Monday, December 28, 2020

Yoga Sutra - An introduction - Part 1

Yoga Sutra - An introduction - Part 1

Our mind is shaped by our past. More precisely by our childhood experiences. Our mind is continuously shaped by what our parents, teachers, the movies we saw, our friends, relatives, society etc. All these sources have a lot of conflicts within them. Most of the sources do not know what they are doing or why. They dump all their views into our brain. 


Our ability to form relationships with others, to confront various situations in life, ability to take a risk, explore, our open-mindedness, sense of judgement, etc.,  are defined by our mind. 


If our mind is not clear, if it is wavering, pulled all over, in different conflicting directions, then we get confused. We do not know what to do or how to do. We get scared, confused, frustrated, exhausted with life. 


To have clarity of thinking, the mind has to be clear. 


The mind should be void of all disturbances, all biases, fear, doubts, etc.


How to get such clarity, calmness, steadiness?


That is what the whole Yoga Sastra is about. 


Unfortunately, in today’s world, Yoga means exercise, fitness, flexibility, health etc. 


Those are by-products of yoga. The main objective of yoga is the tranquillity of mind, calmness and peacefulness of mind.  


With that single purpose, yoga sastra is created.


Should we explore this subject?

Monday, January 20, 2020

யோக சூத்திரம் - 3.1 - விபூதி பாதம் - தாரணை

யோக சூத்திரம் - 3.1 - விபூதி பாதம் - தாரணை 


இது மூன்றாவது அத்யாயம்.

விபூதி என்றால் சிறப்பான என்று பொருள். சிறப்பானவற்றை பெறுவது பற்றியது இந்த அத்யாயம்.

சிறப்பானது என்றால் என்ன?

சித்திகள் என்று சொல்ல்கிறார்கள். விசேஷமான சக்தி. யோகாவின் மூலம், சில விசேட சக்திகளைப் பெறலாம்.

அடடே இது சுவாரசியமாக இருக்கிறேதே...தண்ணி மேல நடப்பது, எதிர்காலத்தை அறிவது, இறந்தவர்களை பிழைக்க வைப்பது போன்ற சித்து வேலை எல்லாம் செய்யலாமா என்று நினைக்காதீர்கள்.  அதுவும் கிடைக்கலாம். ஆனால், அவை கிடைக்கும் என்று பதஞ்சலி சொல்லவில்லை. அது என்ன விசேட சக்தி என்று இந்த அத்யாயம் முடிவில் நீங்கள் உணர்வீர்கள்.

முதல் சூத்திரம் தாரணை பற்றியது.

தாரணை என்றால், ஒன்றை மனதில் வைத்து இருப்பது. ஒன்றை மட்டும் மனதில் நிறுத்து வைப்பது. குறிப்பாக சொல்லப் போனால், மனம் முழுவதும் ஒன்றை மட்டுமே நிறைத்து வைப்பது. வேறு ஒன்று வராமல் இருப்பது.

நம் மனம் பொதுவாகவே, ஒன்றை பற்றும், சிறிது நேரத்தில் அதை விட்டு விட்டு இன்னொன்றைப் பற்றும். ஒன்றை பற்றி அதையே மனம் முழுவதும் நிறைத்து  வைப்பது. அதற்கு பெயர் தாரணை.

மனதை ஒரு முகப் படுத்துவது (concentration) என்று ஒரு விதத்தில் சொல்லலாம்.

மனதை ஒரு நிலை படுத்தாமல் ஒன்றும் செய்ய முடியாது. மனம் ஒன்ற வேண்டும். இலயிக்க வேண்டும்.

அது எப்படி முடியும்?  மனதை எப்படி நிலை நிறுத்துவது?

வீட்டில் இருந்தால் அலுவலகம் நினைவு வருகிறது. அங்கு போனால், வீட்டு ஞாபகம் வருகிறது. சாப்பிட உட்கார்ந்தால்,  போக்குவரத்து நெரிசல், நேரத்துக்கு போய் சேர முடியுமா என்ற கவலை வருகிறது.

மனம் எதையும் அனுபவிப்பது கிடையாது.

மனதை ஒரு நிலை படுத்த மனதை பழக்க வேண்டும். ஒரு நாளில் வருவது அல்ல அது.  நீண்ட பயிற்சி வேண்டும்.

எப்படி பயிற்சி செய்வது?


