Saturday, June 24, 2017

பதஞ்சலியின் யோக சூத்திரம் - ஒரு அறிமுகம்

பதஞ்சலியின் யோக சூத்திரம் - ஒரு அறிமுகம் 


யோகம் என்றால் என்ன ?

யோகம் என்றால் என்ன என்பதைப் பற்றி பார்ப்பதற்கு முன், யோகத்தைப் பற்றி நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் என்று பார்ப்போம்.

எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரே ஒரு குறிக்கோள் தான் உண்டு - அது எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது.

துன்பப் பட வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா ? மாட்டார்கள்.

ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது ? துன்பம் ஏதோ ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கிறதே ? பணத் தட்டுப்பாடு,  வேலைப் பளு, வீட்டில் உறவுகளில் சிக்கல், மனச் சிக்கல் , என்று ஆயிரம் துன்பங்கள் வந்து கொண்டே இருக்கின்றனவே.

வேண்டுவது என்னவோ இன்பத்தைத் தான். ஆனால் பெரும்பாலான சமயம் துன்பத்தில் தான் உழல்கிறோம்.

ஏன் ?

பணம் உள்ளவனும் துன்பப் படுகிறான். பணம் இல்லாதவனும் துன்பப் படுகிறான்.

திருமணம் ஆனவனும் துன்பப் படுகிறான், திருமணம் ஆகாதவனும் துன்பப் படுகிறான்.

துன்பங்களை விடுத்து , எப்போதும் இன்பமாய் இருப்பது எப்படி ?

இன்பமும் துன்பமும் நம் அறிவினால் அறியப் படுவது.

இலட்சம் ரூபாய் இருந்தால் இன்பமா என்று கேட்டால், ஒன்றும் இல்லாதவனுக்கு   அது பெரிய இன்பம். கோடீஸ்வரனுக்கு அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.

இன்பமும் துன்பமும் அந்த இலட்ச ரூபாயில் இல்லை. நம் மனதில் இருக்கிறது.

லட்டு தின்பது இன்பமா ? பலருக்கு இன்பம். சர்க்கரை நோய் வந்தவனுக்கு துன்பம். இன்பமும் துன்பமும் லட்டில் இல்லை, உண்பவனிடம் இருக்கிறது.

ஆசை, பயம், சோம்பல், கோபம், காமம், பொறாமை, குழப்பம்,  வெறுப்பு, பற்று, என்ற பல மனம் சார்ந்த விஷயங்களால் துன்பம் வருகிறது.

இவற்றை மாற்றி, எப்படி இன்பமாய் இருப்பது ?

மனதை நம்மால் மாற்ற முடியுமா ?

அது நமது கட்டுக்குள் அடங்குமா ?

மனதை கட்டுப் படுத்த எவ்வளவோ பேர் முயன்று தோற்றிருக்கிறார்கள்.

பதஞ்சலி முடியும் என்கிறார்.


எப்படி ?

மனமும், உடலும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. தலையும் வாலும் போல.

மனதை நம்மால் நேரடியாக கட்டுப் படுத்த முடியாது. ஆனால் உடலை கட்டுப் படுத்த முடியும்.

உடலை கட்டுப் படுத்தினால், மனதை கட்டுப் படுத்த முடியும்.

ஆங்கிலத்தில் Reverse Engineering என்று சொல்லுவார்கள்.

உடலை ஒரு ஒழுங்கிற்கு (discipline ) கொண்டு வருவதன் மூலம் நாம் நம் மனதை வழிக்கு கொண்டு வர முடியும்.

மனம் வசப் பட்டால் , வாழ்க்கை வசப்படும்.

எப்படி என்று ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம்.

நீங்கள் எப்போதாவது சோகமாக இருக்கும் போது உங்கள் மூச்சு எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். அது மிகவும் மெல்லிதாக, லேசாக, மெதுவாக வந்து வந்து போகும். அதே சமயம், உங்கள் முதுகு சற்றே வளைந்து இருக்கும். 

அதே நீங்கள் சந்தோஷமாக இருக்கும் போது கவனித்துப் பாருங்கள், சற்று வேகமாக, கொஞ்சம் உள் இழுத்து அது பூராவும் உள்ளே செல்வதற்குள் மூச்சை வெளியில் விடுவீர்கள். முதுகு சற்று நேராகி , மார்பு சற்று விரிந்து இருக்கும்.

கவனித்துப் பாருங்கள்.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன என்றால்,

நீங்கள் உங்கள்  உடல் இருக்கும் நிலையை மாற்றினால், உங்கள் மன நிலை மாறிவிடும்.

உதாரணமாக, நிமிர்ந்து உட்கார்ந்து, , மார்பை சற்றே விரியச் செய்து, மூச்சை வேகமாக இழுத்து விட்டு கொண்டு, சோகமாக இருக்க முயற்சி செய்யுங்கள். முடியாது.

அதே சமயம், தலையை கவிழ்த்து கொண்டு, மார்பை சுருங்கச் செய்து, மூச்சை லேசாக விட்டு கொண்டு சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

முடியாது.

உடலின் நிலை மாறும் போது , உள்ளத்தின் நிலை மாறும்.

இது ஒரு சின்ன உதாரணம்.

உடலை, வாழ்வை எப்படி ஒரு கட்டுப்பாட்டோடு கொண்டு செல்வது என்று யோகா சொல்லித் தருகிறது.

யோகம் என்றால் இணைப்பது என்று பொருள்.

உடலையும், மனதையும் (புத்தியையும்) இணைப்பது யோகா.

இப்போதெல்லாம் யோகா என்றால் ஏதோ ஒரு உடற் பயிற்சி செய்வது என்று ஆகி விட்டது. சர்வதேச யோகா தினம் என்று கொண்டாடுகிறார்கள். யோகா என்பது உடற் பயிற்சி மட்டும் அல்ல.

உடலை, சிந்தனையை, மனதை கட்டுக்கோப்பாக வைக்கும் வழி அது.

யோகாவை ஒரு அறிவியல் சிந்தாந்தம் மாதிரி மிக மிக நுணுக்கமாக, எழுதி இருக்கிறார் பதஞ்சலி முனிவர்.

ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து போட்டு இருக்கிறார்.

நீங்கள் ஒவ்வொரு கூற்றையும், செய்து சோதித்துப் பார்க்கலாம். ஒரு விஞ்ஞானியைப் போல , யோகா என்பது யார் வேண்டுமானாலும் செய்து சரி பார்த்துக் கொள்ளலாம். நம்பிக்கை எல்லாம் தேவை இல்லை.

எப்படி நியூட்டனின் சித்தாந்தங்கள் வேலை செய்கிறதோ அது போல யோக சூத்திரங்கள்.

வாருங்கள், அந்த பிரம்மாண்டமான யோக கலையை பற்றி அறிந்து கொள்வோம்.















1 comment:

  1. மிக்க மகிழ்ச்சி ஐயா .. உங்கள் வலைதளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி

    ReplyDelete