Monday, June 26, 2017

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 2

யோக சூத்திரம் - 1.2 - சித்த விருத்தி நிரோதம் - பாகம் 2 




योगश्चित्तवृत्तिनिरोधः ॥२॥

yogaś-citta-vr̥tti-nirodhaḥ ॥2॥

யோகா சித்த விருத்தி நிரோதா 

சித்தம் என்பது இந்த உலகை அறிய உதவுவுகிறது என்று போன பிளாகில் பார்த்தோம். 

இந்த சித்தம் என்பது மனம், அறிவு, ஞாபகம், சிந்தனை என்ற இவற்றின் ஒரு தொகுதி. 

பொதுவாக நம் மனம் அல்லது சித்தம் என்பது 5 நிலைகளில் இருக்கிறது. 

முதலாவது - க்ஷிப்தா அல்லது சலனம் உள்ள மனம். அலை பாய்ந்து கொண்டே இருப்பது. குரங்கு போல அங்கும் இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். ஒன்றில் இருந்து மற்றதற்கு மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட ஒரு பொருளின் மேலே நிற்காது. 

சரண கமலாலயத்தை அரை நிமிட நேர மட்டில் தவ முறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டி என்பார் அருணகிரிநாதர். 

சரணகம லால யத்தை அரைநிமிஷ நேர மட்டில்
தவமுறைதி யானம் வைக்க …… அறியாத
சடகசட மூட மட்டி பவவினையி லேச னித்த
தமியன்மிடி யால்ம யக்க …… முறுவேனோ
கருணைபுரி யாதி ருப்ப தெனகுறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற …… குமரோனே


இப்படி அலையும் மனதை நிறுத்து என்று முருகன் உபதேசம் செய்தான் என்று கூறுகிறார்.

"சும்மா இரு சொல் அற என்றலுமே 
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே "

என்கிறார். 

சும்மா இருக்க முடியாது. மனம் அலைந்து கொண்டே இருக்கும். 

இது ஒரு நிலை. 

இன்னொரு நிலை - முத்தா அல்லது மந்த புத்தி. மந்த புத்தி என்பது எதையும் முடிவெடுக்காமல், எதையும் அறிந்து கொள்ளாமல் முழிப்பது. என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது. எதையும் ஒன்றுக்கு பத்து தடவை சொல்ல வேண்டும். மெதுவாகத்தான் புரியும். 


மற்றொரு நிலை - விக்ஷிப்தா அல்லது தடுமாறும் மனம். சரி என்று ஒன்றை நினைக்கும். அந்த பாதையில் போகும். சிறிது காலம் கழித்து , இது சரிதானா என்று தடுமாறும். பின் வேறு ஒரு வழியில் செல்லும். உறுதியற்ற தானம். நாலு நாள் உடற் பயிற்சி செய்வது. உடல் எடை குறையவில்லை என்றால் , இது சரியில்லையோ என்று அதை விட்டு விடுவது. தடுமாறும் மனம். 

இன்னொரு நிலை ஏகாக்ர அல்லது ஒரு முகப் பட்ட சிந்தனை. ஆங்கிலத்தில் concentration என்று சொல்லுவார்கள். சிந்தனை அங்கும் இங்கும் ஓடாமல், தடுமாறாமல், மந்தமாக இல்லாமல், ஒரு முகமாக இருப்பது. அசையாமல் ஒன்றையே பற்றி நிற்பது. 

கடைசியாக , நிரோதா அல்லது நிரோதம் என்பது சித்தத்தை வெல்வது அல்லது அதை நம் விருப்பப்படி செலுத்துவது. 

நிரோதம் என்பதற்கு நேரடி மொழி பெயர்ப்பு என்றால் கட்டுப்படுத்தவது, அடக்குதல், ஆளுதல் , தடை போடுதல் என்று வரும். யோகா மூலம் சித்தத்தை நாம் , நாம் விரும்பும் வழியில் செலுத்த முடியும்.. சித்தம் நம் கட்டுக்குள் வரும். இதை அடைவதுதான் யோகத்தின் நோக்கம். 

அலைபாயும் மனத்தை, தடுமாறும் மனதை, மந்த மனத்தை நம் கட்டுக்குள் கொண்டு வருவதுதான் யோகத்தின் நோக்கம். 

சித்தம் வசப்பட்டால் வாழ்க்கை வசப்படும். அது மட்டும் அல்ல, உலகே வசப்படும். 

யோக சித்த விருத்தி நிரோதா 

விருத்தி என்றால் செயல்பாடு. 

யோகப் பயிற்சின் மூலம், சித்தத்தை நாம் வென்றெடுக்கும் முயற்சி. 

2 comments:

  1. Replies
    1. சித்தம் வசப்பட்டால் வாழ்க்கை வசப்படும். அது மட்டும் அல்ல, உலகே வசப்படும்.

      Delete