அது தான் சூத்திரம்.

(deshah bandhah chittasya dharana)

தேச பந்த சித்தஸ்ய தாரண

தேச = இடம், பொருள்

பந்த = பிணைப்பு, தொடர்பு

சித்தஸ்ய = மனதில்

தாரண  = அதுவே தாரண


மனம் ஒன்றில் நிலை நிற்க வேண்டும் என்றால், முதலில் நாம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், அதே இடத்தில் இருந்து பயிற்சி செய்ய வேண்டும். இடம் மாறிக் கொண்டே இருந்தால் மனம் நிலை கொள்ளாது.

அடுத்தது, மனதை ஏதோ ஒரு பொருளின் மேல் செலுத்த வேண்டும். அது எதுவாக  வேண்டுமானாலும் இருக்கலாம். தீபம், ஓம் என்ற எழுத்து, சாமி படம், நடிகை படம்,  கோகோ கோலா பாட்டில், ஏதோ ஒரு தலைவர் படம்....எதுவாக  வேண்டுமானாலும் இருக்கலாம்.

மூன்றாவது, மனதுக்கும், அந்த பொருளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பந்தம், பிணைப்பு அது வேண்டும். அந்த பொருளுக்கும் உங்களுக்கும்  என்ன தொடர்பு ?  தொடர்பு இல்லாவிட்டால் மனம் அதைப் பற்றாது.

Cryogenic engine படத்தை கொண்டு வந்து வைத்தால், அது என்ன என்றே தெரியாது. அப்புறம் அல்லவா அதனோடு தொடர்பு கொள்ள முடியும்.

ஒரு இலட்டு படத்தை வைத்தால், என்னால் அதனோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.  அதன் நிறம், மனம், சுவை அடடா என்று மனம் அதிலேயே இலயிக்கும் , எனக்கு.

உங்களுக்கு எது பிரியமோ, அதை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் உங்கள் மனதை முழுவதும் செலுத்துங்கள். அது பயிற்சியின் முதல் படி.

yogasutrasimplified.blogspot.com/2020/01/31.html




Sunday, January 19, 2020

யோக சூத்திரம் - 2.55 - புலன் ஆளுமை

யோக சூத்திரம் - 2.55 - புலன் ஆளுமை 


tatah parama vashyata indriyanam

tatah = அவ்வாறாக

parama = உயர்ந்த

vashyata = மேலாண்மை, கட்டுப்பாடு

indriyanam = புலன்கள்


அவ்வாறு செய்தால் புலன்களை நம் கட்டுக்குள் கொண்டு வர முடியும். 

அவ்வாறு என்றால் எவ்வாறு?

முந்திய சூத்திரத்தில் கூறியவாறு, புலன்களை வெளி உலக தொடர்பில் இருந்து துண்டித்தால் அவை உள் நோக்கி திரும்பும்.

நாம், நம்மை அறிந்து கொள்வதில்லை. நம்மை விட்டு விட்டு உலகில் உள்ள அனைத்தையும் அறிந்து கொள்ள முயல்கிறோம்.

மேலை நாட்டு அறிவியல் என்பது வெளி நோக்கி செல்கிறது ; நமது ஆன்மிகம் என்பது உள் நோக்கி செல்கிறது என்று சொல்லுவார்கள்.

அவர்கள், நிலா, செவ்வாய் கிரகம், கடலின் ஆழத்தில் என்ன இருக்கிறது, எரிமலைக்குள் என்ன இருக்கிறது,  என்று வெளியே தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆன்மீகமோ, ஆத்மா, புத்தி, மனம், சித்தம், என்று உள் நோக்கி  சென்று கொண்டு இருக்கிறது.

ஒரு கால கட்டத்தில், நாம் ஆன்மீக தேடலை விட்டு விட்டு அறிவியல் பால் செல்லத் தொடங்கிவிட்டோம்.

பள்ளிகளில், கல்லூரிகளில் யோக சூத்திரம் பற்றி எங்கே சொல்கிறார்கள். சில தலைமுறைகள்  இப்படி ஒன்று இருக்கிறது என்று தெரியாமலே வளர்ந்து கொண்டு இருக்கிறது.

நாளடைவில் இவை மறைந்து போக வாய்ப்பு இருக்கிறது.

