Friday, June 30, 2017

யோக சூத்திரம் - 1.3 - தன்னைத் தான் காணும் -பாகம் 1

யோக சூத்திரம் - 1.3 - தன்னைத் தான் காணும் -பாகம் 1 



तदा द्रष्टुः स्वरूपेऽवस्थानम् ॥३॥

tadā draṣṭuḥ svarūpe-'vasthānam ॥3॥

tadā = அப்போது

draṣṭuḥ = பார்ப்பவன் , சாட்சி

svarūpe = தன் நிலையை, தன்மையை

avasthānam  = நிலை பெற்ற பின்



அப்போது, சலனமற்ற நிலையில் தன்னைத் தான் அறிதல் நிகழ்கிறது.

அப்போது ...அப்போது என்றால் எப்போது ?  போன சூத்திரத்தில் பார்த்தோமே, சித்த வ்ருத்தி நிரோதம் நிகழ்ந்த அந்த சமயத்தில்.

எப்போது மனமானது அலைபாயாமல் நிலையாக இருக்கிறதோ, அப்போது அது தன்னைத் தானே அறிகிறது.

அது என்ன தன்னைத் தானே அறிவது ?

கடலில் அலை அடிக்கிறது.

ஒவ்வொரு அலையும் தான் அலை என்று நினைத்துக் கொள்கிறது.  ஐயோ நான் அந்த அலையை விட சின்னதாக இருக்கிறேன், அந்த அலையை விட கொஞ்ச நேரம் தான் இருந்தேன் என்று கவலைப் பட்டு கொண்டு இருக்கிறது.

அலை, நிற்கும் போது தெரியும், அது அலை அல்ல கடல் என்று. அலைக்குத் தெரியாது தான் கடல் என்று.  அலை நிற்கும் வரை, எவ்வளவு சொன்னாலும் அந்த அலை புரிந்து கொள்ளாது. நான் ஒரு அலை, நீ ஒரு அலை, அவன் ஒரு அலை, என்றுதான் பார்க்கும்.

தெளிவான பார்வை வேண்டும் என்றால், சித்த விருத்தி நிரோதம் அடைய வேண்டும்.


draṣṭuḥ = பார்ப்பவன் , சாட்சி

பதஞ்சலி பார்ப்பவன் யார் என்று சொல்லவில்லை. அது ஆத்மாவா , உயிரா, கடவுளா  என்றெல்லாம் சொல்லவில்லை. பார்ப்பவன் யாரோ அவன் தன்னை அறிவான்  என்கிறார்.  Drastuh என்பது காணும் ஒன்று.

எப்படி சித்தம் என்பது அலை பாயும் தன்மை கொண்டதோ, drastuh  என்பது அலைபாயாமல்  உள்ளே நிலைத்து நிற்பது. அது அனைத்தையும் தெளிவாக காண்பது எப்போது என்றால், சித்தம் அலை பாயாமல் இருக்கும் போதுதான். குளத்தின் நீர் அலை பாயாமல் இருந்தால், குளத்தில் உள்ளே இருப்பதை மட்டும் அல்ல, குளத்தையும் தெளிவாக பார்க்க முடியும்.


உலகை பார்ப்பதில் நமக்கும் யோகிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன ?

எப்படி சித்தம், அதில் உண்டாகும் விருத்தி, அவற்றை தாண்டி பார்க்கும் drastuh என்பன இயங்குகின்றன என்று பார்ப்போம்.






No comments:

Post a Comment