https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-2.html
-------------------------------------------------------------------------------------------

பாகம் 1 ஐ நீங்கள் கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம்.


https://yogasutrasimplified.blogspot.com/2019/08/250-1.html

No comments:

Post a Comment