புலன்களை உள்ளே திருப்பி, அவற்றை நம் கட்டுக்குள் எதற்காக கொண்டு வர வேண்டும்?

அப்படி கொண்டு வந்தால் நமக்கு என்ன இலாபம்?

இதுவரை சொன்னது ஒரு விதத்தில் நம்மை தயார் பண்ணுவதற்காக.

இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம் என்பவை நம்மை தயார் செய்யும் படிகள்.

இவற்றின் பலன்களை, யோகத்தின் மகிமையை, அதன் பலனை இனி வரும் இரண்டு  அத்தியாயங்களில் சொல்லப் போகிறார்.

விடாமல் வந்து விடுங்கள்.

கிடைக்கிறதோ, இல்லையோ...என்ன என்றாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

யாருக்குத் தெரியும்...ஒரு வேளை உங்களுக்கு கிடைக்கக் கூட செய்யலாம்.

நாளை சந்திப்போமா?

https://yogasutrasimplified.blogspot.com/2020/01/255.html

Saturday, January 18, 2020

யோக சூத்திரம் - 2.54 - பிரத்தியாகாரம்

யோக சூத்திரம் - 2.54 - பிரத்தியாகாரம் 


sva-visaya-asamprayoge cittasya-svarupa-anukara ivendriyanam pratyaharah

sva = சுயமாக, தானாக

vishaya = விஷயங்கள், பொருட்கள்

asamprayoge = ஸம்ப்ரயாகே என்றால் சேர்ந்து இருப்பது. அ + ஸம்ப்ரயாகே
என்றால் பிரிந்து இருப்பது. விலகி இருப்பது. தொடர்பு அற்று இருப்பது.

chittasya = சித்தத்தில்

svarupe =  இயல்பில், வடிவில்

anukarah = ஒத்து இருக்கும்

iva = அதே போல

indriyanam =  இந்திரியங்கள்

pratyaharah =  உள்நோக்கி செல்லுதல்


இந்திரியங்கள் வெளி உலக விஷயங்களில் செல்லாமல், அவற்றின் தொடர்பை விட்டு இருந்தால், அவை உள்நோக்கி திரும்பும். 



இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம் என்ற இந்த நான்கு அங்கங்களும் வெளி உலக சம்பந்தப் பட்டவை.

எதை செய்கிறோம்,  எதை விலக்குகிறோம் , எப்படி உட்கார்கிறோம், எப்படி மூச்சை  இழுத்து விடுகிறோம் என்பதெல்லாம் வெளி உலக தொடர்பான  விஷயங்கள்.

அடுத்தது, பதஞ்சலி உள் நோக்கி செல்கிறார்.

சித்தம் அமைதியாக இருக்க வேண்டும். அதுதான் குறிக்கோள். மனம் எப்படி அமைதியாக இருக்கும்?  மனம் எப்படி சஞ்சலம் இல்லாமல் இருக்கும்?

அதற்கு முன்னால் , அது எப்படி சலனப் படுகிறது என்று பார்க்க வேண்டும்.

இந்த புலன்கள் வெளி உலக விஷயங்களை நமக்கு உள்ளே தள்ளிக் கொண்டே இருக்கின்றன.

டிவி பார்க்கிறோம், செய்தித் தாள் வாசிக்கிறோம். நண்பர்களோடு அரட்டை அடிக்கிறோம்.  போகிற வழியில் பலவற்றை பார்க்கிறோம், கேட்கிறோம், நுகர்கிறோம்.

நம் கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என்ற ஐந்து புலன்களும் செய்திகளை உள்ளே அனுப்பிக் கொண்டே இருக்கின்றன.

செய்தி உள்ளே போனவுடன், சித்தம் வேலை செய்யத் தொடங்குகிறது.

அடடா, இந்த வீடு நல்லா இருக்கே, ஹ்ம்ம்...இருந்தா அந்த மாதிரி வீட்டுல இருக்கணும்.

இந்த படம் இன்னிக்குதான் வந்துருக்கு. அடுத்த வாரம் போவோம்.

இந்த நகை நல்ல டிசைன் ஆ இருக்கே. வாங்குனா தேவலை.

இப்படி ஒவ்வொரு விஷயமும் நமக்கு உள்ளே சென்று சித்தத்தை தூண்டி விட்டுக் கொண்டே இருக்கின்றன. மனம் கிடந்து அலை பாய்கிறது.

இப்படி அலை பாயும் மனதில் உண்மை எங்கே தெரியும்.

அப்படினா, மனம் அலை பாயாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த புலன்கள், வெளி உலக விஷயங்களில் உள்ள தொடர்பை நிறுத்த வேண்டும்.

ஐயோ, அது ஒண்ணும் நடக்கிற காரியமா தெரியலையே. பாக்காம, பேசாம, கேக்காம, எப்படி இருக்கிறது? நாம் என்ன ஜடமா?  என்ற கேள்வி எழும்.

அது பதஞ்சலிக்குத் தெரியாதா?

அவர் சொல்கிறார், எப்போது புலன்கள் வெளி உலக தொடர்பை துண்டிக்கின்றனவோ, அப்போது அவை உள் நோக்கிச் செல்லத் தலைப்படும்.

உள்ளே என்ன நடக்கிறது என்று அறியத் தலைப்படும்.

நம்மை நாமே அறிந்து கொள்ள, அது முதல் படி.

புலன்களை வெளியே விட்டால் அது பாட்டுக்கு அலைந்து கொண்டே இருக்கும்.

அதை, வெளியே போவதை நிறுத்தினால் போதும், அது உள்ளே செல்லத் தொடங்கிவிடும்.

உள்ளே என்ன இருக்கிறது என்று நாம் அறியத் தொடங்குவோம்.

நாம் யார், ஏன் இப்படி இருக்கிறோம், நம் செயல்களுக்கு என்ன காரணம், என்ற உண்மைகளை அறிய ஆரம்பிப்போம்.

உள்ளே போவோமா?


https://yogasutrasimplified.blogspot.com/2020/01/254.html

Thursday, January 16, 2020

யோக சூத்திரம் - 1.1 - இப்போது யோக பயிற்சி

யோக சூத்திரம் - 1.1 - இப்போது யோக பயிற்சி 



अथ योगानुशासनम् ॥१॥

atha yoga-anuśāsanam ॥1॥

atha = இப்போது

yoga =  யோக

anuśāsanam =  பயிற்சி, ஒழுங்கு, முறை

"இப்போது யோக பயிற்சி "

பதஞ்சலியின் யோக சூத்திரத்தின் முதல் சூத்திரம் இது.

யோக சூத்திரங்களை படிப்பதற்கு முன், நாம் சிலவற்றை தெளிவு செய்து கொள்ள வேண்டும்.

இப்போதெல்லாம், யோகா என்றால் ஏதோ உடற் பயிற்சி என்று ஆகி விட்டது. ஆசனம், மூச்சு பயிற்சி இதுதான் யோகா என்று மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏதேதோ பேரில் யோகா நிலையங்கள் இருக்கின்றன.

ஆசனம், பிரணாயாமம் என்பது யோகாவின் ஒரு கூறு. அதுவே யோகா இல்லை.

யோகா என்பது மனம் சம்பந்தப் பட்டது. மூளை சம்பந்தப் பட்டது.

யோகா பற்றிய உங்கள் அபிப்பிராயம் எதுவாக இருந்தாலும் அதை முற்றிலுமாக  தூக்கி எறிந்து விடுங்கள். நீங்கள் நினைக்கும் எதுவுமே யோகா இல்லை.  பதஞ்சலியின் யோகாவை படித்து முடிக்கும் போது அது உங்களுக்குத் தெரிய வரும். இப்போதைக்கு,  யோகா என்றால் உடலை வளைப்பது,  ஆசனம் போடுவது, மூச்சை பழக்குவது என்பது இல்லை என்று மட்டும்  வைத்துக் கொள்ளுங்கள். டிவியில் வருவதை பார்த்து விட்டு, இதுதான் யோகா என்று  நினைக்கக் கூடாது.

பதஞ்சலியின் யோக சூத்திரம் கடல் போன்றது. மிக மிக அருமையான நூல். 

இந்த முன்னுரையோடு, யோகாவிற்குள் நுழைவோம்.

பெரும்பாலான மனிதர்கள் நிகழ்காலத்தில் வாழ்வது இல்லை. நிகழ் காலத்தில் இருக்கிறார்கள். ஆனால், இறந்த காலத்தைப் பற்றி கவலைப் படுகிறார்கள், அல்லது எதிர் காலத்தை பற்றி கனவு காண்கிறார்கள். நிகழ் காலத்தில் இருப்பதே இல்லை.

மிக மிக சிறந்த அறிவாளிகளுக்கு மட்டும் தான் நிகழ் காலம் என்று ஒன்று உண்டு. மற்றவர்கள் எல்லோரும், இறந்த காலத்திலோ அல்லது எதிர் காலத்திலோதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாளை என்ன ஆகும், நாளை என்ன சமைக்கலாம், நாளை அலுவலகத்தில் என்ன வேலை இருக்கிறது, அடுத்த மாதம் என்ன செய்ய வேண்டும், போட்ட பணம் கைக்கு  வருமா, இந்த வருடம் பதவி உயர்வு கிடைக்குமா, சம்பளம் உயருமா,  பெண்ணுக்கு திருமணம் ஆகுமா, பையனுக்கு வேலை கிடைக்குமா, பிள்ளை பிறக்குமா என்று எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து,  அந்த  ஏக்கத்தில், பயத்தில் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

வாழ்வது என்பதே கிடையாது. வாழப் போவதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு  இருக்கிறார்கள்.

எனவே தான், பதஞ்சலி சொல்கிறார்

"இப்போது"

இப்போது என்றால், இறந்த காலத்தையும் விட்டு விட வேண்டும். எதிர் காலத்தையும்  விட்டு விட வேண்டும். இந்த நொடியில் இருக்க வேண்டும்.

முயன்று பாருங்கள்.

இறந்த காலத்தையும், எதிர் காலத்தையும் பற்றி நினைக்காமல் ஒரு வினாடி  இருக்க முடிகிறதா என்று. மிக மிக கடினம்.

யோகா பயில வேண்டும் என்றால், முதலில் நிகழ்காலத்துக்கு வர வேண்டும். மனம்  அந்தக் காலத்துக்கும், எதிர் காலத்துக்கும் ஓடக் கூடாது.

நிகழ் காலத்தில் நிற்க வேண்டும். நிறுத்திப் பாருங்கள் தெரியும் அது எவ்வளவு கடினமான  செயல் என்று.

முதல் சூத்திரத்தில், முதல் வார்த்தையில் யோகா பிரச்சைனையின் ஆணி வேரைப் பிடித்து விடுகிறது.

அனுஷாசனம் என்றால் பயிற்சி (discipline). பயிற்சி என்றால் தொடர்ந்து செய்வது. ஏதோ கொஞ்ச காலம் செய்தோம். அப்புறம் விட்டு விடலாம் என்பதல்ல பயிற்சி. செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஏன் என்றால், யோகா என்பது மிக மிக ஆழமானது. போகப் போக போய் கொண்டே இருக்கும்.


யோகா பற்றி அறிந்து கொள்ள, அதை முயற்சி செய்ய தயாராகி விட்டீர்களா?

https://yogasutrasimplified.blogspot.com/2020/01/11.html

Wednesday, January 15, 2020

யோக சூத்திரம் - 2.53 - தாரணை

யோக சூத்திரம் - 2.53 - தாரணை 


धारणासु च योग्यता मनसः ॥५३॥

dhāraṇāsu ca yogyatā manasaḥ ॥53॥

dhāraṇāsu = மனதில் கொள்ள

ca = மேலும்

yogyatā = தகுதி

manasaḥ = மனம்

இவற்றின் மூலம் மனதில் கொள்ள பக்குவம் அடைய முடியும் 


கொஞ்ச நாள் ஆனதால், நமக்கு முன்பு படித்தது சற்று மறந்து இருக்கலாம். சற்று நினைவு படுத்திக் கொள்வோம்.

யோகத்தின் நோக்கம், மனதில் உண்டாகும் சலனங்களை (விருத்தி) நிறுத்தி, மனதை ஒருமுகப் படுத்தி, இறுதியில் சமாதி அடைவது. அது தான் நோக்கம். அதை அடைய 8 படிகளை பதஞ்சலி சொல்கிறார். அஷ்டாங்க யோகம்.

1. இயமம்,
2. நியமம்,
3. ஆசனம்,
4. பிராணாயாமம்,
5. பிரத்தியாகாரம்,
6. தாரணை,
7. தியானம்,
8. சமாதி

முந்தைய ப்ளாகுகளை ஒரு முறை  வாசித்துவிட்டு வாருங்கள்.

'இவற்றின் மூலம் மனம் தாரணை அடைய தகுதி பெறும்".

தாரணை என்றால் என்ன?

மனதில் அடக்குதல் என்று பொருள்.

அது என்ன மனதில் அடக்குதல்?

நம் மனதில் எதை வைத்தாலும் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்காது. முயன்று பாருங்கள். ஏதாவது ஒன்றை. எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்கள்   விருப்பமானவர், உங்கள் விருப்பமான கடவுள், சினிமா நடிகர், நடிகை, உறவினர், உணவு, நிகழ்ச்சி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.  கண்ணை மூடி, அதை மட்டும் நினையுங்கள் பார்ப்போம். ஒரு நிமிடம் கூட   அது உங்கள் மனதில் நிற்காது. அதில் இருந்து மற்றொன்று என்று தாவிக் கொண்டே இருக்கும்.

ஆசை ஆசையாக வாங்கிய புடவை, ஒரு முறை உடுத்திய பின், மனம் அதில் ஒன்றுவது இல்லை.  அடுத்ததை விரும்புகிறது.

கனவு கண்டு, செங்கல் செங்கலாக கட்டிய வீடு...சிறிது காலத்தில் சலித்து விடுகிறது.

மனம் எதையும் பற்றி நிற்பது இல்லை. ஓட்டை குடத்தைப் போல ஒழுகிக் கொண்டே இருக்கிறது.  என்ன போட்டாலும், காணாமல் போய் விடுகிறது.

இதுதான் மனச் சலனம். இதை நிறுத்த வேண்டும்.

உண்மையை அறிய வேண்டும் என்றால், மனம் ஒன்றை பற்றி நிற்க வேண்டும். தாரணை என்றால் உள்வாங்கிக் கொள்ளுதல். உள்ளே நிறுத்துதல்.  ஒன்றை மட்டும் உள்ளே வைத்து இருத்தல் என்று பொருள்.

மனம் ஒன்றை மட்டும் பற்றி நின்றால், அது பற்றிய தெளிவு பிறக்கும்.

"மனதில் உறுதி வேண்டும் " என்பான் பாரதி. ஒன்றைப் பற்றினால் , அதில் இலயிக்க வேண்டும்.

அது வருவதற்கு, அதற்கு முன்னால் சொன்ன படிகளை தாண்டி வர வேண்டும்.

மனதுக்குள் ஒன்றை மட்டும் நிறுத்தி வைத்தால், என்ன கிடைக்கும்?

அடுத்த சூத்திரத்தில் பார்ப்போம்.


https://yogasutrasimplified.blogspot.com/2020/01/253.html

Tuesday, September 10, 2019

யோக சூத்திரம் - 2.52 - திரை விலகி

யோக சூத்திரம் - 2.52 - திரை விலகி 


கோவிலுக்கு போய் இருக்கிறீர்களா? ஒவ்வொரு பூஜை நேரத்துக்கு முன்னும், ஸ்வாமிக்கு திரை போட்டு இருப்பார்கள். உள்ளே அபிஷேகம் அலங்காரம் எல்லாம் நடக்கும். குறிப்பிட்ட நேரத்தில், பெரிதாக மணி அடித்து, திரை விலகுவார்கள். அதே சமயத்தில், உள்ளே தீபாராதனை நடக்கும். ஸ்வாமியை நாம் காண முடியும்.

கன்னத்தில் போட்டுக் கொண்டு வந்து விடுவோம்.

இந்த நிகழ்வு என்ன சொல்ல வருகிறது?

சுவாமி உள்ளே இருக்கிறார். தீபம் எரிகிறது. நமக்குத் தெரியவில்லை. காரணம், திரை மறைக்கிறது. திரையை விலக்கினால், தீப ஒளி பிரகாசமாகத் தெரியும்.

நமக்குள்ளும் ஒரு தீபம் எரிந்து கொண்டு இருக்கிறது. அதன் வெளிச்சம் வெளியே தெரிவது இல்லை. காரணம் திரை போட்டு மறைத்து இருக்கிறது.

என்ன திரை?

என்ன வெளிச்சம் ?

நமது உடம்பில் இல்ல பிராண சக்தியானது சதா சர்வகாலமும் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒன்று இல்லாவிட்டால் மற்றொன்றை பற்றிக் கொள்கிறது. ஆசை, பயம், தேவை, பொறாமை, காமம், நடுக்கம், பசி, தாகம், என்று பல விதமான  உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, அது அலைந்து கொண்டே இருக்கிறது.  ஒரு நொடி கூட அது நிற்பது இல்லை.

இந்த ஓட்டம் தான் திரை. இந்த ஓட்டம் இருக்கும்வரை, அந்த சுடர் ஒளி வெளியே தெரியாது.

ஓட்டம் நின்றால் , அமைதி பிறந்தால், திரை விழும். வெளிச்சம் தெரியும்.

இதுதான் சிதம்பர இரகசியம். கோவில் பூஜையின் உள் அர்த்தம்.

பிராணனை நிறுத்துவது சாதாரண காரியம் இல்லை.

அருணகிரி நாதருக்கு முருகன் சொன்ன இரண்டே வார்த்தை உபதேசம்

"சும்மா இரு".

செம்மான்  மகளை திருடும் திருடன் 
பெம்மான் முருகன் பிறவான் இறவான் 
"சும்மா இரு" சொல் அற என்றலுமே 
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே 

என்பார் அருணகிரி.

"சும்மா இருப்பது" மகா மந்திரம். செய்ய முடியாத ஒன்று.

திருமுருகாற்றுப் படையில், நக்கீரர் சொல்கிறார்

"சேண் விளங்கு அவிர் ஒளி" என்று

உயரத்தில், உன்னதமான இடத்தில் எல்லோரும் காணும்படி பிரகாசிக்கும் ஒளி என்கிறார்.


உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு,
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி,
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள்,
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை,
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்


நம்மை அறியாமலேயே நாம் ஒவ்வொரு நொடியும் ஏதோ ஒன்றினால் செலுத்தப் பட்டுக் கொண்டே இருக்கிறோம்.

"நான் முடிவு செய்து அதைச் செய்தேன் " என்று நாம் நினைக்கலாம். அப்படி முடிவு செய்ய  தூண்டியது எது?

சரி, அந்த ஓட்டத்தை எப்படி நிறுத்துவது?

அதற்குத்தான் பிராணாயாமும் அதன் நாலு படிகளும். அவற்றை செய்வதன் மூலம்,  பிராணனின் இந்த திக்கற்ற ஓட்டம் நிற்கும்.

அப்படி நின்றால், உள்ளே உள்ள ஒளி வெளிப்படும்.

"நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள் ஒளி பெருக்கி "

என்பார் மணிவாசகப் பெருந்தகை.

உள்ளே உள்ள ஒளி பெருகும்.

அப்படி ஒளி வீசிய ஆள் யாராவது உண்டா என்றால், "ஆம், இராமன் மேனியில் இருந்து  ஒளி வீசியது" என்கிறார்.

வெய்யோன் ஒளி, தன் மேனியின், விரி சோதியின், மறைய
பொய்யோ எனும், இடையாளொடும், இளையானொடும், போனான்!
மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான்!

சூரிய (வெய்யோன்) ஒளி, இராமனின் திருமேனியில் இருந்து புறப்பட்ட ஒளியில் மங்கி விட்டதாம்.

சரி, இது எல்லாம் இருக்கட்டும். இதுக்கும், பதஞ்சலியின் யோக சூத்திரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்....


சூத்திரம்


tatah ksiyate prakasha-avaranam ||52||
ततः क्षीयते प्रकाशाअवरणम् ॥५२॥

tataḥ kṣīyate prakāśa-āvaraṇam ॥52॥

உண்மையான உள் ஒளியை மறைத்து இருந்த திரை விலகும் 


tataḥ = அதன் பின். அதாவது, பிராணாயாமம் செய்த பின்
kṣīyate = மறைந்து விடும்
prakāśa = பிரகாசம், ஒளி
āvaranam = திரை, தடுப்பு


ஒளி என்றால் அப்படியே ஒளி என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.

ஒளி என்றால் தெளிவு, உண்மை, அறிவு, ஞானம் வெளிப்படும் என்று கொள்வது சாலப் பொருந்தும்.

இன்னும் கூட விரித்துச் சொல்லலாம்....

வாசகர்களின் சிந்தனைக்கு கொஞ்சம் விட்டு விடுகிறேன்....

https://yogasutrasimplified.blogspot.com/2019/09/252.html